முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நினைவுகளைத் தொடுதல்...


ந்தப் பயணம் அவசரகதியாய் ஒரு மாதம் முன்பாக மட்டுமே திட்டமிட்டது தான். என்றாலும் கிளம்புவதற்கு ஒரு வாரமாகவே என் முகத்தில் படர்ந்து பூத்துக்குலுங்கிய தேஜசை.. சரி... தம்பாக்குல சிரிக்கும் வழியலை வீட்டார் கண்டுகொண்டு நமட்டுச் சிரிப்போடுதான் என்னை கையாண்டு கொண்டிருந்தனர். பசங்களுக்கே என் வழியல் பின்பான பம்மலை பார்த்து கொள்ளச்சிரிப்பு. வீட்டம்மா தான் விமான நிலையத்துக்கும் கொண்டு வந்து விட்டார். அறிவுரை வேற... ”அந்த லூசு ராமாட்டம் இருக்காம அப்படியே சிங்கப்பூரு ப்ளைட்டு புடிச்சு போயிருய்யா.. பழைய நெனப்புல இங்கன ரிடர்ன் ஆகிறாதிங்க..”றதென்ன... மகள் "யம்மோவ்.. அப்பா மட்டும் அப்படியே போயிட்டாருன்னா எனக்கு ஐபேடு வாங்கித்தரனும் ஆமா..”ங்கறதென்ன... அதைக்கேட்டுட்டு மவன் அப்பங்காரனை பார்சல் கட்டி அனுப்பப் பாக்கறாளுங்கறதைக் கூட புரிஞ்சுக்காம ”அப்படின்னா எனக்கு ஏர்பாடு...”ன்னு அடம் புடிக்கறதென்ன... ங்கொப்புரான... குடும்பமா ஓட்டுறாய்ங்களாம்! அண்ட்ராயர் பேமிலி என்னிக்கும் ஆய்போனுகளை தொடாதுங்கறது தெரிஞ்சிருந்தாலும் பிட்டைப் போட்டு பாக்கறாங்களாம். நானும் ஒரு வீராப்புல ”அப்படித்தான் மக்கழே ஆவப்போவுது.. அடுத்த வருசம் எல்லோரும் சிங்கைக்கு சம்மர் டூருக்கு குடும்பமா வரனும்..”னு கேட்டுக்கிட்டு எல்லோரையும் ஹஃகிட்டு எமிரேட்ஸ் ஏறிட்டேன்.

துபாய் வரைக்கும் 14 மணிநேர பயணம். வைச்சிருக்கான் நூத்துக்கணக்குல படம். தேடுதனுல மாட்டுச்சு 96. கிடைச்ச ஐட்டங்களை எல்லாம் தின்னுக்கிட்டே மூனுமுறை முழு படத்தையும் அழுதமானிக்கு சிரிச்சமேனிக்கு வழிஞ்சபடிக்கு பார்த்தேன். அப்பறம் பாட்டுகளை மட்டும் திரும்ப பலமுறை ஓட விட்டேன். அப்பறம் இறங்கறதுக்கு ஒரு மணி முன்ன க்ளைமாக்ஸை மட்டும் ஒரு டஜனுக்கு மேல ஃப்ரேம் ஃப்ரேமா பார்த்து மண்டைல ஏத்திக்கிட்டேன். இருட்டுல வேர்த்துக்கின கண்களை தொடச்சிக்கினே திரும்பத் திரும்ப பேசுற நீ ரேஞ்சுக்கு திரும்பத் திரும்ப தேய்ச்சு 96ஐ JO ஆக்கிட்டு துபாய்ல இறங்கி கண்கள் எரிய சென்னை வண்டி புடிச்சு அசதி தாக்க தூங்கி எந்திருச்சா மீனம்பாக்கம். விட்டு வெளிய வருகையில் பாடி அப்படியே ப்ரேம் புடிச்சுவைச்ச கேமராக்காரன் ராமாட்டம் ஆகியிருக்க அது கோவிந்த் வசந்தாங்கற ஜீரால ஊறி நாஸ்டால்ஜியா நவதுவாரங்களிலும் வழிய மண்டைக்குமேல கொசுவத்தி சுத்த படிச்ச காலேஜு இருக்கும் கோவைக்கு பயணம்.

இருந்தது ஏழே நாட்கள் தான். வந்ததும் 25 வருச சில்வர்ஜூப்ளிக்கு மட்டும்தான். கிடைச்ச நேரத்துக்குள் மத்த ஏற்பாட்டாளார்களுடன் சேர்ந்து காலேஜ் விசிட்டு, பழைய டீச்சருங்களுக்கு பத்திரிக்கை, திருப்பூருக்கு டிசர்ட் அடிக்க, பங்கேற்பாளர்களுக்கு கேடயம் வாங்க, சாயந்தர நிகழ்வுக்கு அட்வான்ஸ் கொடுக்க, மைக்செட்டு ஆளைப் புடிக்க, விருந்துக்கு மெனுபோடன்னு மரண ஓட்டம். உடம்பு ப்ளைட்டுல தேத்துன எனர்ஜிக்கும் பழைய மக்களைக் கண்ட குதூகலத்துக்கும் சேர்த்துவைச்சு ஓரவராட்டம்! அந்தக்காலத்துல எங்கூட ஓரியாடுனவனுங்க எல்லாம் வந்து வந்து கட்டிக்க வயசாவறாதுல மறதிங்கறதுதான் இருக்கறதுலயே பெஸ்ட்டுலேன்னு நாங்களே சிலாகிச்சுக்கிட்டம்.

விழா அன்னிக்கு 96 பேரு பல நாடுக பல ஊர்கள்ல இருந்து சேர்ந்திருந்தோம். எங்க காலேஜ் பஸ்சையே இன்னத்த ப்ரிண்சி கிட்ட கேட்டு அதுலயே அன்னைக்கு போலவே ஆட்டம் பாட்டம்னு சவுண்டு கெளப்பிக்கிட்டு போய்ச் சேர்ந்தோம். ஒரு கிலோமிட்டரு முன்னாடி இருந்தே வெடிகள போட்டுக்கிட்டு பேண்டு செட்டும் தாரைதப்பட்டைகளும் அடிச்சுக்கிளப்ப குத்தாட்டமா ஆடிக்கிட்டு கல்லூரிக்குள்ள எண்ட்ரி. பின்ன அன்னைக்கு படிக்கற பசங்களா இருந்திருந்தா ரீஜண்ட்டா போகலாம். ஆட்டமா ஆடி சீப்பட்ட இடத்துக்கு குத்தாட்டம் இல்லாம எப்படி? இங்கன படிச்சு உய்ந்ததில் எப்படியோ வாழ்க்கைல நின்னுட்டம்லேன்னு பின்ன எப்படி இதை விட சிறப்பா வெளிப்படுத்த? ரெண்டு பக்கமும் இன்னைக்கித்த மாணாக்கர் நின்று வரவேற்க.. ”டியர் தம்பி தங்கைகளா.. நாங்க இந்த இடத்தை விட்டு வெளிய போனப்ப நீங்கெல்லாம் பொறக்கவே இல்லை...”ங்கற பிட்டைப்போட்டு அவங்க முகத்துல ”அங்கிள்ஸ்... அப்படின்னா இன்னுமாடா நீங்க திருந்தல...”ங்கற பீதிய கெளப்பி அப்பறம் சம்பிரதாய க்ரூப்பு போட்டோ, பழைய ஆசிரியர்களோடு அளவளாவுதல், அன்னிக்கு பிட்டடிக்க ஸ்மித்திங் செஞ்சுக்கொடுத்த லேப் அட்டெண்டர்களுக்கு நினைவுப் பரிசளித்தல், தாளாளரோடு ஒரு மணி நேர மீட்டிங் ( ”சமூகத்துக்கு ஏதாச்சு நல்லது செய்ங்கய்யா..” ) கடைசியா நாங்கெல்லாம் இன்னைக்கு என்ன ஆணி பிடுங்கறம்னு சொல்லிங்னு முடிச்சு சாயந்தர விழா ஹோட்டலுக்கு வர நாலாயிருச்சு பாத்துக்கங்க.

நாந்தான் மைக்மோகன் அன்னிக்கு. அஞ்சுமணி நேரம் நிகழ்சி காம்ப்பயரிங். எங்களை விட்டுட்டு போன 7 பேருக்கு நினைவஞ்சலி செலுத்திவிட்டு ( வைரமுத்துவின் ”ஜென்மம் நிறைந்தது..” பாடல்.. மனச புழிஞ்சிருச்சு ) பிறகு ச்சும்மா எல்லாத்தையும் பழைய நினைவுகள்ல புழிஞ்செடுத்தது நல்ல அனுபவம். என் ட்ரங்குப்பொட்டில சேர்த்து வைத்திருந்த அனைத்து பொக்கிசங்களையும் எடுத்துட்டு போயிருந்தேன். அந்தக்கால புகைப்படங்கள், நெகட்டிவ் ரோல்கள், கடிதங்கள், கல்லூரி அனுப்பிய அப்பனைக்கூட்டியா நோட்டிசுகள், டீச்சர்ஸ் அனுப்பிய ஆப்செண்டு லெட்டர்கள், அரியர் எக்சாம் ரசீதுகள், நண்பர்களின் ஹால்டிக்கெட்டு புகைப்படங்கள்னு... நிகழ்ச்சிகளுக்கு நடுவில் நண்பர்களுக்கு அவர்களது அந்தக்கால பாஸ்போர்ட் சைஸ் படங்களை கொடுத்து மகிழ்வித்தேன். எனக்கு மிகப்பிடிச்ச ஜஸ்ட் எனக்கு அஞ்சுவருச சீனியர் டீச்சருக்கு 27 ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதி அனுப்பிய மார்க்லிஸ்ட்டு போஸ்ட்கார்டை நீங்க எனக்கனுப்பிய லவ்லெட்டருன்னு அவருக்கே கொடுத்து ஷாக்களித்தேன். 25 ஆண்டுகளுக்குப்பின் அவரை இன்னும் இன்னும் பிடித்துப்போனது. அன்னைக்குப் புடிச்ச க்ரஷ் பெண்ணோடு திரும்பவும் 25 ஆண்டுகளுக்கு பிறகு அதே போஸில் படியில் நின்றபடிக்கு புகைப்படம் எடுத்துக்கொண்டேன். இதுபோக எத்தனையெத்தனை நண்பர்களின் கட்டியணைப்புகள் இந்த நாட்களில்?

கல்லூரி வாழ்க்கைக்கு பிறகு ஒரு மாதிரியான உள்ளொடுங்கி ஆகிப்போனவன் நான். இரட்டை முகம். எவ்வளவுக்கு எவ்வளவு நண்பர்கள் மட்டுமே வாழ்வென்று ஆடினேனோ அவ்வளவுக்கு எல்லாத்தையும் ஒதுக்கிவிட்டு தனிமையில் இருப்பதும் குருட்டாம்பட்டை சிந்தனையும் என ஆகிப்போனது வாழ்வு. என்னை கலைகூத்தாடியாக பார்த்த யாருக்கும் என் உள்ளொடுங்கித்தனத்தை புரிந்துகொள்ள ஏலாது. என்னை ஒரு அமுக்கானாக பார்த்தவர்களுக்கு நான் இப்படியெல்லாம் ஆடியிருப்பேனு சொன்னாலும் நம்பிக்கை வராது. வாழ்க்கையின் கசப்புகள் சிலரை புடம் போட்டு அதற்கு பரிசாக மனிதரை கையாளும் திறனை அளிக்கிறது. சிலரை உறவுகளில் இருந்து விடுபட்ட விட்டேத்தியாக மாற்றி மனிதரை கையாளத் தெரியாத உள்ளொடுங்கியாக அழுத்திவிடுகிறது.

தினம் அலுவலக ரீதியாக பலரிடம் கை குலுக்குபவன் தான். அவைகளில் பல நம்பிக்கைக்கு உரியவையாக இருந்தாலும் எல்லாவற்றிலும் ஒரு கொடுக்கல் வாங்கல் உண்டு. குடும்பத்தார் தவிர கடைசியாக எப்பொழுது யார் என்னை கட்டி உச்சி முகர்ந்தார்கள் என நினைவில்லை. ஆனால் சந்தித்த ஓவ்வொரு பயலும் தொந்தி இடிக்க வேர்வை கசகசக்க சொட்டை டாலடிக்க அழுகை பீறிட இறுக்க கட்டிக்கொண்டார்கள். 25 வருடத்தில் வந்த தோற்ற மயக்கங்களை வென்ற பழைய நினைவுகளின் வீச்சு. பொம்பளையாளுகளும் கூட கொடுத்த ஹஃக்கில் எந்த தயக்கமும் இல்லை. அவளுக எல்லோருக்கும் பயபுள்ளைக கல்லூரிக்கே போயிவிட்ட வயசு. அன்னைக்கே மெச்சூரிட்டியான ஆளுங்க இன்னைக்கு மட்டும் இல்லாமல் எப்படி? எந்த தீண்டலிலும் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லை, நேசத்தைத்தவிர.

ஆனால் எனக்கு இந்த பயணத்தில் வேறொரு ஆசை இருந்தது. வேலை ரீதியாக வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களது பெற்றோர்களோடு இந்த நாட்களில் முடிந்தவரை தங்கி இருப்பது. ஏறக்குறைய 6 நாட்களும் நண்பர்களது வீட்டில்தான் தங்கினேன். கொள்ளை மகிழ்ச்சி அவர்களுக்கு. எங்களுக்கே 46 ஆகிவிட்ட நிலையில் அவர்களெல்லாம் எழுபது எண்பதுகளில். சிலருக்கு ஒத்தைப்புள்ளை. அன்றைக்கு அவர்கள் பிழைப்பு நிமித்தமாக கிராமத்தை விட்டு டவுனுக்கு வந்தவர்கள். இன்றைக்கு நாங்கள் பிழைப்பு நிமித்தமாக அதையே அவர்களுக்கு செய்திருக்கிறோம். திரைகடலோட்டத்தில் என்றைக்கும் தீர்க்க இயலாத பிரச்சனை. ஆதங்கங்களை சொன்னால் புள்ளை சுணங்கிருவானோங்கற நிலையில் அதைக்காட்ட இயலாத வாழ்வு. ஒரு பெற்றோர் வீட்டில் அவர்கள் மகிழ்வுடன் ஆக்கிப்போட்ட உணவை அவர்களோடு சிலவேளைகள் சேர்ந்துண்டேன். ஒரு மாலையில் கோவிலுக்கு அழைத்துச்சென்றேன். கோவிலுக்கே வராத அந்தப்பா வெளிப்பிரகாரத்தில் அமர்ந்திருக்க பிரசாதத்துக்கு மட்டுமே படியேரும் நான் பின்னே வர அந்தம்மா அத்தனை மகிழ்வோடு சுற்றிவந்தது ஆனந்தம். ஒன்றாக அமர்ந்து ஆஞ்சநேய பக்தர் கொடுத்த சக்கரைப்பொங்கல் உண்டோம். இன்னொரு அப்பாம்மாவை சென்னை சில்க்ஸ்க்கு கூட்டிப்போய் புடவையும் சட்டையும் வாங்கிக்கொடுத்தேன். அடுத்து ஹரிபவனில் நல்ல பிரியாணியும் கொத்துபரோட்டாவும். இன்னொரு அம்மாவுக்கு கான்சர் ஆரம்ப நிலை ட்ரீட்மெண்ட் ஓடிக்கொண்டிருந்தது. பார்த்த நொடியில் உள்ளங்கைகளுக்குள் என் கைகளை பொதிந்தபடி சில நிமிடங்கள் ஏதும்பேசாமல் அழுதார். அமைதியாக அமர்ந்திருந்தேன் என்ன பேசவென தெரியாமல். கடைசியில் எனக்கும் வெடித்து விட்டது. நாங்கள் வேண்டியதை வென்றெடுக்கும் திறனில்லாமல் கிடைத்ததில் ஒட்டிப்பிழைப்பதை நேர்மையாக அழுகையினூடே ஒப்புக்கொண்டேன். இன்னொரு அப்பா அந்திமக்காலத்தில். அவரது கைகளை பிடித்தபடிக்கு அமர்ந்திருந்தேன். பழுத்த இலை. வலிகள் போதுமெனவும் மேலும் மேலும் மருத்துவ துயரின்றி உதிரவும் மனதுள் நம்பாத கடவுளிடம் வேண்டுகோள் வைத்தேன். இவர்களுடன் இருக்கையில் ஒருநாள் கூட அந்த நண்பர்களோடு பேசவில்லை. எதற்கு? இவர்கள் அனைவரும் தான் பெத்ததுக்கும் அவன் கூட்டாளிக்கும் பாகுபாடின்றி பலநேரங்கள் சோறிட்டவர்கள். எந்த சங்கோஜமும் இன்றி நான் அந்த நாட்களில் வளைய வந்த வீடுகள். இந்த அம்மாக்களின் ஒவ்வொரு அணைப்பும்,விரல்கள் கோர்த்தலும், முகம் நெருங்கிய பேச்சுக்களும், உள்ளங்கைகளின் கதகதப்பும் எனக்கான இழப்பை ஈடு செய்யவே முயன்றன. பெற்றோர்களை 15 வருடங்கள் முன்பாகவே இழந்தவனுக்கு இந்த சந்திப்புகளின் ஆசை ஒரு ரகசிய Bucketlist item இல்லாமல் வேறென்ன? கரை வந்த பிறகே புரியுது கடலை.


ஏழு நாட்களில் எத்தனையோ உணர்வுகளின் தாக்கங்கள் மற்றும் அழைக்கழிப்புகள். திரும்புகையில் மீண்டும் சென்னையில் துபாய் விமானத்திற்காக சிலமணிநேரம் காத்திருந்தேன். ராமும் ஜானுவும் கடைசியாய் நின்ற இடமொத்த ஒரு இடத்தில் சுற்றிலும் பயணிகள் கசகசக்க மனம் துண்டித்த தனியனாக கிளம்பும் விமானங்களை பார்த்தபடி நெடுநேரம் நின்றிருந்தேன். என் இந்த பகுதி வாழ்வில் உடல்களின் தீண்டல்கள் தான் எத்தனை? நண்பர்களின் அழுகையினூடான இறுக்கம், அம்மாக்களின் உள்ளங்கைச்சூடு தீரக்கூடாதெனும் கைப்பதுக்கம், அப்பாக்களின் எங்கன்னாலும் நல்லா இருங்கடாவெனும் சின்ன முதுகுதட்டல், பொம்பளையாளுகளின் வாடாவுடன் கிடைக்கும் மெல்லிய அணைப்பு.

ஜானுகூட ராமை சிறுவயதில் ஒருமுறை நெஞ்சில் கைவைத்து தீண்டுகிறாள். பிறகான மறு சந்திப்பில் கூட தீண்டல் விளையாட்டுகள் உண்டு. வென்றெடுக்கவல்லாமல் இயல்பான தீண்டல் முயல்வுகளும் தவிப்புடன் கூடிய தவிர்ப்புகளுமாய் தான் பயணிக்கிறார்கள். கடைசியில் பிரிவுத்துயர் அழுத்த கைகளை காரினுள் சேர்த்துத்தான் விமானநிலையத்தை அடைகிறார்கள். கடைசியில் பிரிந்தே ஆகவேண்டிய நிலையில் தன் நம்பிக்கைக்கு உரியவனை, அன்பை கொட்டித்தீர்த்தவனை, இதற்கு மேல் எதுவுமே கொடுக்க இயலாதவனை, எதையுமே எடுத்துக்கொள்ளும்படி வேண்டாதவனை ஜானு முதன் முறையாக தொடுகிறாள். அது நல்லாயிரு என்ற ஆசியென தோன்றவில்லை. இதற்குமேல் உன்னை பார்க்கக்கூடாதென்பதன் வெளிப்பாடுமில்லை. தாங்கவே முடியாத வாழ்வின் இழப்பின் இறுதியில்லை. உணர்ந்த ஆணை ஒரு பெண் அங்கீகரிப்பதும் இல்லை. அந்த தொடுதல் தன்னில் நிறைந்த ஆணின் ஆண்மையின் விடுபட்ட இடங்களை பெண்மையால் நிரப்புதல். இப்பிரபஞ்சத்தின் பெண்மையை வழங்குதல். அதன்மூலம் ஆண்மையை பூரணமாக்குதல்.

இந்த தொடுதல் முன்னாள் காதலியிடம் இருந்து மட்டுமல்ல. வாழ்வில் ஏதோ ஒரு கணத்தில் ஏதோ ஒரு பெண்ணிடம், கட்டிய மனைவியோ, சுட்டி மகளோ, நண்பனின் அம்மாவோ, வகுப்புத்தோழியோ, வளர்த்தெத்த பாட்டியோ, அலுவலக கூட்டாளியோ, சக பயணியோ யாரோ ஒரு பெண் ஒரு ஆணை தன் உலகின் இருப்பில் முழுமையாக ஏற்றுக்கொள்ளும் கணத்தில் வழங்கும் இந்த பெண்மை ஒரு ஆணை முழுமையடையச் செய்கிறது. அந்த ஆணே தன் வாழ்வில் பேராண்மை நிறைந்தவனாகிறான் என்றே தோன்றுகிறது.

என் மிச்சமிருக்கும் வாழ்வில் விடுபட்ட இடங்களை கண்டடைய எஞ்சிய நினைவுகள் போதும். இட்டு நிரப்பிக்கொள்ளத்தான் நான் சரியான ஆண்மையுடன் வாழவேண்டும் போல. அதற்கான என்னை நானே தகுதிப்படுத்திக்கொளல் மிச்ச வாழ்வில் நிகழ்ந்துவிடாதா என்ன?


வாழா என் வாழ்வை வாழவே தாளாமல் மேலே போகிறேன்
தீரா உள்ஊற்றை தீண்டவே இன்றே இங்கே மீள்கிறேன்

கருத்துகள்

  1. "நாங்கள் வேண்டியதை வென்றெடுக்கும் திறனில்லாமல் கிடைத்ததில் ஒட்டிப்பிழைப்பதை" +100

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு