உங்களுக்கு தைரியம்னா என்னன்னு தெரியுமா? பயப்படாததுமாதிரி நடிக்கறதுதான் அப்படின்னு நம்ப அண்ணாத்தே கமலு குருதிப்புனல்ல சொல்லுவாரு பார்த்திருக்கீங்களா? அது அப்படியே சரின்னு வச்சிப்போம். ஆனா பயம்னா என்னன்னு என்னைக்காவது யோசிச்சிருக்கீங்களா? இந்த கேள்விக்கு ஆயிரம் விடைகள் இருக்குங்க! எல்லாத்தையும் எடுத்துப்போட்டு அலசி ஆராய்ந்து பிரிச்சி மேய்ந்து கடைசியா என்ன கிடைக்குதுன்னு பார்த்தா அதுவும் ஒரே வார்த்தைதாங்க. அறியாமை!! அதுதாங்க பயம்!
என்ன உதாரு ரொம்ப விடறானேன்னு பார்க்கறீங்களா? எல்லாம் ஒரு அனுபவம்தாங்க! மனசுக்குள்ள பெரிய பிஸ்த்துன்னு நினைப்பு இல்லைன்னாலும் தெரிஞ்சதை சொல்லறதுல்ல தப்பில்லைதானுங்களே? எனக்கு இந்த பேய் பிசாசெல்லாம் இருக்கா இல்லையான்னு தெரியாதுங்க! நம்பிக்கையும் இல்லை. கல்யாணமாகி 2 வருடங்கள் ஆனதுக்கப்புறமும்! ஆனா கல்யாணத்துக்குப்பிறகு டார்வின் கொள்கைல முழுநம்பிக்கை உண்டு..("T.Nagar போத்தீஸ்க்கு போலாம்னா ஏன் கொரங்கு மாதிரி முழிக்கறீங்க...?!") அதுனால அதப்பத்தியெல்லாம் பயமே இல்லை. ஆனா பயப்படுறவங்களைப்பார்த்தாதான் நமக்கு கொஞ்சம் பேஜாருங்க! விசயம் ஒன்னுமே இருக்காது! ஆனா அவிங்க விடற அலப்பரைல நமக்கு ஜன்னிவந்துரும்! இப்படித்தான் பாருங்க காலேஜில இருந்தப்ப(படிக்கறப்பன்னு சொல்ல எனக்கே கூச்சமா இருக்கு! ) பலநாள் இரவு ஜாகையை ஹாஸ்டல்லயோ இல்லை வெளில பசங்க எடுத்திருக்கற வீட்டுலயோ போட்டுர்றது நம்ப நல்ல பழக்கவழக்கங்கள்ள ஒன்னு! பின்ன? நடுராத்திரில வீட்டுல போய் காலிங்பெல் அடிச்சு எங்க அண்ணன் முறைக்க, எங்க அப்பா துப்ப, அம்மா பொலம்பிக்கிட்டே சாப்பாடு எடுத்துவைக்கன்னு எல்லாத்தையும் எழுப்பிவிட்டு அவிங்க தூக்கத்தை கெடுக்கறது கெட்டபழக்கமா இல்லையா? அதனால SKP மெஸ்ஸுல ஃபிரண்டு அக்கவுண்டுல நாலு இட்லி, ஒரு முட்டைதோசை, ஒரு லூசு(அதாங்க முட்டைய முழுசா வேகாவிடாம பெப்பரு, உப்பு, கொஞ்சம் சின்னவெங்காயம், போட்டு கொழகொழன்னு கிளரி சின்ன கப்புல தருவாங்களே! அப்பிடியே வாயில கவுத்துக்கிட்டு ஒரு தபா கொதப்பிக்கிட்டு முழுங்குனா சும்மா நச்சுன்னு இருக்கும்! என்ன கொஞ்சநேரத்துக்கு ஒருபய பக்கத்துல வந்துபேசமாட்டான். கப்பு தூக்கும்ல! (இதுக்கெல்லாம் சேர்த்து இப்போ கொலஸ்ட்ரால் குறைக்கறதுக்காக பெங்களூரு அதிகாலை குளிருல மப்பளும் ஜெர்கினும் போட்டுக்கிட்டு தீவிரவாதி கணக்கா நடக்கறது தனிக்கதை! )
சரிங்க.. மேட்டருக்கு வரலாம். இந்த மனப்பிராந்தி இருக்கு பாருங்க! அதை மொத்தமா காய்ச்சி மனசுல ஊத்தி பயத்தை ஏத்திவிடுறதே கூட இருக்க புண்ணியவானுங்கதான்! எங்க கூட விஜயன்னு ஒருத்தன் நல்லா செவப்பா கொழுக்மொழுக்னு கரண்கபூர் கணக்கா படிச்சானுங்க. பய கொஞ்சம் பார்க்க ஸ்மார்ட்டா இருந்தாலும் எங்க பொகையெல்லாம் அவன் போடற கடலையை பார்த்தாதான் வரும். அவனவன் புள்ளைங்க வரபோற நேரமெல்லாம் பார்த்து இடம் பொருள் ஏவல்லெல்லாம் அலசி ஆரய்ஞ்சு பயங்கர சதித்திட்டமெல்லாம் தீட்டி கடலைபோட காத்துக்கிட்டு இருக்க இவன் just like that அப்பப்ப அங்கங்க அப்படி அப்படியே மானாவாரியா மகசூல் பார்த்துக்கிட்டு இருந்தா எவனுக்குத்தான் பொகை வராது? இத்தனைக்கும் அவன் என்ன பேசுவான்னு நினைக்கறீங்க? "ஏம்ப்பா.. ரெக்கார்டெல்லாம் முடிச்சிட்டையா? நேத்தைக்கு ஏன் பச்சை சுடிதார்ல வந்த? 5 புள்ளி கோலம் போடறது எப்படி? இதயத்தை திருடாதேல அந்த பொண்ணு பாவம்ல!" இப்படி சில கேள்விகளைக்கேட்டுட்டு அவிங்க பேசறதை கேட்டுக்கிட்டே இருப்பான். கடலை போடறதன் பிரம்மசூத்திரம் காதுகுடுத்து கேக்கறதுலதான் இருக்குன்றது அந்த பயலுக்கு அன்னைக்கே தெரிஞ்சிருக்கு. நமக்கு இன்னைக்கு வரைக்கும் வெளங்கலை! அவன் ஒரு விசயத்துல மட்டும் வீக்கு! ஒடம்புக்கு ஒன்னுன்னா அப்படியே அலறிடுவான்! ஹாஸ்டல்லா ரெகுலரா ஃபேசியல் செஞ்சி Fair&Lovly போடறவன் அவன் ஒருத்தன் தான்னா பார்த்துக்கங்க! எப்படிடா அவனை கவுக்கறதுன்னு நாங்க அலைஞ்சதுல இந்த ஒரு பாயிண்ட்டுதான் ஒர்க்அவுட் ஆகும்போல தோணுச்சு! வெய்யக்காலத்துல பயலுக்கு வேர்க்குரு வந்துருச்சு! அவன் வேற ரொம்ப கலரா? அடிச்சது எங்களுக்கு லக்கிபிரைஸ்! அன்னைக்கு நைட்டு "டேய்... முதுகுல என்னடா புள்ளி புள்ளியா?" அப்படின்னு ஆரம்பிக்க அவன் "வேர்க்குருடா.. நைசில் போட்டா சரியாகிடும்"னு சொல்ல ஒருத்தன் "எனக்கென்னவோ அம்மை மாதிரி தோனுதுடா..."ன்னு பத்தவச்சிட்டு வந்துட்டான்! அதுக்கப்பறம் 10 நிமிசத்துக்கு ஒருத்தனா அவன் ரூமுக்கு போய் "மாப்ள.. எங்க காட்டு.. எனக்கென்னவோ இது அம்மை மாதிரிதான் தோனுது. வேர்க்குரு இன்னும் சின்னதா இருக்கும்" ன்னு கலந்து அடிக்க 5 பேரு எங்க கடைமைய முடிக்கறதுக்குள்ள பய அரண்டுட்டான்! ஒரு பத்துபேரு குரூப்பா அவன் ரூமுக்கு போயிட்டோம். "இப்படித்தான் சின்ன வயசுல எங்க அண்ணனுக்கு அம்மை வந்து.." அப்படின்னு அவனவன் இல்லாத கதையெல்லாம் சொல்லிச்சொல்லி பய மொகத்தை பேஸ்த் அடிச்சாப்பல ஆக்கறதுக்கே மணி 11 ஆயிருச்சு. அம்மைக்கு என்னென்ன பண்ணனும்னு ஒரு லிஸ்ட்டு போட்டோம்! ஒருத்தனை ரூம் புல்லா தண்ணி ஊத்திக்கழுவி க்ளீன் பண்ணச்சொல்லி மத்தவங்க ரூம்ல இருந்த எல்லா சாமி படங்களையும் அவன் ரூம்க்கு கொண்டுவந்து ஒரு குட்டிகோவிலை ரெடி செஞ்சோம். கிடைச்ச விபூதி குங்குமம் எல்லாத்தையும் சாமி படங்க மேல தூவி ரூமையே பராசக்தி வழிபாடுமன்றம் ரேஞ்ச்சுல கொண்டுவர்றதுக்குள்ள மத்த ரெண்டுபேரு அவனை நடுராத்திரி 12 மணிக்கு பச்சைத்தண்ணில முக்கியெடுத்து இடுப்புல துண்டோட கிடுகிடுன்னு நடுங்க கூட்டிகிட்டு வந்தாங்க! அதுக்குல்ல ஒருத்தன் எங்கயோ போய் அம்மன் கேசட்டு ஒன்னை பிடிச்சுக்கிட்டு வர டேப் ரிக்கார்டர்ல அம்மன் பாட்டு அலறுது! புட்பால் கிரவுண்டை தாண்டி இருக்கற வேப்பமரத்து கிளையையே ஒருத்தன் உடைச்சுக்கிட்டு வர வேப்ப இலையை கொத்துக்கொத்தா பிரிச்சு அவன் கட்டில் பூரா பரப்பி ரூம் வாசப்படி ஜன்னல் எல்லாம் கட்டிவிட்டு அவனை படுக்க வைச்சோம்! அவன் ரூமுல இருக்கறப்ப சீரியசா முகத்தை வைச்சுக்கிட்டு இருப்போம். சிரிப்பை அடக்கமுடியலைன்னா 5 ரூம் தள்ளி ஓடிவந்து உருண்டுபொரண்டு சிரிச்சிட்டு திரும்பவும் அவன் ரூமுக்கு போய் அப்புராணி போல ஒக்கார்ந்துக்கிட்டு அம்மை பத்தின எங்க Phdய ஆரம்பிக்கறதுன்னு அன்னைக்கு நைக்கு முழுக்கு ஹாஸ்டல்ல ஒரே திருவிழாதான்! பய விடிய விடிய கொழம்பி கொழம்பி நெஜமாலுமே அம்மை வந்தாப்புல ஆகிட்டான்! காலைல 8 மணிவரைக்கும் இதை மெய்ன்டெய்ன் பண்ணறதுக்குல்ல எங்களுக்கே போதும்போதும் ஆகிடிச்சு! அதுக்கப்பறம் எல்லாரும் கூடி நின்னு உண்மையை சொல்லி சிரிச்சதுல அவன் முகத்தை பார்க்கணுமே! அப்படியும் நம்பாம அவன் டாக்டரை போய் பார்த்து அது வேர்க்குருன்னு சொன்னப்பறம்தான் அமைதியானான்! அதுக்கப்புறம் அவன் எங்களை துரத்தி துரத்தி அடிச்சது எங்க விழுப்புண் கதைகள்ல ஒன்னு. ஆனா இந்த சதிலயும் எங்களுக்கு தோல்விதான்! பரிதாபமா முகத்தை வச்சிக்கிட்டு இந்த கதையையே 50ம் மேல புள்ளைங்ககிட்ட சொல்லி( "How sad yar! ச்சே...ரொம்ம்ம்ப பாவம்பா நீ..") கடலையா வறுத்தெடுத்துட்டான்!
மனப்பிராந்தி இப்படி ஒரு வகைன்னா பெருசுங்க வழிவழியா சொல்லி வர்றதுல இருக்கற மூடநம்பிக்கை(ரொம்ப பெரிய வார்த்தையோ!? ) இன்னொன்னு. பேய், பிசாசு, ஆவிங்கறது இதுல ஒன்னு. இதெல்லாம் இருக்கா இல்லையான்னு தெரியாதுங்க.. ஆனா செத்தவிங்க கூட பேசலாம். ஆவிங்களை மீடியம் வழியா கூப்பிடலாம்னு சொல்லறதைத்தான் என்ன சொல்லறதுன்னு தெரியலை! இப்படிதாங்க நான் சென்னைக்கு வேலைக்கு வந்த புதுல எங்க கூடப்படிச்ச ஃபிரண்டு ஒருத்தன் ஆவிங்க கூட பேசலாம்னு ஒய்ஜா போர்டுன்னு ஒன்னு கொண்டுவந்தான். வெள்ளிக்கிழமை சாயங்காலமா 7 மணிக்கு மெரினா பீச்சுக்கு போறதை விட்டுட்டு இதுல உட்கார்ந்தோம். ஆரம்பத்துல இருந்தே இது டுபாக்கூருன்னு நான் அலப்பரை செஞ்சுக்கிட்டே இருந்தேன்! ஆன ஒரு பய நம்பலை! ரூம்ல இருந்த சாமி படத்தையெல்லாம் எடுத்து ஓரமா வச்சிட்டு(ஜோ கழுத்துல இருந்த சிழுவை உட்பட..) ரூம் புல்லா இருட்டாக்கிட்டு ஒரே ஒரு மெழுகுவத்திய பத்தவச்சிட்டு ஒய்ஜா போர்டு முன்னால 4 பேரு உட்கார்ந்தானுங்க! போர்டு சுத்தியும் ABCDயும்...123ம் நாலு பார்டர்ல எழுதியிருந்தது. ஆவிங்களுக்கு மொழிப்பிரச்சனையே இல்லை போல! Globalaization! எல்லா ஆவிங்களும் இங்கிலீசுலயே பதில் சொல்லுமாம். போர்டுக்கு நடுவுல 1 ரூபா நாணயம் ஒண்னை வச்சி அதுமேல ரெண்டுபேரு ஆட்காட்டி விரலை வச்சிட்டு மனசுக்குல்ல ஆவியக்கூப்பிட்டு வேண்ட ஆரம்பிச்சாங்க! 10 நிமிசம் ஆச்சு! காசு நகர்ற மாதிரி தெரியலை! விரலு வச்ச மீடியம் சரியில்லைன்னு இதுக்கு விளக்கம் வேற! இதுதான் சான்சுன்னு அதுல ஒருத்தனை கெளப்பிட்டு நான் மீடியமா உட்கார்ந்துக்கிட்டேன்! ரெண்டு பேரும் காசுமேல விரலை அழுத்தாம மென்மையா வைக்கனுமாம். காசு நகர ஆரம்பிச்சுட்டா,அது போற போக்குலயே நாமளும் விரலைக்கொண்டு போகனுமாம்! "வாங்கடி வாங்க" ன்னு மனசுல நெனச்சிக்கிட்டு நானும் ஒரு 5 நிமிசம் மனசுல வேண்டிக்கிட்டு மெதுவா காசை இப்படியும் அப்படியும் நகத்த ஆரம்பிச்சேன்! பசங்க "ஆவி வந்துருச்சு.. வந்துருச்சி"ன்னு பரபரன்னு குசுகுசுப்பா பேசிக்கறாங்க. நானும் முகத்தை சீரியசா மாத்திக்கிட்டு காசை நேரா Y கிட்ட கொண்டுபோனேன். ஆவி கன்பார்மா வந்துருச்சாம். எனக்கு எதுத்தாப்புல விரலை வைச்சுக்கிட்டு இருந்தவன் வேர்த்துப்போய் முழிக்கறான். நான் மெதுவா காசை நகர்த்துனா அதுபோன போக்குல அவனும் வெரலை கொண்டுவரான். அப்பறம் ஆவி மீடியம் எங்க ரெண்டுபேரு விரலு மூலமா காசை நகர்த்தாம வேற என்ன செய்யும்? அதுக்கப்பறம் அலப்பரைதான்! கேட்ட எல்லா கேள்விகளுக்கும் உடனடி பதில்கள்!
வந்திருக்கற பெரியவர் உங்க பேரு என்ன?
D-U-R-A-I-S-A-M-Y - (எங்க தாத்தா பேருங்க! )
நீங்கள் இறந்து எத்தனை வருடங்கள் ஆகுது?( மரியாதையோட கேக்கறாங்களாம்! )
20
உங்க கூட யாரெல்லாம் இருக்காங்க?
சுப்பு(யாருக்குத்தெரியும்?), காமராஜ், நேரு! (எங்க பாட்டி ஆவியத்தவிர மத்தவிங்க எல்லாம்! )
அவங்க கூப்பிட்டா வருவாங்களா?
வேகமா காசை நகர்த்தி "N-O "! (ஆவிக்கு கோவம் வந்திருச்சாம்!
இப்படியே கதை ஒரு 10 நிமிசத்துக்கு போச்சுங்க. அதுக்கப்பறம்தான் கூத்து! பர்சனல் கேல்விகளா வந்து விழுகுது! எனக்கு தெரியாதா இவனுங்க ஹிஸ்டரி! பூந்து விளையாடிட்டேன்!
"நான் டிகிரி எப்போது முடிப்பேன்?"
4 YEARS (23 அரியரை வேற எப்ப முடிக்கமுடியும்?)
"எனக்கு எப்ப கல்யாணம்?"
3 வருசம்
"பொண்ணு யாருன்னு தெரியுங்களா?"
Y-O-U K-N-O-W A-L-R-E-A-D-Y
ஒய்ஜா போர்டு கொண்டுவந்தவன் கேட்ட கேள்விதான் இது! விடுவனா?
"பொண்ணை நான் பார்த்திருக்கனுங்களா?"
"Y-E-S Y-O-U-R C-L-A-S-S-M-A-T-E"
பயங்கர அதிர்ச்சிங்க அவனுக்கு! இருக்காதா பின்ன?
"அவங்க பேரு சொல்ல முடியுங்களா?"
"G-E-E-T-H-A"
பய அதிர்ச்சில செத்துட்டான். இன்னும் கொஞ்ச நேரம் விட்டிருந்தா அவனே மேலோகம் போய் ஒய்ஜா போர்டு மூலமா பதில் சொல்ல வந்திருப்பான்! அந்த கீதா வேற யாரும் இல்லைங்க. இவனுக்கு பிடிக்கவே பிடிக்காத இவனை லவ் பண்ணலாம்னு பலமுறை தூது விட்டு இவன் தலைகீழா நின்னு தப்பிச்சி வந்த பொண்ணோட பேரு! இப்படிப்பட்ட தாங்க முடியாத அதிர்சிகரமான தகவல்களோட அன்னைக்கு எங்க ஆவிகளுடனான கலந்துரையாடல் முடிஞ்சது! அதுக்கப்பறம் ஒரு வாரம் கழிச்சு "நான் தாண்டா காசை வேணும்னே நகர்த்தினேன்" அப்படின்னு சொன்னாலும் ஒரு பய நம்பணுமே! "போடா சும்பை.. அன்னைக்கு நீ வெளிரிப்போய் உட்கார்ந்திருந்தது எங்களுக்குத்தான் தெரியும்"னனுங்க! இதுக்கு மேல என்ன சொல்ல? இன்னைக்கு அவனுக்கு ரம்யான்னு வேற ஒரு பொண்ணோட கல்யாணம் ஆனதுக்கப்பறமும் இதை சொன்னா திரும்பவும் யோசிக்கறானே தவிர நான் சொல்லறதை எவன் நம்பறான்? அன்னைக்கு எனக்கு ஒன்னும் ஆகலையான்னு கேக்கறீங்களா? அந்த அரையிருட்டுல அமைதியா ஒருமணிநேரம் இருந்ததுல எனக்கே ஒருமாதிரி ஆகி நைட்டு ஒன்னுக்கு போறதுக்குக்கூட பயந்துபோய் போகாம படுத்திருந்த்தேன்! ஒருவேளை ஆவிங்க பேரை வைச்சு விளையாண்டதுல நெஜமாவே ஆவிங்க இருந்து கோவமாகி என்னை அடிச்சிருச்சின்னா??? என்னதான் அது என் செல்லத்தாத்தா ஆவியா இருந்தாலும்!?
இந்த அறியாமை மேட்டரு இன்னொன்னு சொல்லறேன் கேளுங்க! போட வாரம் நைட்டு வழக்கம் போல என் வீட்டாரு "செல்வி"லயும் நான் என் மடிக்கணினிலையும் மூழ்கியிருக்க ஹால்ல விளையாண்டுக்கிட்டு இருந்த என் பொண்ணு சந்தோசமா "ஹீய்.. ஹீய்"னு கத்த ஆரம்பிச்சா! என்னடான்னு போய்பார்த்தா முதுகுத்தண்டு சில்லிட்டுப்போச்சுங்க! ரெண்டாவது மாடில இருக்கற எங்க வீட்டுக்குள்ள ஜன்னல் வழியா சும்மா ரெண்டடி நீளத்துக்கு கருகருன்னு ரெக்கையோட ஒரு வவ்வால்! உடம்பு ஒரு எலி சைசுக்கு இருக்கு. வயசான கிழட்டு வவ்வால் போல பறக்கப்பாக்குது முடியலை! அப்பறம் செல்வியாவது ஒண்னாவது? வீடே அலறுது! என் புள்ளையைத்தவிர! அவ ஏதோ புது விளையாட்டுசாமன் போலன்னு தாவித்தாவி புடிக்கறதுக்கு போறா! பேட்மேன் படம்னும் ஜியாஃரபி சேனல்னும் நிறைய வவ்வால் கதைகளை பார்த்திருந்தாலும் நேர்ல பாக்கறதுக்கு என்னன்னே புரியாத ஒரு பயம்! அருவருப்பு! லைட்டை எல்லாம் அணைச்சுட்டா வெளில பறந்துரும்னு அணைச்சா, அது நேரா கெளம்பி ஒரு ரவுண்டு பறந்துட்டு லைட்டு எரியற பாத்ரூமுக்குள்ள போயிருச்சுங்க! கொதிக்கற சட்டில இருந்து எரியற நெருப்புல விழுந்தாமாதிரி நெலமை எங்களுக்கும் அதுக்கும்! வீட்டுல ஒரே ஆம்பளை நாந்தான்! தப்பிக்க வழியே இல்லை! மெதுவா பாத்ரூம் கதவுல ஒளிஞ்சுக்கிட்டு எட்டிப்பார்த்தா நடுநாயகமா டைல்ஸ்மேல இறக்கையை விரிச்சி ரெண்டடிக்கு படுத்திருக்கு! எலி மாதிரியான மூஞ்சை இப்படியும் அப்படியும் திருப்பி பறக்கறதுக்கு பாக்குது! முடியலை! கையில பிடிச்சா வெளீல விடமுடியும்? பயங்கர ஐடியா யோசிச்சு கொஞ்சம் தண்ணியை தரைல ஊத்துனேன்! அது சடார்னு கெளம்பி லைட்டை சுத்தி ரெண்டு ரவுண்டு பறந்துட்டு முடியாம டாய்லெட்ல விழுந்துருச்சு! என்ன பண்ணறதுன்னு தெரியலை! ஒரே செகண்டுதான் யோசிச்சேன்! டபார்னு பாய்ஞ்சுபோய் டாய்லெட் லிவரை இழுத்துவிட்டுட்டேன். அவ்வளவுதான். 10 செகண்டுல காணாமப்போயிருச்சு! அதுக்கு அப்பறமும் சந்தேகமா ரெண்டு பக்கெட்டு தண்ணியை பிடிச்சு ஊத்தி மொத்தமா ஜலசமாதி ஆக்கியாச்சு!