முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Appun, Give me a Rocket!

Source: www.peonqueen.com

உங்கள்ல எத்தனை பேரு கவருமெண்ட்டு ஆசுபத்திரிக்கு போயிருக்கீங்க? அட, நோயாளியா இல்லைங்க! கையில நாலு ஆப்பிளோ ஆரஞ்சுப்பழமோ இல்லை நீல்கிரிஸ் பேக்கரி பிரட்டையோ வாங்கிக்கிட்டு தெரிஞ்சவங்க சொந்தக்காரங்கன்னு படுத்திருக்கறவங்களை பாக்கறதுக்காவது?! ஒரு முறை போயிட்டுவந்திங்கன்னா இந்த ரெண்டுல ஒரு எண்ணம் நிச்சயமா மனசுல தோணலாம்! இடிஞ்சு விழுகறமாதிரியான பழய கட்டடத்துல 100 படுக்கைகளை நாலா பக்கமும் போட்டு மூலை முக்குல எல்லாம் வெத்தலை எச்சில் துப்பிவச்சி, எப்பவும் சொதசொதன்னு இருக்கற கதவில்லாத பாத்ரூமுக்குள்ள இருந்து 24 மணிநேர பிரீ சர்வீசா வீச்சம் ஆசுபத்திரி பெனாயிலு வாசத்தையும் தாண்டி வீசியபடி இருக்க உள்ள போறதுக்கும் வெளில வர்றதுக்கும் தனித்தனியா அஞ்சோ பத்தோ ஆளுக்கேத்தபடி லஞ்சம் கொடுத்தபடியும் உள்ள வந்தாலே இருக்கற ஆரோக்கியமும் போயிரும்போல இருக்கற நெலைல படுத்திருக்கற பரிதாப ஜீவன்கள் எல்லாம் எப்படி பொழைக்குமோங்கற கவலை ஒன்னு.. இல்லை கொஞ்சம் அன்னாடங்காச்சிங்களோட எகானாமி வெவரம் தெரிஞ்சவங்களா இருந்தா அடுத்தவேளை சோத்துக்குமட்டும் வழியிருக்கற ஜனங்களுக்கு இருதயம் கிட்னி பெயிலியர்னு ஏதாவது பணக்காரவியாதி வந்தா அப்படியே செத்துபோயிராம அவிங்களும் நம்பிக்கையோட வந்து மருத்துவம் பாக்கறதுக்கு இந்த ஒலகத்துல இத்தனை டாக்டரு நர்சுகளோட ஒரு இடம் இருக்குன்றது ரெண்டாவது...

நாங்க 11 பேரு +2ல ஒரு செட்டுங்க! என்ன பெரிய செட்டு? சேவிங்செட்டுன்னு கவுண்டர்பாஷைல திட்டாதிங்க... நெஜமாவே பெரிய செட்டுதான்! அதுல பாருங்க... சொல்லிவச்சாப்படி 8 பேரு அப்படியே மெடிக்கல்சீட்டு கிடைச்சு கோவை மெடிக்கல் காலேஜுல சேர்ந்துட்டாங்க.. மத்த ரெண்டுபேரு PSG டெக்குல சீட்டை போட்டுட்டாங்க. மிச்சம் இருக்கற வெளங்காத ஒரு டிக்கெட்டு என்ட்ரன்ஸ் எக்ஸாமுக்கு படிக்காம ஏதோ அப்பவே வேலை கெடைச்சு செட்டிலு ஆனாப்படி திரிஞ்சதுல ஒரு ஆகாவளி காலேஜுல சீட்டுகெடச்சு படிச்சு(!?) முடிச்சு சம்பாதிக்க ஆரம்பிச்சி இப்போ தமிழ் பிளாக்ல பதிவுக போடற நிலமைக்கு வந்திருக்கு!! பாதிநாளு அந்த டாக்டருமக்கள்கூட திரிஞ்சதுனாலயும் ஆஸ்பத்தில ஒக்காந்துகிட்டு நிறையநாள் பொங்கல்போட்ட (அதாங்க... கூடி உட்கார்ந்து விடிய விடிய வெட்டியா பேசிக்கிட்டு இருக்கறது! ) அனுபவம் இருக்கறதுனாலையும் கவருமெண்ட்டு ஆஸ்பத்திரி கொஞ்சம் அத்துப்படி.

இங்க பெங்களூர் வந்த புதுசுல கொஞ்சநாள் Watertank watchmanனா தங்கியிருந்தனுங்க.. அதாங்க.. வீடு 4 அடுக்குக்கு கட்டிட்டு மொட்டமாடில இருக்கற வாட்டர்டேங்குக்கு கீழயும் ஒரு ரூம் கட்டி அதை நாலாயிரத்துக்கு பேச்சிலருக்கு வாடகைக்கு விட்டிருப்பாங்க.. என்ன.. கேட்டு கிட்ட இருக்கற மத்த வாச்மேன் போல இல்லாம கொஞ்சம் ஒசரமான எடத்துல ஒனருக்கும் மேல தங்கிட்டு அதேவேலைய பாக்கறாப்படி இருக்கலாம்! ஒசூர் பக்கத்துல இருக்கற எங்க சித்தப்பா ஒருத்தருக்கு கழுத்துல சின்னகட்டிவந்து வலிதாங்க முடியாம பெங்களூர் NIMHANS ஆஸ்பத்திரிக்கு எழுதிக்குடுத்து அவரு இங்க வந்திருந்தப்ப அவருகூட துணைக்கு நானும் போயிருந்தேனுங்க. சும்மா சொல்லக்கூடாதுங்க.. அவ்வளவு நீட்டா சுத்தமா வச்சிருக்காங்க... நம்ப ஊரு ஆஸ்பிடலுக்கு இது 20 மடக்கு தேவலாம். கூடவே காலேஜும் மனநல ஆராய்ச்சி மையமும் இருக்கறதால நல்லா வச்சிருக்காங்க... லஞ்சமும் நான் பார்த்தவரை கிடையாது. வருமானவரி சர்டிபிகேட்டுக்கு தக்கபடி பீசுல தள்ளுபடி இல்லை இலவசம்! மனநல மருத்துவத்துக்கு இந்தியாவுல பல இடத்துல இருந்தும் இங்க வராங்க. எல்லா டெஸ்டும் முடிச்சு அட்மிஷன் கிடைக்காம எமெர்ஜென்சி வார்டுல ஒரு பெட்டு கிடைச்சதுங்க.. அப்ப நான் இங்க வீடு எடுக்காதனால தங்கற வசதி இல்லாததால வந்தவுங்க என்னை துணைக்கு வச்சிட்டு ஊருக்குபோயிட்டு நாளைக்குகாலைல வர்றதா கெளம்பிட்டாங்க. அந்த ரூமுல எங்களைத்தவிர மிச்சம் இருந்த மூனு பெட்டும் காலி. அதுக்கு பக்கத்து அறை ஹவுஸ்புல்! 20 பெட்டாவது இருக்கும். நானும் வாங்கிட்டு வந்திருந்த இட்லியை சாப்டுட்டு எங்க சித்தப்பு தூங்குனதுக்கப்புறம் அப்படியே உள்ள மேஞ்சிக்கிட்டு இருந்தேன். எமர்ஜென்சி வார்டுங்கறதால அப்பவும் சுறுசுறுப்பா இருந்தது. பாதிக்குப்பாதி மனநோயாளிங்க... ஒவ்வொரு பெட்டுகிட்டயும் ஒரு பெண்! அது அம்மாவோ, அக்காவோ, மனைவியோ... நோயாளி தூங்கிக்கிட்டும் மொனங்கிக்கிட்டும் இருக்க அதுக்கு பக்கத்துல எதேதோ கவலைகளையும் யோசனைகளையும் முகத்துல தேக்கியபடியும் கட்டிலுக்கு பக்கத்துல சுருண்டு படுத்தபடியும்! இவங்களையும் பெண்களா மதிச்சு "திருமணத்துக்குமுன் உடலுறவு" பற்றி கருத்துக்கேட்டா ஒருவேளை சரியான பதில் கிடைக்கலாம்.

ஒரு 11 மணி இருக்கும்க. பக்கத்துபெட்டு காலியா இருந்ததால நர்சம்மாகிட்ட கெஞ்சி பர்மிசன்வாங்கி அப்படியே அதுல சாஞ்சிட்டேன். திடீர்னு தடபுடன்னு ஒரே சவுண்டு. எழுந்துபார்த்தா மூனுபேரு ஒரு பையனை கையைப்புடிச்சு இழுத்துவந்துகிட்டு இருந்தாங்க. அவன் முகம், சட்டை, அரைடவுசரு எல்லாம் ரத்தம்... கூடவந்தவங்க சொல்லறதைக்கேக்காம "அப்புன்! கிவ் மி எ ராக்கெட்..." னு கத்திக்கிட்டே வந்தான். கொண்டுவந்தவங்க அவனை அப்படியே பெட்டுல போட்டு அமுக்க கூட வந்த ஒருத்தரு அவன்கிட்ட "அமைதியா இரு"ன்னு கன்னடத்துல சொல்லிக்கிட்டே இருக்காரு. அவன் அடங்கறமாதிரி தெரியலை! அஞ்சு நிமிசத்துல நர்சம்மா ஒரு ஊசிமருந்தோட வந்தாங்க. நாலுபேரும் அவனை அழுத்திப்பிடிக்க அவன் கைல ஊசியைப்போட்டாங்க... அதுக்கப்பறம் அவன் ஒரு நெலைக்கு வர்றதுகுள்ள அத்தனைபேரையும் பாடாய்படுத்திட்டான். போட்டது மயக்கமருந்துபோல.. கொஞ்சம் அமைதியாகி ஏதேதோ பேச ஆரம்பிச்சான். ஒரு டூட்டி டாக்டர் ஒருத்தரு வந்து அவனைப்பார்க்க ஆரம்பிச்சாரு. அவன் முகத்துலயும் நெஞ்சுலயும் இருந்த காயத்தை பார்த்துட்டு நர்சம்மா கிட்ட க்ளீன் பண்ணச்சொன்னாரு. பிளேடால தன்னைத்தானே கிழிச்சுக்கிட்டிருக்கான்! மறுபடியும் என்னோட சேர்த்து நாலுபேரு அழுத்திப்பிடிக்க நர்சம்மா அவன் சட்டையை கழற்றி மருந்துபோட்டு க்ளீன் பண்ணினாங்க. அப்போதைக்கு காயம்மேல ஏதோ மருந்துபோட அந்த எரிச்சல்ல அவன் போட்ட அலறல்ல ஆசுபத்திரியே ஆடிருச்சி. டாக்டரு அவன்கிட்ட பேச ஆரம்பிச்சாரு. டாக்டர், நர்சம்மா கூட வந்தவங்க எல்லாத்தையும் அவனுக்கு தெரியுது. ஆனா பேசரதுதான் ஒன்னுக்கொண்னு சம்பந்தமே இல்லாம! அவன் பேசுனதை முடிஞ்சவரைக்கும் ஞாபகப்படுத்தி அப்படியே எழுதறேன். அவன் என்ன மனநிலைல இருந்த்தான்னு உங்களுக்கும் தெரியுதா பாருங்க!

"Appun.. Apuuuuuun... give me a rocket man.. come on.. one.. only one.. one for now.. apuuuuuuuuun... lalala... what Dr? you want music? i paly music u give me cigarette.. ok.. lalalala.... i want it..... leave me alone.. Sister? sister.. atleast give me a cigarette. Dr.. one cigarette please.. i dont have any problem.. leave me.. let me go home..i play music.... lalalala... appuunn.. apuuun i need you.. one.. one rocket please....."

மருந்து மயக்கத்துல அவனால இப்போ திமிரமுடியலை. ஆனா பேசறான்.. பேசறான்.. பேசிக்கிட்டே இருக்கான். டாக்டரு கூடவந்தவங்க கிட்ட விசாரிச்சிட்டு பேடுல எதையோ எழுதிக்குடுத்துட்டு நர்சம்மா கிட்ட சொல்லிட்டு போயிட்டாரு. பார்க்க பார்க்க எனக்கு பயமே வந்துருச்சு. பெட்டுல இருந்து எழுத்து வீட்டுக்குபோறேன்னு சொல்லி அவன் எழுந்திருக்கும் போதெல்லாம் கூடவந்தவங்க "ஒழுங்கா படுடா.. சிகரெட் வாங்கித்தரேன்"னு அவனுக்கு அடியபோட்டு படுக்கவைப்பாங்க! 5 நிமிசம் கழிச்சு மறுபடியும் எழுந்துக்குவான். கூட வந்தவங்கள்ள 2 பேரு புதுசா ஒருத்தரு வந்ததும் போயிட்டாங்க. நர்சம்மா கிட்ட இன்னும் கொஞ்சம் மயக்கமருந்து குடுங்கன்னு சொன்னா அவங்க அதுக்குமேல குடுக்ககூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டாருன்னுட்டாங்க. வேற வழி இல்லாம பேண்டேஜ் துணிய நாலாப்பிரிச்சு அவன் கை காலை நாங்க பிடிச்சுக்க நர்சம்மா கட்டிலோட சேர்த்து கட்டிட்டாங்க.. கையைக்காலை அசைக்கமுடியலை.. ஆனா பெனாத்திக்கிட்டே இருக்கான்! கூடவந்தவங்களும் அப்படியே இருக்கமுடியுமா என்ன? கட்டிப்போட்டதும் அங்கங்க ஒக்கார்ந்துட்டாங்க. நானும் இவ்வளவு நேரம் அங்கயே இருந்ததால சினேகமாகி என்கூட கன்னடத்துல பேசுனாங்க! நானும் புரிஞ்ச அளவுக்கு மண்டையை ஆட்டிகிட்டு தமிழ்ல பேசுனேன். அவங்க எல்லாம் பக்கத்துவீட்டுக்காரங்களாம். அவன் பசங்ளோட ஒரு வீட்டுல தங்கியிருக்கானாம். போதைமருந்து பார்ட்டியாம். நேத்தைக்கு பிளேடால ஒடம்பெல்லாம் கிழிச்சுகிட்டு ஒரே ஆட்டமாம். அமுத்திப்பிடிச்சி இங்க கொண்டுவந்துட்டாங்க.. மத்த பசங்க எல்லாம் எங்கன்னு தெரியலை. மிஞ்சிப்போனா 22 வயசுதான் இருக்கும் அவனுக்கு. ம்ம்.. யாரோ பெத்த பையனுக்கு இங்க யாரோ உதவிக்கிட்டு இருகாங்க. இது முடியவே மணி 3 ஆகிப்போச்சு. நானும் முன்ன படுத்திருந்த பெட்டுல சாஞ்சி அப்படியே தூங்கிட்டேன்.

மணி 6 இருக்கும்க. ஒரு பொம்பளை அழுகற சத்தம். முழிச்சுப்பார்த்தா ஒரு அம்மாவும் பொண்னும் அவன் பெட்டுகிட்டு நின்னுகிட்டு அழுதுகிட்டு இருக்காங்க. நைட்டு பஸ்சு புடிச்சு வந்திருப்பாங்க போல. அவன் கை காலெல்லாம் பேண்டேஜ் கட்டோட திமிரினதுல ஒரு வளையம் மாதிரி கன்னிப்போயிருச்சி. கண்ணு செருகிப்போயி அரைபிணம் மாதிரி படுத்திருக்கான். அந்தம்மா துணைக்குகூட அழ ஆளில்லாம சேலையை வாயில பொத்திக்கிட்டு நினைச்சி நினைச்சி அழுகறாங்க! பெத்தபாவத்துக்கு அவங்க அழுக, கூடப்பொறந்தது பாவமா இல்லையான்னு தெரியாம அந்தப்பொண்ணு கண்ணுல நீர்முட்டிகிட்டு இருக்க மிரட்சியோட மலங்க மலங்க சுத்திசுத்தி பார்க்குது. பத்தாவதுதான் படிக்கும் அது. என்னையும் சேர்த்து சுத்திநிக்க ஒரு பத்துபேரு முகத்துல ஒரு சலனமும் இல்லாம அங்க நடக்கறதை வேடிக்கை பார்க்க அப்பெண் கையைக்கட்டிக்கொண்டு கூனிக்குறுகி நிற்கிறது. என்னால அங்க நிக்கமுடியலை. மெதுவா வெளில வந்து வராண்டா பென்சுல ஒக்கார்ந்துக்கிட்டேன். அதை நினைச்சாத்தான் ரொம்ப பாவமா போச்சுங்க. பட்டாம்பூச்சியா பறக்கற வயசுல இப்படியொரு துக்கத்தை அது எந்தவிதமாக புரிந்துகொள்ளும்? என்ன மனஉறுதியோடு இந்த அவமானத்தை எதிர்கொள்ளும்? இப்படிப்பட்ட ஒரு அண்ணனுக்கு தன் மனதில் என்னவிதமான ஒரு அடையாளத்தையும் அன்பையும் வைத்திருக்கும்? வருங்காலத்தை விடுங்க. கருகிப்போன நிகழ்கால கனவுகள் அவள் மனவளர்ச்சியை என்னவிதமாக பாதிக்கும்? ஒன்னும் புரியலை!

இந்த போதைன்னா மட்டும் எனக்கு அப்படி ஒரு வெறுப்புங்க. எங்க காலேஜ்ல அவ்வளவா இல்லைன்னாலும் என் பிரண்டு ஒருத்தன் எவன்கூடவோ சேர்ந்து கஞ்சா அடிச்சுட்டு அன்னைக்கு பூரா வகுப்புல சிரிச்சிக்கிட்டு இருந்ததை கண்டுபிடிச்சு அவனை பின்னியெடுத்துட்டோம். தண்ணி, தம்மு அடிச்சவன் இதுக்கு மட்டும் ஒழுக்கமான்னு கேக்காதிங்க. அன்னைக்கு எனக்கு தெரிஞ்ச நியாயம் அதுதான். என்னோட பள்ளிப்பருவத்துல சிவசங்கரியோட ஒரு நாவலையும்(அவன்!?) ஒரு போதை ஒழிப்பு தொடர்பான ஒரு இந்தி சீரியலையும் பார்த்து மனசுல இது தப்புன்னு அப்படியே பதிஞ்சிருச்சி. நினைச்சுப்பார்த்தா நாங்கெல்லாம் ஒரு நூல் மேல நடக்கற பேலன்சுல தப்பிச்சு வந்தமாதிரிதான் தெரியுது!

அதுக்கப்பறம் எங்களுக்கு தனி ரூம் கிடைச்சு, எங்க சித்தப்பாவுக்கு ஆரம்பநிலை கேன்சர்னு கண்டுபிடிச்சு 700 ரூபாயில லேசர் ட்ரீட்மெண்ட் குடுத்து சரிபண்ணி மாசாமாசம் டெஸ்டுக்கு வரணும்னு சொல்லியனுப்பிச்சாங்க. இப்படி டெஸ்டுக்கு போனவாரம் போனப்பத்தான் மறுபடியும் அவனைப்பார்த்தேன். ஆசுபத்திரி எமர்ஜென்சி வார்டு கேட்டுல நிறுத்தியிருந்த ஆம்புலன்சுக்கும் கேட்டுக்கும் நடுவுல போட்டிருந்த சட்டைய சுத்தி கையில வச்சிக்கிட்டு "சிகரெட்.. சிகரெட்.."டுன்னு சொல்லிக்கிட்டு வெற்றுடம்போட குறுகி ஒட்கார்ந்திருந்தான். இந்ததடவையும் ஒரு நாலுபேரு கூட. சுத்தி ஒரு கும்பலா மக்கள் அவனை வேடிக்கைப்பார்த்தபடி...

பதின்மவயசு ஒரு பேஜாரான வயசா இருந்தாலும் அங்கதான் வாழ்க்கைல ஒவ்வொருத்தனும் தன்னைப்பற்றிய ஒரு சுய அடையாளத்தை தேடத்துவங்கறோம். பத்தோட பதிணொன்னா இல்லாம தன்கிட்ட இருக்கற தனித்தன்மை என்னன்னு தேடி அத்தனையும் முயற்சிசெஞ்சு பார்க்கறோம். விளையாட்டு, டான்சு, கிடார், மிமிக்ரி, கிழிஞ்ச ஜீன்சு, பரட்டைதலை, தம்மு, ஓடற பஸ்சுல ஏற்றது, பைக்குல பறக்கறதுன்னு ஏதாவது ஒன்னு பண்ணி நாலு பேரு கவனிக்கறதை வச்சி இதுதான் நம்ம அடையாளமான்னு ஒவ்வொன்னையும் பிரிச்சு ஆராயறோம்! மனசுக்குத்தோனற அத்தனையையும் அது தப்பா சரியான்னு ஆராஞ்சுபார்க்காம பின்விளைவுகளையும் சுத்தியிருக்கறாவங்களையும் பத்தி யோசிக்காம செஞ்சிப்பார்த்துடறோம். சரியான அடையாளத்தை சரியான நேரத்துல கண்டுபிடிக்கறவன் இந்த டிரையல் பீரியடு முடிஞ்சதும் அதையே அடித்தளமா வச்சி வாழ்க்கைல சரசரன்னு மேல போயிடறான். சரியான அடையாங்களை கண்டுபிடிச்சும் அதை அடிப்படைன்னு புரியாம கோட்டை விட்ட என்னைமாதிரியாம பெரும்பாலான கேசுங்க வாழ்க்கையோட ஓரத்துல அந்த அடையாளத்தை ஒட்டிக்கிட்டு கிடைச்சதை வச்சி ஓட்டறோம். இந்த அடையாளத்தேடல்ல தவறிவிழுத்த சிலர் அப்படியே அழுந்திடறாங்க. மீறி முயற்சிபண்ணி எழுந்திருச்சி ஓடறதுக்கு தயாரதுக்குல்ல தலைக்கு மேல ஓடிட்ட காலம் அவங்களைப்பார்த்து சிரிக்கத்தான் செய்யுது!

ம். சரியான நேரத்துல சரியான விசயங்கள் நமக்கு தெரிஞ்சிட்டா அப்பறம் அது வாழ்க்கையே இல்லைன்னு கடவுள் நினைக்கறாரோ என்னவோ?

கருத்துகள்

  1. இளவஞ்சி நான் கடைசி பாராவுக்கு உங்க கருத்தோட உடன்படுகிற அளவிற்கு முதல் பாராவில் உடன்பட முடியாமல் இருக்கிறேன்.

    //மூலை முக்குல எல்லாம் வெத்தலை எச்சில் துப்பிவச்சி, எப்பவும் சொதசொதன்னு இருக்கற கதவில்லாத பாத்ரூமுக்குள்ள இருந்து 24 மணிநேர பிரீ சர்வீசா வீச்சம் ஆசுபத்திரி பெனாயிலு வாசத்தையும் தாண்டி வீசியபடி இருக்க //
    என் வீட்டிற்கு எதிரில் வசிக்கும் ஆண்ட்டி அரசாங்க ஆஸ்பத்திரியில் நர்சாக வேலைபார்க்கிறாங்க. ஒருநாள் அவங்களுக்கு சாப்பாடு கொண்டு போக அவங்க பையனும் நானும் ஆஸ்பத்திரி போணோம். நீங்க சொன்ன அத்தனை விஷயத்தையும் நானும் உணர்ந்தேன். பொறுக்க முடியாம அவங்ககிட்ட நானே கேட்டேன்.

    அவங்க கூறிய பதில் இது தான். "வெத்தலை கறை, அசிங்கமான டாய்லட், கவிச்ச வீச்சம் இதில எத்தனை விஷயம் டாக்டர்களாலும், நர்சுகளாலும் வருகிறதுன்னு சொல்லு. சரி! அதை விடவும் எத்தனை விஷயம் அட்மிட் ஆகிற பேஷண்டுகளால் வருகிறதென்று சொல்லு. மருத்தவ தொழிலும் நர்சுகளின் தொழிலும் ரொம்ப பொறுமையுடனும் அக்கறையுடனும் செய்ய வேண்டிய தொழில். நாங்க எங்க தொழிலுக்கு கட்டுப்படுகிறோம். அதுக்காக பேஷண்ட்டை பார்க்க வருகிறேன் பேர்வழி என்று வெத்தலை துப்பறவனுக்கெல்லாம் நாங்க துப்புறவு பணி செய்துகிட்டு இருக்க முடியாது. எங்களால பேஷண்டுகளின் மலங்களைத் தான் கழுவி அகற்ற முடியுமே தவிர பார்க்க வருகிறவர்கள் தண்ணி ஊத்தறாங்களா இல்லையான்னு பார்த்துகிட்டு இருக்க முடியாது. இது மக்கள் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய அத்தியாவசிய உணர்வு. அது இல்லாம இருக்கிறது தான் இதுக்கு பெரிய காரணம். இப்போ எல்லாம் பேஷண்டுகளுக்கு தனி டாய்லட் விசிட்டர்ஸுக்கு தனி டாய்லட்னு வச்சிருக்கோம். பேஷண்டுகளின் டாய்லட் எங்களால பராமரிக்கப்படுவது. விசிட்டர்ஸ் டாய்லட் வாரம் இருமுறை சுத்தம் செய்யப்படும். இப்போதைக்கு நாங்க செஞ்சிருக்கிற சுகாதார முயற்சி இது தான்".

    எனக்கென்னவோ அவங்க சொல்றது உண்மையா இருக்கும்ணு தோணுது. ஆனாலும் அரசு ஆஸ்பத்திரி தனியார் ஆஸ்பத்திரிகளின் அருகில் கூட நெருங்க முடியாது சுகாதாரத்திலும் பணத்திலும்.

    //அது அம்மாவோ, அக்காவோ, மனைவியோ//
    இதில வேற எந்த உறவும் வராதது நிதர்சனத்தைக் காட்டுகிறது. நான் பிறக்கும் பொழுது எங்கம்மா கூட இருந்தது எங்க தாத்தா மட்டுமே. (அம்மாவோட அப்பா). எங்கப்பாவும் எங்க பாட்டியும் (எங்க அம்மாவோட மாமியாரும்) இல்லாதது இன்றளவும் எங்கம்மாவுக்கு வருத்தம் தரக்கூடிய பெரிய விஷயம். அப்பாவாவது ஒரு சங்கடமான சூழ்நிலையில கூட இருக்க முடியாம இருக்கும்படியாச்சு ஆனா பாட்டி வேணும்னே வராம இருந்திட்டாங்க.....

    //தண்ணி, தம்மு அடிச்சவன் இதுக்கு மட்டும் ஒழுக்கமான்னு கேக்காதிங்க. அன்னைக்கு எனக்கு தெரிஞ்ச நியாயம் அதுதான்.//
    நியாயம் இன்னிக்கு தேதியில எப்படியிருக்கு????

    பதிலளிநீக்கு
  2. இளவஞ்சி பதிவுண்ணாலே மனசை பிழியிறதா தான் இருக்கும் போல.எழுத்தில் மாறாத தரம் .நகைச்சுவை.கலக்குங்க தலைவா!

    கணேஷ்,சிந்திக்க வைத்த பின்னூட்டம்.பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  3. இளவஞ்சி,

    நல்ல பதிவு. சமீபத்துல சென்னை பொது மருத்துவமனையை ஜெயாம்மா அப்படியே
    ஹைடெக்கா மாத்தியிருக்காங்களாம். அரசு (மற்றும் கணேஷ் சொன்னபடி) மருத்துவர்/செவிலியர்கள்) என்னதான் முனைப்பு எடுத்தாலும், நமது மக்களின் இன்டிசிப்ளின் தான் பலவித தொல்லைகளுக்குக் காரணம். பள்ளிகளிலேயே இந்த டிசிப்ளின் சொல்லிக்கொடுக்கப்பட்டால்தான் நாடு முன்னேறும்.

    - அலெக்ஸ்

    பதிலளிநீக்கு
  4. Peelamedu_bulls - ஆஹா.. நீங்க நம்ப ஏரியா போல இருக்கே! வீனஸ் பேக்கரி கஸ்டமரா? :)

    கனேஷ், நீங்க சொல்லறது கரெக்ட்டு. அரசாங்க ஆசுபத்திரி அப்படி இருக்கற்துக்கு யாரு காரணம்னு நானும் தெளிவா எழுதலை! ஆனா நர்சம்மாங்களோட சேவையை நாம கொஞ்சமும் குறைத்து மதிப்பிட முடியாது... உங்கள் ஆதங்கம் புரிகிறது.
    //நியாயம் இன்னிக்கு தேதியில எப்படியிருக்கு???? // நான் ஏற்கனவே சொன்னதுதாங்க.. எல்லாத்தையும் நிறுத்து 3 வருசம் ஆகுது :) நல்லவன்னு சொன்னா நம்புங்கப்பா..

    அலெக்ஸ், நிஜமாவே சென்னை ஆஸ்பிடல் பாக்கறதுக்கு ப்ரைவேட் ஆஸ்பிடல் மாதிரிதான் இப்பொ இருக்கு. ஆனா மத்த ஊர்களையும் கிராமங்கள்ளையும் நிலமை சொல்லிக்கறமாதிரி இல்லை.

    ஜோ- ஊக்கங்களுக்கு நன்றி...

    உங்கள் கருத்துக்களுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  5. உங்களோட பல அனுபவங்கள் மனதை விட்டு அகாலாத ரகமா இருக்கு. அதை நீங்க நல்லா எழுதறீங்க.

    என்னுடைய மாமனார் ஒரு கதை சொல்லுவார். ஒருவனை சிங்கம் துரத்துச்சாம். ஓடி போய் கிணத்துலே விழுந்துட்டானாம். ஒரு நைந்து போன கயிற்றை பிடிச்சுகிட்டு தொங்கறானாம். கிணறின் ஓரு ஓட்டையிலுருந்து ஒரு விஷப் பாம்பு அவனை கடிக்க வருதாம். விழுந்தா அவனுக்கு நீச்சலும் தெரியாதாம். அப்போ மேலே ஒரு மரத்திலிருக்கும் தேன் கூட்டிலிருந்து ஒரு சொட்டு தேன் அவன் உதட்டுலே விழுந்ததாம். உடனே அவன் எல்லா கஷ்டத்தையும் ஒரு வினாடி மறந்துட்டு 'ஆஹா..என்ன ருசி'' அப்படின்னு லயிச்சு போனானாம். அப்படி தான் நாம வாழ்ந்து கிட்டிருக்கிற வாழ்க்கை அப்படின்னு சொல்லுவார். இது ஒரு ஓவர் pessimistic view என்று நினைத்தாலும் சில சமயம் இது தான் உண்மையோன்னு தோன்றியதுண்டு.

    ரொம்ப குழப்பிட்டேனா? :-)

    பதிலளிநீக்கு
  6. இளவஞ்சி, யோசிக்க வைக்கக் கூடிய பதிவு.

    //சரியான அடையாளத்தை சரியான நேரத்துல கண்டுபிடிக்கறவன் இந்த டிரையல் பீரியடு முடிஞ்சதும் அதையே அடித்தளமா வச்சி வாழ்க்கைல சரசரன்னு மேல போயிடறான். //

    அதையே அடித்தளமா வச்சா?!!.

    பதிலளிநீக்கு
  7. இளவஞ்சி,

    'அரசாங்க ஆஸ்பத்திரி' சொன்னது எல்லாமே சூப்பர்.

    பாதிப் பிரச்சனை பார்வையாளர்களால்தான். ஆனா அவுங்க வரலைன்னா அந்த நோயாளிக்கு எப்படி இருக்கும்?

    அடிப்படை சுகாதாரம் இன்னும் ஜனங்ககிட்டே போகலை(-:

    பதிலளிநீக்கு
  8. இளவஞ்சி உங்களோடு சேர்த்து கணேஷுக்கும் ஒரு சிறு பாராட்டு. நன்றாக இருக்கிறது பதிவு என்பது தேவையற்ற ஒரு பாராட்டு.

    ஆனாலும் ஒரு ஆளு நான் 100 பதிவு போட்டுடேன்னு பீத்திக்கிட்டு அலையுது. எண்ணிக்கையிலேயா இருக்கு... அது புரியாம அந்த ஆளு...ஹும்..ம்.. என்னத்த சொல்றது!

    பதிலளிநீக்கு
  9. துளசி சொன்னதைப் போல, பார்வையாளர்களால்தான் பிரச்சனை. பிறகு நோயாளிகளுடன் கூட ஒரு படையே குடும்பம்
    நடத்தும். செவிலியர்கள் நன்றக பார்த்துக் கொண்டால், கூடும் கும்பலை தடுக்கலாம். பார்வையாளர்கள் நேரத்தை கடுமையாய்
    அமல் படுத்தினால் அத்தனை பிரச்சனையும் தீரும்.
    தருமி சார், ரஷ்யாகாரர் கூட ஏதாவது பிரச்சனையா :-))

    பதிலளிநீக்கு
  10. ரம்யா, அருமையான கருத்தை சொல்லிட்டு குழப்பறேனான்னு கேட்டா எப்படி?

    அப்டிபோடு! //அதையே அடித்தளமா வச்சா?!!.// இதுல என்னக்க குழப்பம்?!?

    துளசி, உஷா,நீங்க சொல்லறதைதான் NIMHANs ல கடுமையா கடைப்பிடிக்கறாங்க.. அட்மிஷன் கிடைச்சுட்டா ஒரு நோயாளிகூட ஒருத்தருக்குத்தான் அனுமதி! மத்தவங்களை Private Security ஆசாமிங்க வந்து துரத்திக்கிட்டே இருக்காங்க...

    தருமி! 6ம் 4மா ஒரு மரண அடில சென்சுரி போட்டுட்டு என்ன இப்படி சொல்லிட்டீங்க? உஷா சொன்னமாதிரி எனக்கும் என்னவோ நீங்க ரஷ்யாக்காரரை திட்டரமாதிரிதான் தோனுது! :)

    உங்கள் கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  11. //என்னவோ நீங்க ரஷ்யாக்காரரை திட்டரமாதிரிதான் தோனுது! :)//
    ஹி..ஹி..தருமிக்கு எதிரா நிறைய நாரதர்கள் இருக்கிறார்கள் போல .இருந்தாலும் 1000 பொற்காசு அவருக்குத் தான்

    பதிலளிநீக்கு
  12. தருமி ஐயாவை பற்றி எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அவர் தன்னை தான் சொல்லிக்கிறாருக்னு நினைக்கறேன். அவரே வந்து clarify பண்ணட்டும்.

    பதிலளிநீக்கு
  13. தருமி சார், ரஷ்யாகாரர் கூட ஏதாவது பிரச்சனையா :-)) -உஷா

    தருமி! 6ம் 4மா ஒரு மரண அடில சென்சுரி போட்டுட்டு என்ன இப்படி சொல்லிட்டீங்க? உஷா சொன்னமாதிரி எனக்கும் என்னவோ நீங்க ரஷ்யாக்காரரை திட்டரமாதிரிதான் தோனுது! :)- இளவஞ்சி

    ஹி..ஹி..தருமிக்கு எதிரா நிறைய நாரதர்கள் இருக்கிறார்கள் போல //..ஜோ

    தருமி ஐயாவை பற்றி எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அவர் தன்னை தான் சொல்லிக்கிறாருக்னு நினைக்கறேன். அவரே வந்து clarify பண்ணட்டும்.''// --ரம்யா

    அடப் பாவிங்களா? ஒரு ரெண்டு நாளு இந்தப் பக்கம் வரலைன்னா, இப்படியா என் 'அழகுத்'தலையில ஒரேயடியாஅரைச்சிர்ரது??!!
    போங்கப்பா/..ம்மா,
    நான் எழுதினதில ஒரு திருத்தம் போட்டுர்ரேன்.
    "ஆனாலும் ஒரு கிழடு நான் 100 பதிவு போட்டுடேன்னு பீத்திக்கிட்டு அலையுது. எண்ணிக்கையிலேயா இருக்கு... அது புரியாம அந்த ஆளு...ஹும்..ம்.. என்னத்த சொல்றது!

    அய்யாமாரே/ அம்மாமாரே, இப்ப திருப்தியா?? (இங்க ஒரு அழுவுற ஸ்மைலி போட்டுக்கிங்க. )

    ரம்நாதர், இதெல்லாம் உங்களுக்கும் கேக்குதா?

    பதிலளிநீக்கு
  14. "அழுவுற 'ஸ்மைலி'.."...?
    ஆஹா, ஒரு கேள்வி.
    ஸ்மைலின்னு சொல்லிக்கிட்டு, எப்படி அழுவுற மூஞ்சி போடறாங்க??

    பதிலளிநீக்கு
  15. "எல்லா கஷ்டத்தையும் ஒரு வினாடி மறந்துட்டு 'ஆஹா..என்ன ருசி'' அப்படின்னு லயிச்சு போனானாம்:// -
    - ரம்யா, இது ரொம்பவே optimistic மாதிரில்ல தெரியுது.../

    பதிலளிநீக்கு
  16. தருமி சார், இராமநாதனின் நூறாவது பதிவைப் படிச்சிட்டு இங்க வந்தா நீங்க இப்படி, அட உங்களதாங்க சொல்லிக்கிட்டீங்கன்னு
    தெரிஞ்சியிருந்தும் எனக்கு சிரிப்பு தாங்கமுடியாம வம்புக்கு இழுத்தேன். இளவஞ்சியின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டேன்.
    பின்ன போட்ட பதிவுக்கு சம்மந்தம் இல்லாம பின்னூட்டம் வந்தா..:-)))))))))
    ரம்யா சீரியசாவா நெனச்சீங்க, இல்லைன்னா இனிமேலே ஞாபகமா :-) இதப் போட்டுடுங்க.

    பதிலளிநீக்கு
  17. நானும் ரம்யா சீரியஸா தான் சொல்லறாங்களான்னு கொழம்பிட்டேன்!

    தருமி சார், நீங்க ரெண்டுநாள் இல்லைன்னாலே என்னென்ன நடக்குது பாருங்க! நல்லவேளை, ரஷ்யாவுக்கும் மதுரைக்கும் மூளவிருந்த போர் பாதில நின்னுருச்சி..

    //நான் எழுதினதில ஒரு திருத்தம் போட்டுர்ரேன்.
    "ஆனாலும் ஒரு கிழடு நான் /// அதுசரி.. இப்போ நீங்க அஞ்சுபேர்ல யாரைச்சொல்லறீங்க? :)

    பதிலளிநீக்கு
  18. டி ராஜ்,

    //ஆபிஸ் நேரத்துல தமிழ்மணத்துல இன்ன வேல // அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா! :)

    உங்கள் ஊக்கங்களுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  19. மக்களே..ஸ்மைலி மறந்துட்டேன்!! ஆஃபீஸிருந்து பின்னூட்டம் எழுதினா இதான் பிரச்சனை!! :-)

    எதோ இளவஞ்சி சொன்னா மாதிரி எல்லாரும் சேர்ந்து போரை தடுத்துட்டோம்!!

    பதிலளிநீக்கு
  20. இங்க இவ்வளவு நடக்குது; இந்த ஆளு ராமநாதன் எட்டியே பாக்கலியே; கூப்பிட்ற வேண்டியதுதான்.
    helloooooooooo! ராம்ஸ் !!

    பதிலளிநீக்கு
  21. வந்திட்டேன் தருமி...

    நூறு பதிவு பதித்தோர் என்ற elite க்ளப்பினைக்கண்டு பொறாமைப்படுவோருக்கு...

    வெறும் அழகிரியை நம்பியது மதுரை. Strategic Rocket Forces-ஓ எங்கள் பக்கம். உங்கள் தம்மாக்குண்டு ஊரை உலக வரைப்படத்திலிரிந்தே மறையச் செய்யும் சக்தி உடைய எங்களுக்கு மதுரையைப் பிடிக்கும். இதனாலேயே மருதை மாஸ்கோவை வம்புக்கு இழுக்காது. இது புரிந்த எனதருமை நண்பர் தருமி என்னை வம்புகிழுக்கிறார் என்று சும்மா சிண்டு முடியும் மத்திய நாட்டினருக்கு எனது முதல் எச்சரிக்கை... !!!!! வேறென்ன சொல்வது! :)

    பதிலளிநீக்கு
  22. என்னப்பா இது...
    என் பதிவுலதான் இப்படின்னா.. இங்கேயுமா? கடைசி பின்னுட்டமா என்னோடது ஆயிடுச்சு. comments killer னு பட்டம் கொடுக்காம இருந்தா சரி...

    பதில் போடாட்டி ஓவ்வொருத்தர் ஊருக்கும், தானாவே வெடிச்சு விழாத மிக்-29 மூலம், அந்த்ராக்ஸ் பார்ஸல் அனுப்பிவைக்கப்படும் என்று அன்புடன் எச்சரிக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  23. இராமநாதன், comments killer ?! :)

    கவலைப்படாதிங்க! காப்பாத்திடேன்!

    //வெடிச்சு விழாத மிக்-29 // இதெல்லாம் நாங்க வாங்குனதே உங்க ஊருல இருந்துதான்! ஓட்டைகளை எங்களுக்கு வித்துட்டு வெடிச்சு விழாத நல்லதெல்லாம் உங்ககிட்டயா?? :)

    பதிலளிநீக்கு
  24. எல்லாம் சரி பதிவுக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம் என்பது தான் புரியவில்லை. தயவு செய்து விளக்குவீர்களா?

    தங்களின் ஆதங்கம் நன்றாக புரிகிறது. இது போன்று ஒவ்வொருவரும் ஆதங்கப் பட்டுக்கொண்டே இருப்பதை விட, பொது இடங்களில் காணப்படும் இது போன்றவைகளை அதை காணநேரிடுபவர்கள் முடிந்த அளவு சுத்தம் செய்ய ஆரம்பித்தால் மட்டுமே போதும் - காலப் போக்கில் நம்மைக் கண்டு மற்றவரும் அதை செய்ய ஆரம்பிப்பர்.

    இது மட்டுமே தீர்வாக எனக்கு தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  25. //எல்லாம் சரி பதிவுக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம் என்பது தான் புரியவில்லை.// என்னது? நெஜமாவே புரியலையா? ஹிஹி.. எனக்கும் என்ன சொல்லறதுன்னு தெரியலை!

    மறுபடியும் ஹிஹி..

    நான் எழுத நினைச்சது போதைமருந்துகள் பற்றி.. ஆனா விசயம் வேற எங்கயோ போயிருச்சி...
    மருத்துவமனை பற்றின என்னோட கருத்து நான் சொன்னதுல இரண்டாவது... ஆதங்கத்தைவிட இப்படியாவது இருக்கேன்ற நிறைவுதான் என்கிட்ட இருக்கு...

    கருத்துக்களுக்கு நன்றி இறைநேசன்...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு