முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெரீயம்மா

பெரீயம்மா என்னை முதன்முதலில் கிணத்துக்குள் தூக்கிப்போட்டபோது  எனக்கு பதினோரு வயது. திரும்பி நில்லுடா சுரபுட்டையை முதுகுல கட்டிவிடறேன்னு சொன்னதை நம்பி வாயெல்லாம் பல்லாக தண்ணீரில் இருந்து பத்தடிக்கு மேலிருக்கும் பம்ப்பு செட்டு மேடையில் நின்றிருந்தேன். எல்லா பயகளும் ஏற்கனவே உள்ளே குதித்து கும்மாளமிட ஆரம்பிச்சிருந்ததும் முந்தின நாள் இதே சுரபுட்டையை கட்டிக்கொண்டு நாளெல்லாம் கடைசிப்படியை இறுகப் பிடித்துக்கொண்டு காலை உதைத்து பழகிக்கொண்டிருந்ததும் சேர்த்து உடம்பில் ஒரு கிளுகிளுப்பு கூடிய விரைப்பு ஏறி எப்படா தண்ணியை தொடுவோம்னு எனக்கும் உந்திக்கொண்டே இருந்தது. அப்படியே கிணற்றின் கடைசி படிவரைக்கும் போய் தண்ணில கால் விட்டாப்ல ஒக்காந்துக்கிடலாங்கற நினைப்பில் தான் இருந்தேன். ஆனால் ஒரே ஒரு நொடி காற்றில் கைகால்களை துளாவியது நினைவிருக்கிறது. அப்பறம் யம்மேன்னு தொண்டை கமற கத்தியது. கத்தி முடிக்குமுன்னே பப்பரப்பேனு விழுந்தது, வெயிலின் கதிர்கள் பாய்ச்சிய கிணற்றின் அடர்பாசி கொடுத்த கரும்பச்சை வெளுப்பு வெளிச்சத்தில் மூக்கில் வாயில் தண்ணீரேற உள்ளாக்க அஞ்சடி போய் மேல வந்தது, கண்களுக்கு முன் கலங்கிய உருவமாய் கிணறும் வானமும் தெரிந்தது,  அய்யோம்மா அய்யோம்மான்னு கத்திக்கிட்டே பெரீம்மாவும் மித்த பயகளும் பார்க்கப்பார்க்க திரும்பவும் உள்ளே போனது, தத்தளிச்சு திரும்பவும் மேல வந்து வாயில் இருந்த தண்ணீரை துப்பி விழுங்கி கையைக்காலை எல்லாப்பக்கமும் வீசியது, முடியாமல் வீச்சமேறிய தண்ணீரை எக்களித்து மூக்கில் ஏற்றி ஒழுகலாக திணறியது, சில நிமிட போராட்டத்தில் தண்ணிக்குள் போகாமல் காலால் அடித்துக்கொண்டே மிதந்து கைகளை படிக்கட்டு நோக்கி துழாவியது, படியைத்தொட்ட நொடியில் ஆங்காரமாய் மீண்டும் யம்மான்னு கத்திக்கொண்டே உடும்புப்பிடியாய் பிடித்தது, கீழ்படி வயிற்றில் ரத்தம்வர  சிராய்க்க முட்டியை தேய்த்து படிமேல் வந்தமர்ந்தது, அங்கனயே கிணற்றின் சுவரோடு ஒட்டிக்கொண்டு நடுங்கிக்கொண்டே அரைமணி அழுது தீர்த்தது என்று அத்தனையும் இதுவரைக்கும் மறக்கவில்லை. பயக அத்தனை பேரும் யேய்ய்ய் பயந்தாங்கொள்ளினு கொக்காணிகாட்டி சிரிக்க நான் மறுபடியும் பெரீயம்மா தூக்கிப்போட்டுடுமோன்னு பயந்துபயந்து மூக்கில் அழுகைச்சள்ளை ஒழுக மேலே வந்தால் பம்ப்புசெட்டு மேட்டினை ஒட்டிப்போகும் தண்ணீர்த்தொட்டியில் துணிகளை அலசி அடித்துக்கொண்டிருந்த பெரீம்மா ஒருமுறை என்னை  தன் வழக்கமான முறைப்பில் பார்த்து "அம்புட்டுதான் நீச்சலு... இனி ஒனக்கு ஆயிசுக்கும் மறக்காது போடா..."ன்னுச்சு. 

அழுகையெல்லாம் ஓய்ந்துபோய் கொஞ்சங்கொஞ்சமாய் மறுபடியும் படியை பிடிச்சு நீந்தி, அப்பறம் படியைவிட்டு நகர்ந்து, அப்பறம் ரெண்டு படில இருந்து குதிச்சு, அப்பறம் இருவத்தஞ்சு எண்ணறவரைக்கும் முங்குநீச்சலில் மூச்சுப்பிடிக்கவெல்லாம் பழகி முடிக்கையில் அந்த முழாண்டு லீவு முடிஞ்சே போச்சு. ஆனால் எல்லா நாளும் கிணத்துக்கு போனாலும் திரும்பவும் பெரீயம்மா கைலமட்டும் மாட்டிறக்கூடாதுன்னு ஜாக்கிரதையா வளைய வந்தது நிஜம். நானாய் பம்ப்புசெட்டு மேட்டில் இருந்து குதித்த ஒரு நன்னாளில் "சுரபுட்டையும் கெழவம்புடுக்கும் ஒன்னு... தொங்குமேகண்டி ஒன்னுத்துக்கும் வேலைக்காவது பார்த்துக்க..."ன்னு சொல்லிவிட்டு அதும்பாட்டுக்கு பாத்தி மடைமாத்த போனது அந்த உடம்புசதை இறுகிய கைகால்களில் வெய்யக்கறுப்பு ஏறிய சுருட்டைமுடியை ஒத்தைகோடாலியாய் இறுக்கிக்கட்டிய பெரீயம்மா.

பெரீயம்மாவுக்கு கூடப்பொறந்தவங்க நாலு பேரு. ரெண்டாவது எங்கம்மா. மூனாவதும் நாலாவதும் என் சித்திங்க. அஞ்சாவது எங்க மாமா. எங்க பெரீம்மாவும் சின்ன சித்தியும் எங்க தாத்தா சாடை. மித்தவிங்கலெல்லாம் எந்த தாத்தாமாதிரி இல்லாததால எங்க பாட்டிமாதிரின்னு நானே நினைச்சுக்கிட்டது உண்டு. எம்பாட்டியை நான் பார்த்ததில்லை. ஏன் என் அம்மாவுக்கே அவங்கம்மா பத்தின மங்கலான நினைவு தான். ஆறாவது பிரசவத்துல பையனுக்கு அப்பறம் எதுக்கு இன்னொன்னுன்னு யாரோ பேச்சுவாக்குல கொளப்பிவிட்டதை நம்பி அஞ்சாவது மாசத்துல குச்சியவிட்டு கலைச்சதுல கலைஞ்சது அந்த குஞ்சுசுரு மட்டுமல்ல. எங்க பாட்டியுங்கூட. ரத்தமா ரெண்டுநாளைக்கு வழிஞ்சு வழிஞ்சு செத்துப்போச்சு எங்க பாட்டி. தாத்தாக்கு பாட்டின்னா அவ்வளவு உசிரு. பாட்டிய இப்படி மனுசம்பொறப்புல விளையாடப்போயி கையவிட்டுட்டமேன்னு மனுசன் தீராத குற்றவுணர்ச்சிக்கு ஆளாய்ட்டாப்ல. சொல்லிச்சொல்லி மருவிட்டே இருக்கும் தாத்தா. அதும் நினைவில் வைச்சுக்க பாட்டிக்குன்னு போட்டோல்லாம் கூட கிடையாது.  பாட்டி திருப்பதிக்கு காசு சேர்க்கும் பித்தளை சொம்புதான் அப்பறம் வீட்டு சாமியாகிருச்சு. வருசத்துக்கு ஒருக்கா புரட்டாசிக்கு அதை வெளியிலெடுத்து சுத்தி மூனு நாமம் போட்டு குங்குமத்துல நடுக்கோடு இழுத்து சொம்பு வாயில வெத்தலைக சுத்தி மேல முடிபிக்காத தேங்கா வைச்சு பூரணகும்பமாட்டம் ஆக்கி கும்பிட்டு அதுக்குள்ள ஏழுமலையான் பயணப்படி காசைப்போட்டு காவித்துணிய இறுக்கிக்கட்டி திரும்ப அதை எடுத்து பொட்டில பூட்டறது தாத்தாவின் வருடாந்திர சாங்கியம். அந்த சொம்பு பாட்டி கொண்டு வந்ததால யாரையும் இந்த வேலைய செய்ய விடமாட்டாப்ல.

இதுமட்டும் வைச்சுத்தான் தாத்தா பாட்டி நினைப்புல இருந்தாருன்னு சொல்லிட முடியாது. கட்டிவைச்சதும் கட்டுனதும்னு ஒரே நேரத்துல ரெண்டு சம்சாரங்ககூட வாழறது எல்லாம் அன்னிக்கு சாதாரணம். ஏன் கூட்டிக்கறதுங்கூட உண்டு. ஊருக்கு பெரிய மனுசன்னா பேச்சே கிடையாது. ஆனா தாத்தாவுக்கு எது ஆறா ரணமாக மனசுல உழுந்துச்சுன்னு யாருக்கும் தெரியலை. அதுபத்தியும் பேசமாட்டாப்ல. அதுக்கப்பறம் அவரு வேற கல்யாணம் செஞ்சுக்கலை. அஞ்சு புள்ளைங்களை வைச்சுக்கிட்டு எப்படியா சமாளிப்ப ஒரு புள்ளைய கட்டிக்கிட்டு ஊட்டை நிமுத்தற வழியப்பாருன்னு நிறையப்பேரு கெஞ்சிப்பார்த்தும் தாத்தா மசியல. எங்களை எங்களுக்கு பார்த்துக்கத்தெரியும் போங்கடேன்னு எல்லாத்தையும் ஒதுக்கிட்டாரு.

தன் அம்மாவை இழக்கையில் பெரீயம்மாவுக்கு வயசு பதிமூன்று. வீட்டுக்கு பெரிய பொம்பளை. தாத்தா எதுவும் இப்படி இருக்கனும்னு சொல்லிக்கொடுக்கல. ஆனால் அம்மா சொல்லிக்கொடுத்ததுன்னு பெரீம்மாவே பொறுப்பை எடுத்துக்கிச்சு. சோறு பொங்கும். கொழம்பு வைக்கும். பால் பீச்சி சொசைட்டிக்கு ஊத்தும். களத்து மேட்டு வேலைக்கு தாத்தனோட சேர்ந்துக்கும். மாட்டை பத்திக்கிட்டு புல்லுவெட்ட போகும். அவரக்கொட்டையும் கத்தரிக்காயும் வெள்ளாமை வந்தா பறிக்கும். தேங்கா லோடு எண்ணும். என்னென்ன வேலை வீட்டைச்சார்ந்து இருந்துச்சோ எல்லாம் செய்யும் அந்த வயசுல. என்ன பள்ளிக்கூடம் போறதை அன்னைக்கு ஆறாப்போட நிறுத்திடுச்சு. எங்கம்மா நாலாப்பு. வீட்டு ஒத்தாசைக்கு எங்கம்மாவும் நாலாப்போட ஹால்ட்டு. பெரிமாவுக்காவது வாசிக்கத்தெரியும். எங்கம்மாக்கு தமிழ்ல தன் பெயரை ஓவியமாட்டம் எழுதத்தான் தெரியும். நூறுவரைக்கும் எண்ணுவாங்க. இது தெரிஞ்சுதான் பெரீயம்மாவே அம்மாவை வீட்டுவேலைக்குன்னு நிறுத்தியிருக்கனும். மத்த ரெண்டு சித்திகளும் எட்டாவது பத்தாவது வரைக்கும் தக்கிமுக்கி வந்தாங்க. கடைசி தாய்மாமன் பியூசியோட கும்பிடு. அப்பறமென்ன செய்யும் விவசாய பெருங்குடிக?
எனக்கு விவரம் வந்த வயதில் பெரீயம்மாவின் செயல்களையும் உடல்மொழியைம் பார்த்து அதிசயப்பதும் ஆச்சரியப்படுவதும் தினப்படி வேலையில்  ஒன்றாயிருந்தது. பெரீம்மா சிரிச்சு நான் பார்த்ததில்லை. முகம் இறுகிப்போய்  கடுகடுவென இருக்கும். ஒரு நொடியில் மொத்தக்கோவத்தையும் மேல கொட்டிடறாப்ல. சாதா பேச்சையே கத்தித்தான் பேசும். ஒரு சிறுமி வீட்டைச் சுமக்கும் பொறுப்பை எடுத்துக்கொள்கையில் அதுவாகவே இப்படி இருந்தாத்தான் எல்லாம் கட்டுக்குள்ள பேச்சுக்குள்ள இருக்கும்னு நினைச்சுக்கிட்டு இப்படி ஆயிருச்சு பெரீம்மான்னு நான் நினைச்சுக்குவேன். அதும் பேச்சுக்கு மறுபேச்சு தாத்தாக்கிட்டு இருந்து ஒரு வார்த்தை வராது. தாம் பெத்த பொண்ணை தாரத்தை இழந்ததுக்கப்பறம் வீட்டைக்காக்க வந்த தாயாக நினைத்திருக்க வேண்டும். அதிகார நிலை அல்ல. பொறுப்பை சுமப்பதில் வரும் கந்தாயங்கள், அலுப்புகள், அம்மா இல்லாத வீட்டுலன்னு ஒரு பயலும் பேசிடக்கூடாதுங்கற தற்காப்பு, தனக்குப்பின்னால் இருக்கும் நாலு பசங்க சிதறிடக்கூடாதுன்னு இருக்கும் பயம் எல்லாம் சேர்ந்து தினந்தினம் அந்த சிறுமியை கடுமை நிறைந்த பெரிய மனுசியாக  மாற்றியிருக்கக்கூடும். கண்டிப்புன்னா காட்டுத்தனமான முரட்டுத்தனமான வெளிப்பாடல்ல. பொறுப்புத்தனம் நிறைந்த கட்டன்ரைட்டு பேச்சு. ஒரு முறை தான் சொல்லிப்பார்க்கும். கேக்கலைன்னா கரண்டிய எடுத்துரும் அடி பின்ன. அழிச்சாட்டியம் செய்யறது அடம்புடிக்கறது எல்லாமும் நாங்க செய்யாமலில்லை. ஆனா வீம்பாக மாறும் அந்த நொடியில் அந்த பொளேர் முதுகுல விழ ஆரம்பிச்சிருக்கும்.

பெரீயம்மா பேரு சொல்லவேல்ல பாருங்க. மாரி. மாரியம்மாதான் சுருக்க கூப்டுக்கூப்டு மாரியோட நின்னுருச்சு. மாரி கைல திங்கறதுக்கு கோயில்ல உண்டக்கட்டி வாங்கலாம்யா,  அவரக்கொட்டைய கூட இலைக்கு இத்தனின்னு எண்ணியெண்ணி வைக்கும் மகராசின்னு வந்துபோகும் சொந்தங்க விளையாட்டா நொடிச்சுக்குவதுண்டு. அதென்னன்னா பெருசுகளோ சிறுசுகளோ பத்துப்பேரு சாப்புட உக்கார்ந்தா இலைக்கு இவ்வளவுன்னு அளந்து வைக்கும். குறைச்ச அளவில்லை. எல்லா இலைக்கும் சமமா. பெருசுகளுக்கு ஒரு களியுருண்டை அதிகம் கிடைக்க வாய்ப்புண்டு. ஆனால் காயோ மாம்பழ கீத்தோ எல்லா இலைக்கும் ஈக்கோல் தான். குறைச்சல் கூட்டி பேச்சே வரக்கூடாது. பாவம்யா இது. அந்த வயசுல பொம்பளையில்லாத வீட்டுல தானே சமைச்சு நாலு பசங்களுக்கும் அப்பனுக்கும் பரிமாறி மேலவந்த ஆளு. அன்னிக்கு இருக்கறதை வழிச்சுப்போட்டாலும் எல்லாத்துக்கும் ஒரே அளவுதான் இருக்கறனும்னு பழகிப்பழகி இன்னைக்கு வரைக்கும் சட்டிய வழிச்சு கொட்டுவதி அம்புட்டுப்பேருக்கும் அளவு சரியா இருக்காங்கற கண்ணு நின்னுக்கிச்சுன்னு பொரணியா பேசிக்குவாங்க. நாங்கெல்லாம் வந்த பிறகு ரெண்டு வயசு தமிழுல இருந்து பெரியவ செல்லிக்கா வரைக்கும் பதினஞ்சு உருப்படிகளாச்சும் தேறுவோம். பெரீயம்மா வீட்டுல இருந்தம்னா இந்த கம்மூனிஸ்ட்டு பகிர்தலில் கிடைக்கும் அப்பளமோ ஒப்போட்டோ மாப்பழமோ நிப்போட்டலோ தவிர்க்கவே முடியாது. புத்தில நின்னுருச்சு மாரிக்கு.

பெரீயம்மாவுக்கு சத்தாமாத்தான் பேசத்தெரியும் மூஞ்சி எப்பப்பாரு கடுகலாகவே இருக்கும்னு இருந்தாலும் அதைக்கொண்டு பெரீம்மா முசுடுன்னு மட்டும் சொல்லிற முடியாது. அதுவிடும் ராவுடிக எல்லாம் மொத்தமுழுசா வெளிப்படும் இடம் கிணத்தடிதான். கோடை விடுமுறையில் ஒரு ஊருல ஒரு மாசமெல்லாம் நாங்க டேரா போடறது சர்வ சகஜம். இன்னைக்கு மாதிரியெல்லாம் நாசூக்கா போயிட்டு நேக்கா சொல்லிட்டு வர்ற ஒறம்பரை ஜனமல்ல அன்னைக்கு. முழாண்டு லீவுல எப்படியும் பெரீயம்மா வீட்டுல ஒரு மாசமாச்சும் தங்கமாட்டோம், வாழ்வோம். பெரீயம்மா ஊடுண்ணா வேற வீடல்ல . தாத்தா வீடேதான். எங்கம்மாவும் சித்திகளும் பக்கத்து பக்கத்து சொந்தங்களுக்கு கல்யாணங்கட்டி போக பெரீம்மா மட்டும் எப்படி உள்ளூருலயே ஆளைப்புடிச்சதுன்னு ஆச்சரியம். எங்க பெரீப்பாரு ரெண்டு தெரு தள்ளித்தான். முறைதான். எப்படித்தான் எங்க சிரிக்காமூஞ்சி பெரீயம்மாவை அவருக்கு புடிச்சதோ கட்டுனா இவதான்னுட்டாப்பல. எங்கம்மாக்கு முன்ன பலபேரு கேட்டுவந்தும் பெரீம்மா எதுக்கும் ஒத்துக்கல. ஊரையும் கூடப்பொறந்ததுங்களையும் விட்டு வரமாட்டேன்னு அடம். வீட்டுக்கு பொறுப்பான பெரிய பொம்பளையாச்சா. தாத்தாவும் எப்படிடா இந்த மூத்தவளை தாட்டிடுடறதுன்னு போராடி ஓய்ஞ்சிட்டாப்ல. கடைசியா சிக்குனவருதான் எங்க உள்ளூரு பெரீப்பாரு. மாரி போட்டது ஒரே கண்டீசன். கல்யாணத்துக்கு அப்பறமும் எங்கூட்டுல தான் குடித்தனம் செய்வேன். எனக்கு பொறுப்பு இருக்கு. ஒத்துக்கிட்டு சம்சாரிக்க தன் வீட்டுக்கு வந்துறனும்னு. தாத்தாக்கே கோவம். எந்தக் குடியானவ ஆம்பளை இதுக்கு ஒத்துக்குவான்னு. ஆனா ஆசைல நின்ன பெரீப்பா ஒத்துக்கிட்டு கட்டிக்கிட்டாப்ல. அப்பறம் பெரீயம்மா அஞ்சாளோட ஆறாவது ஆளா பெரீப்பாவுக்கும் பொங்கிப்போட்டு ஆளாக்கி தானும் மூனு புள்ளை பெத்து குடும்பம் நிமித்துனது தனிக்கதை. 

பெரீயம்மாவுக்கு மூத்தது பொண்ணு. அப்பறம் எட்டு வருசங்கழிச்சு ரெண்டாவது பையன். அடுத்தது பொண்ணு. பையன் எனக்கு அண்ணன். சண்முகம். சவலைப்பையன். ஆறு வயசுக்கும் நல்லா இருந்தவனுக்கு மேல போலியோ வந்து இடது கால் சுணங்கிருச்சு. ஆளு வளர வளர சூம்பிப்போயி ஒரு காலு மட்டுக்கும் நேரா நின்னான்னாக்க தனியா காத்துல ஆடும். ஆளு மூளைல கெட்டி. டைலர் கடையிலயும் ரேடியோ கடையிலயும் ஒக்காந்து ஒக்காந்து பொழுதை ஓட்டி தனியா ரேடியோ ஸ்பீக்கரு ரிப்பேரு ஒயரு பூட்டறது வரைக்கும் கத்துக்கும் ஆர்வம் இருந்துச்சு. தனிமைக்கு அதான் பொழுதுபோக்குன்னு இதை பரப்பி ஏதையாச்சும் நோண்டிக்கிட்டே இருப்பான்.


வெளையாட்டுலயும் ஒரு காலை தேக்கிக்கிட்டே மசபந்து ஆடுவான். பாறைமேல பேலறதுக்கும் ஏறி வருவான். ஒத்தைக்காலுல சைக்கிள் மிதிப்பான். கில்லிதாண்டல் அப்பீட்டு ஏமாத்தும் சண்டைல சட்டை கிழிய புரண்டு எழுவான். எந்த இடத்துலயும் தன்  குறையை அவன் விட்டுக்கொடுத்ததில்லை. விட்டுக் கொடுக்கச்சொல்லி பெரீம்மாவும் அவனை வளர்த்தலை. ஓப்போட்டு கூப்போட்டு ஒக்காள கெட்டசெயலில் திட்டும் சிறார்களின் விளையாட்டுகளுக்கு இடையில் வரும் வசவுகளுக்கு கூட பெரீம்மா  ஒன்னும் பெருசா கண்டுக்காது. ஆனா எவனாவது சம்முகத்தை கோவத்துல போடா மொண்டின்னு மட்டும் சொல்லிட்டான்னா செத்தான் சீதகாதி. ஒரு முறை கில்லிதாண்டலை பிடிங்கிக்கொண்டு மேலவீட்டு செந்திலை வீதிவீதியாக தொரத்திப்பிடுச்சு அவன் வீட்டு வாசல்லயே வைச்சு முட்டிய பேத்துடுச்சு. பெருஞ்சண்டை. எஞ்சாண்டக்கூடிக்கக்கூட வக்கில்லாத நாயிங்களா.. எம்புள்ளைய எவனாவது மொண்டின்னீங்க மொகர இருக்காதுன்னு... ரெண்டு நாளாச்சு பஞ்சாயத்து அமுங்க. அதுக்கப்பறம் ஒரு பயலுக்கும் வாயத்திறந்து சம்முவத்தை சொல்லறதுக்கு தில்லு கட்டலை. அந்தப்பய என்னதான் கில்லி அளக்கறதுல அழும்பு செஞ்சாலும். அம்மாக்காரி அடிக்கு மூடிக்கிட்டு இருந்துக்கலாம்னு ஏமாத்துமொண்டின்னு வாயிக்குள்ளயே மொனவிக்குவானுக. 

காலை இழுத்துக்கிட்டேதான் எட்டாவது வரைக்கும் படிச்சான் எங்கண்ணன். மேல முடியல. முடியாமப்போனதுக்கு நாங்க செஞ்ச ஒரு பாவச்செயலும் ஒரு காரணம்.  பயக எல்லாம் கூட்டா சேர்ந்துக்கிட்டு கிடைச்ச காசை பெறக்கிக்கிட்டு மதியக்காட்சி சினிமாக்கு போலாம்னு பதினோரு மணி டிகேஸ் பஸ்சு புடிச்சு மாரண்டள்ளி போயிட்டம். விஜயகாந்து கூலிக்காரன் படம். டிக்கெட்டு காசெல்லாம் போக மிச்சக்காசு பஸ்ஸுக்கு கரெட்டாத்தான் இருந்துச்சு. ஆனா தீனி திங்கற ஆசைல கொடலும் பன்னும் போண்டாவுமா இடைவேளைல தின்னுட்டு காசைக் கரைச்சுட்டம். படம் முடிஞ்சு எப்படியாச்சும் ஊரு போயிறலாம்னு. க்ளைமாக்ஸ்ல வில்லன் தங்கமெல்லாம் உருகி மேல கொட்டி வெந்து சாவற சீனை சிலாகிச்சு வாயப் பொளந்தபடிக்கு பேசிக்கிட்டே ஊருக்கு பத்துமைலு நடையக்கட்டிடலாம்னா சம்முகத்தை என்ன செய்யறதுன்னு கொழப்பம். இருக்கற ரூவாய்க்கு நீ மட்டும் பஸ்ஸை புடிச்சு போடான்னா முடியவே முடியாதுன்னுட்டான். அப்பறம் என்ன செய்யறதுன்னு தெரியாம இருந்த காசுக்கு நாலு மாங்கா கீத்து போட்டு மொளகப்பொடி ரொப்பி உலுக்கி வாங்கிக்கிட்டு ஆளுக்கு நாலு கீத்துன்னு கடிச்சுக்கிட்டே ஊரைப்பார்த்து நடந்தோம். 

எவனுக்கு தெம்பு சம்முவத்தை முழுசா உப்புமூட்டை தூக்கிவர? ஆளுக்கு கொஞ்ச தூரம்னு தாட்டுனாலும் பத்துமைலு நடந்தா நட போயிக்கிட்டே இருக்கு. சாயந்தர இருட்டல் வேற. ரோட்டுமேல சுத்துன்னு ஊருக்குள்ள ஊரா தோப்புக்குள்ள தோப்பான்னு குத்துமதிப்பு வழிக்கு ராயக்குட்டு மலைமுகட்டு மேல்பாறைதான் வழின்னு நடந்தோம். தூக்காத நேரத்துல சம்முவமே காலை தேக்கித்தேக்கி வந்துட்டுதான் இருந்தான். வீடு வர முழுசா இருட்டிருச்சு. சினிமாக்கு வந்த பசங்க ரிடர்ன் டிக்கேஸ்ல ஏறலைன்னு டிரைவரு சொன்னதும் பெரீம்மாவுக்கு கோவம் மலைக்கேறிடுச்சு. வீடு வந்து சேர்ந்தோடன செம்ம ஏத்து எல்லாத்துக்கும். ஆளாளுக்கு சொல்வெம்ம தாங்க செதறிட்டானுக. ரசஞ்சோறை தின்னுப்போட்டு கமுக்கமா பார்த்த படத்தை மறுக்கா குசுகுசுத்தமேனிக்கு நடுச்சாமம் வரைக்கும் அடி விழுமாங்கற பயத்துலயே தூங்கிட்டம். அன்னைக்கு வரைக்கும் தான் நான் சம்முகத்தை நல்ல உடல்நிலையில் பார்த்தது. இந்த நடையில் காச்சல் வந்து விழுந்தவன்தான். ரெண்டு மாசம் அடிச்செடுத்ததுல ஆளு பாதிக்குப் பாதி காலி. ஒரு காலை தேக்கிட்டு நடந்தவனுக்கு அதுக்கப்பறம் ஒரு நிமிசத்துக்கு மேல நிக்க முடியாம போயிடுச்சு. காலுல தேக்கி நடந்தவன் இடுப்புல தேக்கி நகர ஆரம்பிச்சான். பெரீம்மா அதைச்சொல்லி யாரையும் திட்டலை. விதின்னு எடுத்துக்கிச்சோ இல்ல பாவம் வயசுப்பசங்க வெளையாட்டுல வந்த வெனைன்னு விட்டுடுச்சோ தெரியல. சம்முவம் எல்லா வெளிவேலைகளும் குறைஞ்சு போய் தாழ்வாரமே கதின்னு ஆயிட்டான் ஏதாச்சும் பழைய ரேடியோவை நோண்டுன படிக்கு. எங்களுக்கெல்லாம் குத்தவுணர்ச்சி கொன்னு தள்ளுனாலும் என்ன செய்யறதுன்னு தெரியல. அவனை ஒரு இடத்துல ஒக்காரவைச்சுக்கிட்டே கில்லிதாண்டலையும் பம்பரத்தையும் மசபந்தையும் வெளையாடத்தான் செஞ்சோம். கெட்டவார்த்த சண்டைகளை குறைச்சுக்கிட்ட மேனிக்கு.

பெரீயம்மா கிணத்தடி ராவுடிக சொன்னேன் இல்லீங்களா... முழுசா முடிக்கல பாருங்க. அன்னைக்கு எல்லா வெளையாட்டுக்கும் பெரிய வெளையாட்டு நீச்சல்தான் எங்களுக்கு. தாத்தாவின் கிணறு அகலம். பத்தாளு ஒசரம் ஆழமும் கூட. சுத்திலயும் கல்லுவைச்சு கட்டுனது. நீட்டுன கல்லுகளே படிங்க. வட்டமா ஒரு சுத்துல தண்ணிய தொடும். நடுமட்டத்துல மோட்டர்மேடை. கல்லுசெவுரு மேல சிமிட்டி போட்ட மோட்டரு ரூம்தான். மரக்கதவு இரும்படிச்சு பூட்டுவைச்சு தாள் தொங்கும். பின்ன இருக்கறதுலயே வெல ஒசந்தது அன்னைக்கு விவசாயிக்கு மோட்டருதானே? அஞ்சாஸ்பவரு மூனுபேஸ் கரண்டு மோட்டரு வர்றதுக்கு முன்னாடில்லாம் டீசலு மோட்டர் தான். ஓராளு தம்கட்டி கம்பிக் கைப்பிடிய சொருகி நாலுசுத்து சுத்தனும். புடுக்புடுக்குன்னு பொகைகெளம்பி மோட்டரு ஸ்டார்ட் ஆகறதுக்கு முன்னாடி பைப்புல நாலுகொடம் தண்ணி ஊத்தனும் செல்ப்பு எடுக்க. வாரத்துக்கு ரெண்டுமுறை இரைக்கனும் பாசனத்துக்கு. பஞ்சாயத்துபோர்டு பிரசிடெண்டு ரைஸ்மில் கணேசர் கிணறு தான் இருக்கறதுல அழகானது. குதியாட்டம் போட வாகானது. ஆனால் அதுல அடிக்கடி இப்படி ஆட்டம்போட விடமாட்டாப்ல. குடிக்கற தண்ணில என்னங்கடா குதிக்கறீங்கன்னு. ஆனா தாத்தா வேறமாதிரி. பசங்க நீஞ்சறதை தடுக்கமாட்டாப்ல. பாம்பும் நண்டும் நீஞ்சற கெணத்துல மனுசப்பய அழுக்குத்தான் வெசமாகிருமா.. எல்லாம் மீனு தின்னுரும் போடாங்க திக்கிலான்றுவாப்ல. பெரீம்மாவும் ஒன்னும் சொல்லாது. கிணற்றுமேட்டில் இருக்கும் மேல் தொட்டி பம்புசெட்டு தண்ணி விழுகற இடம் குடிதண்ணி எடுக்க. கீழாக்க வாய்க்காலை ஒட்டி இருக்கும் கல்லுக துணி தொவைக்க. கால்வாய் நேராப்போய் வலக்கைபக்கம் மடைதிரும்பற  இடத்துல புதரை ஒட்டி ஒரு குழித்தொட்டியும் ரெண்டு ஓட்டைப்பானைகளும் கால் கழுவிக்க இருக்கும். 

பெரீயம்மா தான் சந்தோசமாக இருக்கும் வீட்டின் ஒரு பகுதியாக கிணத்தை நினைச்சுக்குதுனு எனக்கு நானே சொல்லிக்கொண்டிருந்தேன். ஏனெனில் கிணற்றோடு அதன் உறவு அலாதியானது. அவங்கம்மாவோடு வந்து குளித்ததில் துவைத்ததில் குடிக்க நீர் எடுத்ததில் இருந்து அதை ஒரு சொந்தமாகவே நினைச்சு வளர்ந்திருக்கும் போல. தினத்துக்கும் ஒருக்கா எப்படியாச்சும் எதுக்காச்சும் கிணத்துக்கு வந்துரும். தொலைச்சுப்போட்ட அம்மாவின் அருகாமைய தேடக்கூட இப்படி கிணற்றோடு படு அன்னியோனியமாக இருக்கோன்னு சொல்லிக்குவேன். கெணத்துக்கு போலாம் வாங்கடான்னு ஒரு மெரட்டலில்தான் தான் எங்களை கூப்பிடும். என்னவோ அது சொல்லித்தான் நாங்கெல்லாம் கெணத்துக்கு போறாப்ல காட்டிக்குவோம், அதுக்கு முன்னமேயே ரெண்டு மணிநேரம் அதில் ஊறிவந்து களிய மதியத்துக்கு மொச்சக்கொட்டை கொழம்போட தின்னிருந்தாலும். மதியத்துக்கு மேல சமையலெல்லாம் ஏறக்கட்டுனதுக்கு அப்பறம் துணிகளை எடுத்துக்கிட்டு கிளம்பும். நாங்கெல்லாம் குதிக்க ஆரம்பிச்சு முங்குநீச்சல் வெளையாட்டுல முசுவா இருக்கயில மெதுவா துணிகளை கிணத்துமேட்டுல துவைச்சு காயப்போட்டுட்டு ஊய்ன்னு ஒரு சவுண்டு விடும். அந்த சவுண்டு கேக்கையில நாங்க வெளையாட்டை ஓரங்கட்டிட்டு படியாண்ட ஒதுங்கிருவோம். எங்க முகமெல்லாம் சிரிப்பு பரவும். 

அடுத்து என்ன நடக்கப்போகுதுன்னு எங்க எல்லாருக்குமே அத்துப்படி. இருந்தாலும் புதுசாப்பாக்கற வித்தைங்கற மாதிரிக்கு புல்லரிக்க தயாராகிருவோம். மயில் கத்தும் அகவைச்சத்தம் நினைவில் இருக்கா உங்களுக்கு? அந்த சவுண்டை கொடுத்தபடிக்கு மேலிருந்து திபுன்னு ஓடியாந்து கிணத்து மேட்டுல இருந்து அம்பதடி உசரத்துக்கு புடவைய காலுக்கு வாரிச்சுருட்டுனமேனிக்கு பப்பரன்னு பறந்து வந்து கிணத்துல விழும் பெரீம்மா. அதுக்கு பாம் டைவுன்னே பேரு வைச்சிருந்தோம். மொத்த கிணத்துக்கும் தண்ணி இரைபடும். ரெண்டுபடிக்கு தண்ணி அலையா கெளம்பும். படியிடுக்கில் ஒதுங்கி மறைஞ்சிருக்கும் தண்ணிப்பாம்பு தவளையெல்லாம் அலறியடிச்சுக்கிட்டு மேலும் உள்ளாக்க பம்பிக்கும்னு சிரிப்போம். அலையடங்க ரெண்டு நிமிசம் ஆகும். ஆனா குதிச்ச பெரீம்மா ஆளைக்காணாது, ஆளு வருமா அடிலயே தங்கிருச்சான்னு தண்ணியவே உத்துப்பார்த்துக்கிட்டு இருக்கையில  அடிவரைக்கும் போய் சேத்தை அள்ளிக்கிட்டு பேபேன்னு கத்திக்கிட்டு மேலவந்து எங்க மேல வீசும். குடுகுடுன்னு படில ஏறி மேல ஓடும். குறுக்கால படில ஒதுங்கி நிக்கறவன் பறந்து தண்ணில விழுகறதை ஆண்டவனாலும் தடுக்க ஏலாது, தலைகீழ் டைவு, சம்மர்சால்ட்டு, நெட்டுக்குத்தலுன்னு கத்திக்கிட்டு நாலஞ்சு குதில மொத்தக்கெணத்தையும் கலக்கி விட்டுட்டுதான் மேல போகும். பத்துபைசா தூக்கிப்போட்டு இருவத்தியஞ்சு எண்ணிட்டு உள்ள குதிச்சு அந்த காசைப் புடிச்சு மேலவர ஜித்தனுங்களுக்கே பெரீம்மாவின் இந்த பேயாட்ட குதியலை கண்டு சித்தம் கலங்கிரும். அதென்னவோ உள்ளக்கெடக்கற சந்தோசத்தை கெணத்துக்கு மட்டும் அள்ளியள்ளி பிரியமா கொடுத்துட்டுப்போகும் அந்த கடுமூஞ்சு பெரீம்மா.

சம்முவத்தின் அக்காளுக்கு மாப்ளைபார்த்து வந்தாங்க நல்லாம்பட்டில இருந்து. எங்க தாத்தனோட தோஸ்துதான் பையனோன தாத்தா. பெரிய குழப்படி பேச்செல்லாம் இல்லை, ரெண்டு சைடும் ஒன்னுக்கொண்டு அறிஞ்சு தெரிஞ்சு பண்டிகைகளும் விசேசங்களும் நடத்துன சொந்தங்க தான். ஒன்னுவிட்ட சொந்தம் மாதிரி. எங்க அக்காளுக்கும் மாப்ளை புடிச்சுத்தான் இருந்துச்சு. விவசாயம் இருந்தாலும் பேங்க் லோனுல ஒரு மாசே பர்கூசன் ட்ராக்டரு வாங்கி சுத்துவட்டார காடுகளுக்கு நடை அடிச்சுக்கிட்டு இருந்தாப்ல மாப்ள. இதுக்கு முன்ன சில விசேசங்களுக்கு அந்த ட்ராக்டர் கட்டுன ட்ரைலருல ராயக்கோட்டை வரைக்குமெல்லாம் போய்வந்திருக்கோம். மாமன் வண்டியோட்டி பேமஸ் ஆனதுல அக்காளுக்கும் ரொம்ப பிடிச்சுத்தான் இருந்துச்சு. அவங்களும் பெரீம்மாவின் குணம் தெரிஞ்ச மக்கா தான். கிண்டலா பேசிக்கிட்டாலும் அந்த தாத்தனுக்கு நின்னுகாட்டுன பெரீம்மா மேல பெரிய மரியாதை இருந்தது. கோவக்காரின்னாலும் வேலக்காரிப்பா எஞ்சேக்காளி பொண்ணும்பாப்ல சபைல. 

நிச்சயம் நடந்தது எங்க பெரீம்மா ஊட்டுலதான். ஏழுமலையான் துணை பேரு நாலாப்பறமும் பட்டைல நெய்த பெரிய ஜமுக்காளத்தை விரிச்சு எல்லாப்பெருசுங்களும் உங்காந்துதான் பேசுனாங்க. ஏதோ கேலி எதைப்பத்தியோ பேசப்போக மாப்ளசைடு சொந்தம் சேகரு கொஞ்சம் ஓவரா வாய விட்டாப்ல.  கல்யாணத்துக்கு அப்பறம் வயசான காலத்துல யாரு யாரைவைச்சு பாக்கறதுங்கற மொகணைப்பேச்சுல பேச்சோட எச்சா இந்த மொண்டிய வைச்சு கஞ்சித்தண்ணி கடைசிவரைக்கும் ஊத்தறதுக்கா எங்க மாப்ள இப்படி ஊருவிட்டு ஊருவந்து பட்டுச்சட்டைல ஒக்காந்திருக்காப்டின்னாப்ல. ஓரமாத்தான் திண்ணைல களஞ்சியங்க பக்கத்துல நல்ல சட்டைபோட்டு ஓக்கார்த்தி வைச்சிருந்தாங்க சம்முவத்தை.  வெள்ளாட்டுப்பேச்சுதான். எங்கன தைச்சதோ சம்முவத்துக்கு. எகிறிட்டான்.  ஒம்மாளக்கூதியானாகழுதை ஓக்கா.. நாம்பொழப்பண்டா எட்டூரு சனத்துக்கு.. நீ யாருடா எம்பொழப்பக்கேன்னான்னு பேசப்போக எல்லா மொகமும் சுருங்கிட்டு. சிரிச்சவாக்குல சொல்லுல வெசம் வைச்சு மொண்டின்னவன் நல்லவனாகிட்டான். சுயமரியாதைய காப்பாத்திக்க வார்த்தைய விட்ட விடலைப்பயல் கெட்டவனாகிட்டான். என்னக்கய்யா இது மருவாத தெரியாத  கூட்டமாட்டிருக்குன்னு ரெண்டு பெருசுக கெளப்ப எங்க மொத பையங்கல்யாணம் அபசகுணமா வேணாம் இன்னொரு நல்ல நாளைக்கு நிச்சயத்தை வைச்சிக்கலாம்னு கெளம்பிட்டாங்க ஜனம். எங்க பெரீம்மா போற யாரையும் தடுக்கலை. எதுத்து எதுவும் பேசவும் இல்லை.


வந்த மாப்ளைவூடு இப்படி கோவிச்சுக்கிட்டு போச்சுதேன்னு எங்க சைடு எல்லாருக்கும் வருத்தம்தான். சம்முவம் முன்னாடி பேசலைன்னாலும் இந்தப்பய கொஞ்சம் மானரோசம் பாக்காம சும்மா இருந்திருந்தா நல்லது நடந்திருக்கும்னு குத்தலா இல்லைன்னாலும் தாங்கலில்லாம பேசிக்கிட்டு இருந்தோம். அக்காளுக்கு முகமே செத்துப்போச்சு. ஊட்டுவேலை எல்லாமும் வழக்கம்போல செஞ்சுக்கிட்டு வளைய வந்தாலும் செத்துவெளுத்த ஒடம்பாட்டம் திரிஞ்சது எங்களுக்கே பாவமா போச்சு. நாங்களே இப்படி மருகிமருகி நின்னது சம்முத்துக்கு எப்படி இருந்துச்சுன்னு தெரியலை. போனாப்போறானுங்க மசுராண்டிங்கன்னு பேசி தனக்குத்தானே சமாதானம் பேசிக்கிட்டு இருந்தவன் நாளாக ஆக வீட்டின் இருண்மையை நினைத்து புழுங்கியிருக்கவேண்டும். எப்படி சரிப்படுத்தறதுன்னு தெரியாம தனிமையில் குமைஞ்சிருக்கனும். இந்தக்காலை வைச்சுக்கிட்டா எட்டூருக்கு சோறுபோடப்போறம்னு வதங்கிப்போயிருக்கனும். வீட்டில் எல்லோரும் வெளிவேலையில் இருந்த ஒரு நன்பகலில் காப்பர் ஒயரை இரண்டு மடிப்பாக்கி திண்ணையில் இருந்து கைக்கெட்டும் தொலைவில் விட்டத்தில் வீசி முடிச்சிட்டு கழுத்தை நுழைத்து திண்ணையில் இருந்து காலை மடித்த எக்கிய வாகில் தொண்டை அறுபட  தொங்கிக்கொண்டிருந்தான். கால்கள் மட்டும் மடங்கிய வாகுல உடலின் எடையில் ஒரு சதமும் தாளாமல் தொங்கியபடிக்கு.

அன்னைக்கு உறைஞ்சதுதான் எங்க பெரீம்மா. பேச்சை சுத்தமா வழிச்சுப்போட்டுடுச்சு. இமைகளை விரிச்ச உத்துப்பாக்கும் பார்வைக்கு கண்கள் மாறிடுச்சு. இழவுக்கு வந்த மாப்ளையின் தாத்தன் மாலையோடு கழுவி கோடிபோட்டு நாற்காலியில் அமர்த்திவைத்திருந்த சம்முகத்திடம் வருகையில் விடுக்குன்னு எழுந்திருச்சு முன்னாடி ஓடுச்சு பெரீயம்மா. பயங்கர பெருசா சண்டைபோட்டு நியாயங்கேக்கப்போகுதுன்னு எல்லோரும் பதறிட்டோம். அந்த தாத்தனுக்கு இப்படி ஒரு இழிசெயலுக்கு தன்னூரு ஆளாகி இழவுவரைக்கும் போயிருச்சேன்னு வாயைப்பொத்திக்கிட்டு அழறார். அவருக்கு முன்னாடி நிக்குது பெரீம்மா. வாய் கோணிக்கொண்டு ஏதோ கேக்கப்பாக்குது. ஆனா வார்த்தை வரலை. ரெண்டு கையவும் யாசகமாட்டம் விரிச்சுக்கிட்டு வார்த்தைகள் இல்லாத கேவலில் ஏ...ஏ...ங்குது. அந்த தாத்தனுக்கு உள்ள ஒடைச்சிருச்சு. மன்னிச்சுக்க தாயேன்னு தப்பு செஞ்சுட்டம்னு பெரீம்மா கையப்புடிச்சுக்கிட்டு கதற்றாப்ல. பெரிம்மா கைய உதறிட்டு அஞ்சுவெரலையும் விரிச்சமானிக்கு கோணின வாயோட ஏ...ஏ...ங்குது பாவம். என்ன இருந்தாகும் இந்த சவலை மேல இவ்வளவு பாசம் ஆவாதுன்னு பேசிக்கிட்டு போய் பொதைச்சுட்டு கலைஞ்சது சனம். உள்ளாக்க ஆடிப்போன அந்த தாத்தன் இழவுகேட்டு திரும்புன அதே நாள்ல ஊர்லவைச்சு அந்த சேகரை வாழைமட்டையில் விளாரியெடுத்ததாக கேள்வி.


பெரிய மனுசன். முன்ன ஏதோ அசட்டை பேச்சுக்கோளாருன்னு விட்டவரை பெரீம்மாவின் கேக்காத அந்த  உன்ன நம்புனனேப்பாங்கற கேள்வி குடைந்தெடுத்திருக்க வேண்டும். கெட்டது நடந்த மூனு மாசத்துக்குள்ள நல்லது நடந்தா தீட்டு கழிஞ்சிரும்னு எல்லாத்தையும் ஏறக்கட்டிட்டு கூட்டமெல்லாம் கூட்டாம எங்க தாத்தனையும் மாமனையும் கொண்டு ஏழுகுண்டு மலைக்கு கீழ முனியப்பன் சாட்சியா கல்யாணத்தை முடிச்சுட்டாரு. அக்காளை கேட்டா எல்லாம் நடக்குது? ஆனால் அக்காளுக்கு நல்லதுங்கறது எல்லாம் நடந்துச்சு அன்னைக்கு அந்த பெரிய மனுசனால.

மொத்தமா தன்னை சுருக்கிக்கிச்சு பெரீயம்மா. உள்ள இருக்கற அழுத்தம் எல்லாம் சேர்த்து வெளிவேலைல காட்டிக்கிச்சு மாரி. ஒரே நாள்ல முப்பது மூட்டை நெல்லு களத்துல இருந்து வீட்டுக்கு தூக்கிட்டுவரும். இருவது கூடை தக்காளி அறுக்கும். ஆளுக்கும் வண்டிக்கும் நிக்காம தாமாவே நாலுகூடைய ஒன்னுமேல ஒன்னு அடுக்கி ராயக்கோட்டை தக்காளி மண்டிக்கு பதினஞ்சுமைலு போயிட்டுவரும். கிடைச்ச காசுல எதையும் திங்காம ஒரே ஒரு வெத்தலை தரித்தலில் ஊருவந்து சேரும். நாலுருண்டை களி ஒரு ராவுக்கு திங்கும். பேயாட்டம் கொரட்டைல உடல் அசதில அடிச்சுப்போட்டு தூங்கும். யாருக்கும் ஒன்னும் புரியலை. எதுக்காக பெரீம்மா இப்படி விடியலுக்கு முன்ன  இருந்து  கருக்கல் தாண்டியும் ஓட்டமா ஓடுதுன்னு. ஏதோ மனத்திருப்திக்கு இப்படிக்கு செஞ்சுக்கிதுன்னும், அந்த சவலைக்கா இவ்வளவு சோகம் காக்குதுன்னும், இருந்தாலும் இவ்வளவு அழுத்தம் இந்த பொம்பளைக்கு ஆவாதுன்னும், அழுது தீத்தாலாவது வடிஞ்சிரும் இதெங்க சொட்டுத்தண்ணி விடாம அமுக்கிக்கிட்டு சுத்துதுன்னும் பேசிக்கிட்டாங்க மக்கா. எங்கம்மா மாமா யாரு கேட்டும் வாயைத்திறக்கலை பெரீயம்மா. கிணத்துமேட்டுல ஒக்காந்து பாயற தண்ணிய பார்த்தபடிக்கு வெத்தலைபோடறது ஒன்னுதான் அது இயல்பாய் செஞ்ச காரியம்.

அக்காள் மாசமாய் இருக்காங்கன்னு சேதிவந்த நாளில் எங்களுக்கு அப்படியொரு சந்தோசம். பெரீயம்மா முகத்துல வெளிச்சம். பத்தரை டிகேஸ் புடிச்சு ஒரு எட்டு அக்காவை பார்த்துட்டு வந்துரலாங்கற  முடிவுல இருந்தோம். கூப்பிட்டதுக்கு பெரீம்மா வரமாட்டேனுடுச்சு. உள்ளறைக்குப்போய் பெட்டிய திறந்து ஏழுமலையான் சொம்பை திறந்து இருந்த சில்லரையும் பணத்தையும் சுத்துன காவித்துணில முடிஞ்சுக்கிச்சு. மலையான் காசை எடுக்கக்கூடாது, மொத்தமா திருப்பதி போகையில உண்டியல்ல போட்டுக்கலான்னாப்ல மாமா, பெரீம்மா கேக்கலை. எங்களுக்கு எதுக்குன்னும் புரியலை. ஒருவேளை நல்லசேதிக்கு பெரீம்மா கோயிலுக்கு கெளம்பத்தான் ரெடியாகிடுச்சுன்னு நினைச்சோம். மாமாவும் சித்தி பசங்களும் ஒரு எட்டு அக்காவை ஊருக்கு போய் பார்த்து வந்தாங்க. 

அன்னைக்கு சாயந்தரமாகியும் பெரீயம்மா களத்துல இருந்து வீட்டுக்கு வரலை. எங்க போச்சுன்னும் யாருக்கும் தெரியலை. எந்த ரூட்டு வண்டியையும் புடிச்சாப்ல டிரைவருங்களை விசாரிச்சதுல தெரியலை. ஒருவேளை உண்டியல் காசை எடுத்துக்கிட்டு நடையாகவே ஒகேனக்கல் கோவிலுக்கோ ஏழுகுண்டு மலையடிக்கோ போயிருச்சான்னோ ஒரே சந்தேகம். ஏழுகுண்டுக்கு ஆள் அனுப்பினோம். ஒகேனக்கல் ஈபி ஆபீஸ் போர்மேனுக்கு போன்போட்டு விசாரிக்கச்சொன்னோம். எங்கத்தான் உண்டிக்காசை எடுத்துக்கிட்டு போயிருக்கும்னு குழப்பத்துல சுத்துல ஆள்விட்டும் போயும் தேடாத இடமில்லை. ஒரு தகவலும் சுகமில்லை. நேரா திருப்பதிக்குத்தான் கெளம்பிருச்சா கிறுக்குப்பொம்பளைன்னு மாமா திட்டிக்கிட்டு கிடந்தாப்ல. யாரை அனுப்பி திருப்பதில விசாரிக்கறதுன்னும் தெரில.

பெரீயம்மா வீட்டைவிட்டு கிளம்பிப்போன மூனாவது நாள்ல மூனாவது பேஸ் மதியக் கரண்ட்டுக்கு மோட்டர்போட களத்துக்குப்போன மாமா கதறிக்கொண்டு ஓடி வந்தார். எல்லாரும் முண்டிக்கொண்டு களத்து கிணத்துமேட்டுக்கு ஓடினோம்.

வயிற்றில் கட்டுன பாறாங்கல் உடல் உப்பி இழுத்ததில் புரள கட்டின கயிற்றைத் திமிறிக்கொண்டு மேலே வந்து மிதந்துகொண்டிருந்தது பெரீயம்மா.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு