முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உயிர்த்தலம் - வாசிப்பனுபவம்

இந்தியாவுக்கு வந்து திரும்பிய இரண்டு பயணங்களில் என் ஒரு 23 கிலோ பெட்டியானது தமிழ் புத்தகங்கள் கட்டிய அட்டைப்பெட்டியாக இருந்தது. அறுக்கமாட்டாதவன் பொச்சுல அம்பத்தெட்டு அருவா மாதிரி தடித்தடி புத்தகங்கள் எல்லாம் வாங்கியாந்து அடுக்கி வைச்சுக்கும் ஆசைக்குப்பின்னால் ஊரோடு உறவாடும் ஒரு உள் நோக்கம் உண்டு. பின்ன நீங்களும் வருசத்துக்கு ஒருக்கா டிசம்பர்ல அதானே செய்யறீங்க? :) இந்த அருவாள்களில் கொற்றவை, கொற்கை எல்லாம் கூட உண்டு. அதுக்கெல்லாம் யாராச்சும் பத்தாயிரம் பக்கத்தில் விளக்கவுரை எழுதுவாங்கன்னு காத்துக்கிட்டிருக்கேன். வந்ததும் அதையும் வாங்கிப் பக்கத்தில் அடுக்கிறனும். என் வாசிப்பு தண்டி அவ்வளவுதான் :) 

இந்த முறை உறவினர் ஒருவர் சென்னையில் இருந்து வந்தாப்ல. 23 கிலோ கேட்டால் துப்புவாங்க வேண்டியிருக்கும் என்பதால் ரெண்டே ரெண்டு புத்தகம் மட்டும் கேட்டேன். தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகளும், உயிர்த்தலமும். இரண்டாவது வந்தது. முதலாவது வழக்கமாய் வாங்கும் புக்லேண்டில் இல்லை. ( அந்தக் கடை மேனேஜர் ( அ ஓனர்? ) மிக நல்லவர். கூடவே வந்து எல்லாப் புத்தகங்கள் பற்றிய அபிப்ராயங்களையும் சொல்லி வாங்க வைச்சிருவார் :) ) 

உயிர்தலம் கைல கிடைச்சிருச்சா. அதை ஒரே மூச்சில் எல்லாம் படிக்கலை. மெதுவா ஆற அமற ஒவ்வொரு கதையா படிச்சு அசைபோடறதுக்கு ஒரு மாசத்துக்கும் கிட்ட ஆச்சு. அப்படியொன்னும் வாசிக்கச் சிரமப்படுத்தும் வட்டாரமொழி அல்ல. உள்ளீடுகள் படிமங்கள் நான்லீனியர்னு ஒரு எளிய வாசகனை கதறடிப்பவை அல்ல. இருந்தாலும் ஒவ்வொரு கதை முடிவிலும் கிளம்பும் நினவுகள் அலாதியானவை. அதில் கொஞ்சசநாளைக்கு வம்படியாய் ஊறியிருப்பது ஒரு வேண்டுதல் :) 

சமீபத்தில் தான் சிறுகதையின் இலக்கணக்கள்னு ஆசான் விட்ட ஒரு பதிவு படித்திருந்தேன். ஆனால் இதில் எந்தக்கதையும் அந்தக்கட்டுக்குள் அடங்காது. ஒவ்வொன்றும் அதுபாட்டுக்கு ஆடிக்காற்றில் அலையும் பட்டம் மாதிரி சுற்றித்திரிகிறது. ஆனால் மாஞ்சா நூலென்னவோ ஆபிதின் கையில்தான். இஸ்டப்பட்டா நூறு அடிக்கும்மேல மொத்த நூல்கண்டையும் விட்டு பறக்க விடறார். இல்லைன்னா தாழாக்க டீல்போட்டு நம் மனசை அறுக்கிறார். கதை இப்படித்தான்னு ஆரம்பிக்கறதில்லை. ஏதாவது ஒரு புள்ளியில் தொடங்கி ஓடிக்கொண்டே இருக்கிறது. தன் மதம், அது சார்ந்த செயல்கள், அதன்மீதான சுயவிமர்சனம், பிரிவு, பொருள்தேடல், சுற்றம், உறவுகள் மீதான அரசியல், காமம், வசைகள், பகை, நட்பு, அம்மா, அஸ்மா, பெண்கள், பெண்கள், பெண்கள், வேலை, பாலைவன காய்ப்பு, பிரிவுத்துயர்னு எல்லாவற்றையும் தொட்டுக்கொண்டு ஓடிக்கொண்டே இருக்கிறது. ஒரு பத்திகூடச் சுணக்கமாகவோ வலியப்பட்டதாகவோ இல்லாமைக்கு ஒரே காரணம் அந்தச் சுய எள்ளல். 

ஒரு நாளைக்கு எத்தனை வகை நகைச்சுவைகளை அவதானிக்கிறோம்? கவுண்டமகான் அடிக்கறதுல இருந்து வடிவேலு அடிவாங்கறது வரைக்கும் இன்னைக்கும் சிரிக்கறோம் தான். விவேக் சந்தானம் காமெடி அடுத்தவங்களை ஓட்டுவது. அது கனநேரச்சிரிப்பு. அதுக்கப்பறம் நினைவில் இருப்பதில்லை எடுபடுவதில்லை. வடிவேலுவின் பல காமெடி டிராக்குகள் இன்னமும் நினைவில் இருப்பதற்குக் காரணம் சுய எள்ளல். தன்மீதான நகைச்சுவைப்பார்வை. இவ்வளவுதான் நம் பெரும்பாண்மைமை தினப்படி நகைச்சுவை கோட்டா. 

எழுத்துக்களிலும் இவ்வகைச் சுயபகடி நகைச்சுவை பல உண்டு. சாரு தான் பட்ட கஸ்டங்களை வலியோடு சொல்லி நடுவில் ஒரு வெடிவைப்பார். குபீர் சிரிப்பு உத்திரவாதமென்றாலும் அதில் வலியைச்சொல்லும் ஒரு அப்பாவி பிரதான முயற்சி இருக்கும். ஜெமோவுக்கு நாரோலில் நடையில் இந்தச் சுயபகடி அல்வா சாப்பிடறது மாதிரி. தன்னை முன்னிருத்தி எழுதிய சில கட்டுரைகள் இன்னைக்குப் படிக்கக்கிடைச்சாலும் வெடிச்ரிப்பு காரெண்டி. ஆனால் இதில் ஒரு சிரிப்பு சொல்லும் முனைப்பு தெரியும். சொல்லும் இடத்தையோ காலத்தையோ செயலையோ சற்றே தூக்கிவைக்கவோ சொல்லும் சேதியை உருவாக்கவோ உதவும் எழுத்து நடை. அந்த நடைதான் இந்த நகைச்சுவைக்குப் பிரதானம். அந்த நடை புரிந்த மகிழ்ச்சி புரிதலுக்கும் சேர்த்து இரட்டிப்பாகிறது. 

ஆபிதீனண்ணனின் அங்கதம் வேறு வகை. தனி டிராக்கில் ஓடுவதில்லை. எழுதும் முறையால் அந்தச் செய்நேர்த்தித் தன்னை முன்னிருத்திக்கறது இல்லை. அவலங்களைத் தாமசாகக்காட்டும் நண்பன் பட ஜீவாவீட்டு சப்பாத்தி சீன் மாதிரியான ப்ளாக் ஹியூமர் இல்லை. காட்சிகளுக்கு ஒரு படி வெயிட் ஏத்த வார்த்தைகளால் பூச்சுவேலை செய்வதில்லை. அது தானும் ஒரு கதாபாத்திரமாகவும் கதைகளூடே உலாவுவதிலை. அந்த இடத்தில் அந்தக் கணத்தில் நடக்கும் நிகழ்வுகளில் வெளிப்படும் ஒரு உணர்வாக மட்டுமே இருப்பது கதைகளின் மிகப்பெரிய பலம். அதைப் பிராக்கெட்டு போட்டு சொன்னாலும். எல்லாக்கதைகளும் ஏறக்குறைய தன்னிலை கூறல்தாதான். வண்ணதாசனின் கதைகளில் அவர் கையிப்பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பிப்போம். வழியெங்கும் அவர் வண்ணங்களையும் மேகங்களையும் பொன்வண்டுகளையும் நிலவொளியையும் காட்டிடிக்கொண்டே போவார். நாம் இதுவரை உணர்ந்திராத அந்தப் பார்வைகளை அள்ளிப்போட்டுக்கொண்டே ஆச்சரியம் மேலிட பிடித்த கையை விடாமல் ரம்மியமாய்க் கூடச் சென்றுகொண்டே இருப்போம். வழியில் கானும் எந்தக் கெட்டதுகள் மேலும் வெறுப்புக்கூட வராது. அந்த மோனநிலை வாசிப்பும் உணர்வும் ஒரு உன்னதம். 

ஆபிதீன் கையைப்பிடித்தெல்லாம் கூட்டிப்போவதில்லை. அவர் முதுகுக்குப் பின்னாடியே ஒட்டிக்கொண்டு அவர் பின்னாலேயே சிரிப்பை அடக்கிக்கொகொண்டு கதைகேக்கும் ஆர்வத்தில் ஓடுகிறோம். அவர் பச்சையாய் பேசிவைப்பதையும் ( தாயோளி நாளைக்கு நாலுதரம் வாயில சொல்லலாம். எழுத்துல எழுதிட்டா அது நமக்குப் பச்சைதானே? :) ) வேலையில் படுவதையும், பால்டின்னுக்கு வழிக்காகாமல் அம்மா வீட்டிலேயே தனித்தலைவதும், பீயும் மூத்திரமுமாய் நாறிக்கிடக்கும் தொட்டியில் சலிக்கையிலும், பாட்டியாவின் முகத்தில் விழுந்து ரத்தம் கொட்டிய கதையின் முடிவும், அந்த நாங்கோரி என்னென்ன செய்தான்னு விலாவரியாகப் புலம்புகையிலும், தன் மதவேலைகளின் பின்னால் இருக்கும் சலிப்புகளும் அவர் பார்வையிலேயே பார்த்துக்கொண்டு போய்க்கொண்டே இருக்கிறோம். எந்தக் கட்டுமானத்துக்குள்ளும் வராமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம். ஒரு எழுத்தாளரின் இந்தக் கதை கட்டமைக்கும் டெம்ப்ளேட் தொடர்ச்சியாகப் படித்துவந்தால் ஒரு கணத்தில் பிடிபட்டு விடும். அந்தக் கட்டுமானத்தில் மனம் ஆராய முனைந்து விட்டால் கதை பின்னுக்குப் போகும் ஆபாயமுண்டு. நூறாவது கதையிலும் ஒருவர் கதையை மட்டுமே முன்னிருத்தி எழுதுவதற்கு மிகத்தேர்ந்த செய்நேர்த்தி வேண்டும். அறம் புறப்படிலேயே இந்தச் செய்நேர்த்தியை சில முறை நாம் உணரக்கூடும். ஆபிதீன் அதற்கெல்லாம் நமக்கு வேலை வைப்பதில்லை. எங்கே மாஞ்சா நூலை சுண்டி எப்படிப் பட்டத்தைத் தலைகீழாகப் பறக்கவிடுகிறார் என்பது அவருக்கே வெளிச்சம். ஒரு வேளை அடுத்துத் தொகுப்பில் பிடிபடலாம் :) 

புத்தகத்தில் இருக்கும் ஒரே ஒரு குறியீடு அட்டைப்பட ஒட்டகம் மட்டும்தான் போல. வெய்யில் காயும் நிலப்பரப்பில் சுற்றும் தலை தொங்கிப்போன ஒட்டகம். அவர் மொழியிலேயே சொன்னால் புடுக்கும் வத்தி ஒட்டிப்போன ஒரு தனித்துலவும் உயிர். வருடங்களுக்கு ஒருமுறை ஏற்படுத்திக்கொள்ளும் இந்தியப்பயணக்கள் நிரப்பும் நீர்தான் அடுத்தச் சில காலத்துக்கு. ஒட்டகத்துக்கு. எந்தக் கொக்கரிப்பும் இல்லை, யார்மீதும் குற்றச்சாட்டுகளும் இல்லை. பொருள் தேடும் வாழ்வின் மீதான வலிகள் யார் மீதும் சாபங்களாகவும் மாறுவதில்லை. தன் பயணங்களின் மீதான பார்வையை மட்டுமே நமக்களிக்கும் ஒரு உயிர். அதைக்கொண்டு உணர்வதும் உதாசீனப்படுத்துவதும் கொண்டாடுவதும் நம்பபாடு. 

எல்லோரையும் போல எனக்கும் வாழைப்பழம் தான் மிகப்பிடித்தது. கதையின் ஆரம்ப இரண்டு பக்ககங்கள் கொண்டு பெருமாள் முருகனின் மாதொரு பாகத்தை எரித்துக்கொண்டாடியது போல மதத் தூய்மைமையாளர்கள் ஆபிதீனுக்கும் செய்து அவரை "பேமஸ்" ஆக்கும் வாய்ப்புப் பிரகாசமாக இருக்கு. வழக்கம் போல நம் குபீர் போராளிகள் படிக்கும் அளவுக்கெல்லாம் ரிஸ்க் எடுத்து போராட துணியமாட்டார்கள் என்பதால் நாம் மேற்கொண்டு போவோம். எளிய உறவுகளின் சண்டை. அதிலிருக்கும் வீராப்பு, கோவம், தணிந்த கோவமானபின்பும் அனுகாமல் இருப்பதில் இருக்கும் வீம்பு விலகல். ஒரு பார்வையில் "ரெண்டு பேயன்" என முடியும் இரண்டு வார்த்தைகளில் அந்தக் கண்ணாடிச்சுவர் உடைந்து நொறுங்குவது கதைக்கு ஒரு முடிவாக இருக்கலாம். ஆனால் அந்தச் சின்னத்தாதாவின் சந்தோசம் அப்படியே நம் முகம் முழுக்க அப்பிக்கொள்கிறது. மனம் நெகிழ்ந்தால் கண்ணு கட்டிக்கும்தான். ஆனால் மனசு முழுக்கச் சந்தோசம் ரொம்புனாலும் அழுகை சிலருக்கு பிச்சுக்கும். எனக்குப் பிச்சுக்கிச்சு :) 

ஒரு காட்சி வருகிறது அய்யா கதையில். பெரியாப்பா நூர்ஷா மரைக்காயரை சந்தையில் வைத்து உதைக்கக் காலோங்கும் படலம்! அதைப் படித்துவிட்டு ஒருவன் சிரிப்பு வராமல் உம்மென இருக்கிறான் என்றால் அவன் உண்மையிலேயே செத்த பிணம்தான். செத்தபிணங்கள் சேர்ந்து சிரிக்கும் ப்ளசுகாரன் நான் சொல்லறேன். அதுபோல ஒரு உன்னத நகைச்சுவையைப் படித்து அகம்மலர சிரிச்சு எவ்வளவோ வருசமாச்சு :))) 

எப்பேர்ப்பட்ட எழுத்துக்காரர் அய்யா நீங்கள்? உங்கள் அருமை நீங்கள் எங்களை நண்பர்களாக வைத்திருக்கும் இணைய உலகில் இப்போதைக்கு எங்களுக்குத் தெரியாது. எங்களுக்கு புத்தி வரும்போது வரட்டும். 

அதுவரைக்கும் உங்களோடே அதப்பியம் பேசி மகிழ்வாய் இருப்போம் ஆபிதீனண்ணே! :))) 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு