முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

க.க: 6 - கல்யாணந்தான் கட்டிக்கிட்டு வாழப்போலாமா...?


ன்னது? ஓடிப் போலாமாங்கறதை மாத்தி தப்பா பாடறனா? கட்டிக்கிட்டதுக்கு அப்பறம் எங்கங்க ஓடறது? சம்சார சாகரத்தில் கெடந்துழல வேண்டியதுதான்! கட்டுனவ கிட்ட இருந்து ஓடிப்போயிடலாமாங்கற எண்ணம்கூட சிலநாள் வர வாய்ப்புண்டு! ஆனா கட்டுனவ கூட ஓடிப்போயிடலாம்னு ஒரு நாளும் நினைக்கத் தோணாது! ஆகவே, சிறப்பான இந்த பொருட்குற்றத்தோடு இன்னைக்கு பொங்கலை ஆரம்பிக்கலாம்.


கல்யாணங்கறது நெசமாவே ஒரு திருவிழாதாங்க! பார்க்கப்போனா நம்மை மையப்படுத்திதான் எல்லாமே நடக்கற மாதிரி ஒரு தோரணை இருக்கும்! ஆனா, நம்ம பேரை வைச்சு மக்கா கொண்டாடிருவாக! அய்யனாரு கோயில் திருவிழா என்னவோ அய்யனாரு பேருலதான் நடக்கும். ஆனா மொடமொடன்னு புதுத்துணி போட்டுக்கறது, சிறுசுக சேமியா ஐஸ், கடிகார ஜவ்வுமுட்டாய், கலர்கண்ணாடின்னு ஜமாய்க்கறது, வயசுப்பயக தோதான புள்ளைங்ககூட கண்ஜாடைலயே காவியம் படிக்கறது, பொம்பளையாளுக ஒத்துமையா ஒன்னுமண்ணா பொங்க வைக்கறது, ஆம்பளையாளுக மரத்துக்கு பின்னாடி கமுக்கமா பட்டைய ஊத்திக்கறது, கறிசோறு வேகறவரைக்கும் சீட்டுக்கட்டுல காச விடறது, பங்காளிககூட நின்னு போன பேச்சுவார்த்தைகளை புதுப்பிச்சுக்கறது, இல்லைனா புதுசா பஞ்சாயத்து ஆரம்பிக்கறதுன்னு பட்டரைய போட்டு கொண்டாடிருவாக! ஆனா அய்யனாருக்கு ஒரு புது துண்டும், ஒரு இலை படையலும், ஒரு பாட்டிலு சரக்கும் பீடிக்கட்டும் தான் மிச்சம்! ஆகவே மக்களே! கல்யாணத்தன்னிக்கு நீங்க ஹீரோ மாதிரி! ஹீரோ இல்லை!
எதெல்லாம் செய்தால் அன்றைய நாள் மறக்க முடியாததாக ( முக்கியமாக நமக்கு )இருக்குமோ அந்தமாதிரி திட்டமிட்டு இதனை செய்யலாம்! நம் சொந்தங்க எல்லாரும் சந்தோசப்படறமாதிரி செய்யனும்னு ஆசைப்பட்டா அது நடக்கற காரியமில்லை! எல்லாருக்கும் நல்லவங்கற கதையாகிரும். உங்கள் இருவீட்டாரது விருப்பமே முக்கியமாக இருக்கட்டும். சுத்தியுள்ள சொந்தங்க நம் ஆசைப்படி நடக்கும் கல்யாணத்துக்கு வந்து வாழ்த்தவேண்டும் என்பது பிரதாணமாக இருக்கவேண்டுமே தவிர, மத்தவங்க ஆசைப்படி திட்டமிட்டா நம்ம சந்தோசம் பறிபோயிருமப்பு! என்னது கொழப்பறனா? பொண்ணு வீட்டுலயும் நம்ம வீட்டுலையும் நமக்கு வசதியா மண்டபமோ, கோவிலோ பார்த்து கல்யாணம் வைக்கலான்னு ஒரு ஐடியா வைச்சிருப்போம்! இதைப்போய் உங்க ஜனங்க 50 பேர்த்தக்கூட்டி என்ன செய்யலாம்னு கேட்டுப்பாருங்க! சட்டசபை தோத்துரும்! "நம்ம குல வழக்கப்படி..", "நம்ம கொள்ளுத்தாத்தா காலத்துல இருந்து..." "இப்படிதான் நம்ப ஒன்னுவிட்ட சித்தப்பாவோட ரெண்டுவிட்ட சித்திபையன் செய்யபோக..." எடுத்து விட்டுக்கிட்டே இருப்பாங்க! நம்மாளுக விருப்பமெல்லாம் பொண்ணு வீட்டாரு ஒத்துக மாட்டாக! அவிங்க சொல்லறதெல்லாம் "அதென்ன நாம கேக்கறது?!"ன்னு கெத்து காட்டற மேட்டரா மாறிடும்! எனவே மக்களே! முடிவுகளை இருவீட்டாரும் எடுங்கள். எடுத்த முடிவுகளை சுற்றத்துக்கு அறிவியுங்கள்! முடிவெடுப்பதை பரவலாக்காதீர்கள்.

என்னைக்கு கல்யாணத்துக்கு மனதளவில் தயாரானமோ அன்னைக்கு இருந்து சக்திக்கேத்தமாதிரி சேர்த்த ஆரம்பிச்சோமில்ல? அது இப்போதைக்கு ஒரு பெரிய ஒன்னோ ரெண்டோ ஆகியிருந்தா சந்தோசம்! கல்யாணம்னா எல்லாம் பொண்ணு வீட்டுலயே செய்வாக.. நாமபோய் தாலி கட்டுனா போதுங்கற காலமெல்லாம் போயிருச்சப்பு! இன்னைக்கெல்லாம் செலவுகளை கணக்கெழுதி சரிபாதியா பிரிச்சுக்கற காலம்! என்னதான் உங்களுக்கு எல்லாம் செய்யற மாமனாரு கெடைச்சாலும், பத்திரிக்கை, துணிமணி, வரப்போறவளுக்கு போடற நகை அப்படி இப்படின்னு ஒரு பெரிய ரூவாய்க்கு கொறையாம பழுத்துரும்! கல்யாணம் செஞ்சுக்கற வயசாகியும் இதை நம்ம பெத்தவுக கிட்ட இருந்து வாங்குனா நாமெல்லாம் சுயமா நிக்கறதுக்கு அர்த்தமில்லாம போயிரும்! நம் கல்யாணச்செலவுக மொத்தமும் நாம் சுயமாய் சம்பாதித்ததில் செய்வதில் இருக்கிறது சுகமும், பெத்தவுகளின் சந்தோசமும், நம் குடும்ப கவுரவமும்!

நிதிமந்திரி மாதிரி பைசா சுத்தமா திட்டம் போட்டெல்லாம் கல்யாணம் நடத்துனா வேலைக்காவாது! தொட்டதுக்கெல்லாம் காசு பறக்கற நேரமது! அதுக்காக திட்டமிடாமலும் இருக்கக்கூடாது! உங்க திட்டத்துல 60% அதுபடி நடந்தாவே ப்ராஜெட்டு சக்சஸ்தான்! இந்த பொம்பளையாளுக செய்யற செலவையெல்லாம் கணக்குல எடுத்துக்கனுமே தவிர கணக்கு கேக்கப்படாது! அதெல்லாம் உணர்வுகள் வகைப்படும்! நமது பகுத்தறிவை காட்டறதா நெனைச்சுக்கிட்டு "ஒரே ஒரு நாளு கட்டிக்கறதுக்கு 20 ஆயிர ரூவா பட்டுப்புடவையா?!" "ஒரு நெக்லெஸ் வாங்கறதுக்கு 20 பேர்த்த கூட்டிக்கிட்டு ஏழெட்டு கடை ஏறியிறங்கனுமா?"ங்கற உங்க சலிப்பையெல்லாம் அறிவுக்கணைகளாக மாத்தி தொடுத்துக்கிட்டே இருந்தீங்கன்னா அதால அப்போதைக்கு ஒரு பயனும் இருக்காது! "ஆம்பளைகளுக்கு என்னைக்கு இதெல்லாம் வெளங்கியிருக்கு!"ங்கற மொனகலோடு கூட முடியாது! நாளப்பின்ன அந்த பொடவைல ஒரு சின்ன காபிக்கறை பட்டாக்கூட "அன்னைக்கே உங்க நொள்ளைக்கண்ணு பட்டதாலதான் இப்படி"ன்னு கொமட்டுல குத்தறதுல போய் முடியக்கூடும்!


ஆமாங்க! கல்யாணங்கறது ஒரு நாள் கூத்துதான்! ஆனா கெடைச்ச இந்த ஒரு சான்சுலையாவது ஒழுங்கா கூத்து கட்டனுமில்ல? ஆகவே, எல்லா விதத்திலும் ஜமாய்ச்சிருங்க! 10000 கலர் புடவையா? டிசைனர் ஷெர்வானியா? மத்தியானத்துக்கு ரெண்டு ஸ்வீட்டா? சாயந்தரம் ஆர்கெஸ்ட்ராவா? வந்தவுகளுக்கெல்லாம் தாம்பூலப்பையோட திருக்குறள் புத்தகமா? எதுவாக இருந்தாலும் உங்கள் சக்திக்கும் கொள்கைளுக்கும் உட்பட்ட உச்ச அளவெனில் அனைவருக்குமே ஆனந்தம் தான்! தயவு செய்து கல்யாணத்துக்கு வந்தவர்கள் அனைவருக்கும் ஒரேமாதிரி செய்யுங்கள்! சிலரை மற்றும் தேர்ந்தெடுத்து தனியா ஜாக்கெட் பிட்டோ இல்லைனா குங்குமச்சிமிழோ கொடுக்காதீர்கள்! பந்தில பணக்கார பிரபலங்களை பட்டும் விழுந்து விழுந்து கவனிக்காதீர்கள்! நம் அழைப்பை ஏற்றுவரும் அனைவருமே ஒரே தரம்தான். அப்படி கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயமெனில் தயவு செய்து இந்த இடத்தை தவிருங்கள்! எல்லாருமே மனுசங்கதான்! சிலர் மட்டும் மற்றவர்களை விட உசத்தி எனக்காட்டும் இந்த செய்கை உங்களுக்கு கிடைத்த வாழ்த்துக்களை விட காழ்ப்புணர்ச்சியை அதிகம் பெற்றுத் தரக்கூடும்!


ரெண்டுநாள் கல்யாணம், மூணுவேளை விருந்து என இருக்கப்போகிற இந்த நேரத்தில் முடிஞ்சா சில நல்ல காரியங்களும் செய்யுங்க! மண்டபத்திற்கு பக்கத்துல இருக்கற ஒரு முதியோர் இல்லமோ அல்லது குழந்தைகள் காப்பகமோ கண்டுபிடித்து அவர்களுக்கும் அதே விருந்து போடுங்க! மொதபந்தி ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே அவங்களுக்கு அனுப்பி வைச்சிருங்க! சொந்தபந்தங்களின் ஆயிரத்தெட்டு விருப்பு வெறுப்புகளுடன் நடக்கும் கல்யாணத்தில் முகம் தெரியாத அந்த மனுசங்களுக்கு வயிறார சாப்பிடும் அந்த உணவு கொடுக்கும் சந்தோசம், நமக்கு கிடைக்கும் வாழ்த்துக்களை விட எந்த விதத்திலும் குறைந்ததல்ல! ஒரு 100 டிபன், சாப்பாடு எந்த விதத்திலும் நமக்கு அதிக செலவை வைத்துவிடப்போவதில்லை! இது சமூகசேவை இல்லைங்க! நாலுபேரு அந்த சாப்பாடுனால சந்தோசப்பட்ட அது நமக்கு நன்மையா முடியுங்கற சுயநலமாவும் கூட இருக்கலாம்னு எடுத்துக்கங்க.

இந்த ஒரு நாள் கூத்தை கடைசிவரைக்கும் நினைவுல வைச்சிருந்து சந்தோசப்படவோ, மனசுக்குள்ள ஏக்கப்படவோ வைக்கப்போறது நல்ல வீடியோகாரரோட கைங்கர்யம்தான்! அதுவும் தாலிகட்டறதுக்கு முந்தினநாள் பொண்ணுமாப்ளைக்கு மட்டும் நலங்கோ, ரிசப்சனோ முடிஞ்ச அன்னைக்கு நைட்டு ஒரு போட்டோசெஷன் வைப்பாங்க! இது ஆரம்பிக்கறதுக்கே நைட்டு 12 மணிக்கு மேல ஆகிறும்! மண்டபத்தை சுத்தி செடிகொடி இருக்கற எடமாப்பார்த்து கூட்டிக்கிட்டு போய் லைட்டைபோட்டு நிக்கவைச்சி, ஒக்காரவைச்சி, பக்கம்பக்கமா ஒட்டிக்கிட்டு இருக்கறமாதிரி சிரிக்கவைச்சி, ஸ்லோமோசன்ல நடக்கவைச்சி... சும்மா சிவாஜி ஷூட்டிங் தோக்கற அளவுக்கு நம்மை வைச்சி சுட்டுத்தள்ளுவாங்க! அதையெல்லாம் க்ராபிக்ஸ் வேற சேர்த்து, ஸ்விட்சர்லாந்து புல்வெளில ஒக்கார்ந்துகிட்டு இருக்கறமாதிரியோ இல்லைனா நைனிடால் ஏரில கையில ரோசாப்பூவோட ஒரு மெதப்புல மெதக்கறமாதிரியோ விதவிதமா மாத்தி கலக்குவாங்க! அவங்க சொல்லற மாதிரியெல்லாம் வெக்கப்படாம போஸ் கொடுங்க! நமக்கெல்லாம் இந்த ஷீட்டிங்ல நடிச்சாத்தான் உண்டு! ஒரு வேலையை தொழில்னு நினைச்சு செய்யறதுக்கும் மனசுக்குப்பிடிச்ச கலை அப்படின்னு நினைச்சி செய்யறதுக்கும் நிறைய வேறுபாடு உண்டு! நீங்க நல்லா உற்சாகமா இருந்து ஒத்துழைச்சு விதவிதமா போஸ் கொடுக்க ஒத்துழைச்சாத்தான் போட்டோ புடிக்கறவரும் உற்சாகமாகி அம்சமா படமெடுத்துக் கொடுப்பாரு! ஆல்பம் பார்க்கறப்ப நமக்கும் அதே சந்தோசம் மறுபடியும் தொத்திக்கும்! நினைச்சுப்பாருங்க! அரைத்தூக்க கலக்கத்துல உர்ர்ருன்னு மூஞ்சை வைச்சுக்கிட்டு இருந்தா நாளப்பின்ன அதை நமக்கே பார்க்கதோணுமா என்ன? இன்னொன்னும் மனசுல வைச்சுக்கங்க! நம் காதலியுடன் காதலுடன் இருக்கும் கடைசிக்கட்ட தருணங்களின் எவிடெண்சு இது! ஆகவே...



கல்யாணத்துக்கு வரப்போகிற கூட்டாளிக தங்கி கூடிக்கும்மியடிக்க ரூம் போடறதுல இருந்து அவங்களுக்கு சரக்கு தேத்தறதுவரை உங்களுக்கெல்லாம் சொல்லித்தெரிய வேண்டியதில்லை! பேட்சுலர் பார்ட்டியெல்லாம் இன்னனக்கு நேத்தா போறீங்க?! அதைத்தானே அஞ்சாரு வருசமா எவன் கல்யாணம்னாலும் செஞ்சுக்கிட்டு இருக்கோம்! ஆனா அந்த கும்பல ஒரே ஒரு பொறுப்பான ஆளை மட்டும் கண்டு வைச்சுக்கங்க! முகூர்த்ததுக்கு முன்னாடி அத்தனை பேரையும் எழுப்பி மப்பு தெளியவைச்சி, மேலுக்காவது குளிக்கவைச்சி, ஒரு மார்க்கமா தேத்தி, லாட்ஜ் கணக்கு முடிச்சு, தூக்கம் சொருகும் கண்களோட மண்டபத்துல கொண்டுவந்து டெலிவரி செய்யறதுக்கு உதவுவாப்புல! எல்லா கேங்க்லையும் ராஜான்னு ஒருத்தன் இருப்பாங்கற மாதிரி தண்ணிபோடாம, தம்மடிக்காம, ஊத்திக்கொடுத்து , ஸ்நாக்ஸ் வாங்கிவந்து, வாந்திய கழுவி, படுக்கவைக்கறதுக்குன்னே ஒரு பழ ஃப்ரண்டு இருப்பாப்புல! ஆகவே இதுக்கும் நமக்கு பிரச்சனையிருக்காது! இந்த விசயத்தை ஒரு கல்யாணத்துல கோட்டைவிட மக்கா எல்லாரும் விடியவிடிய ஆட்டங்கட்டி 7 மணி முகூர்தத்துக்கு மத்தியானம் 1 மணிக்கு எழுந்து அப்படியே ஊருக்கு போயிட்டானுவ!


கெட்டிமேளம் கொட்ட, தாலிய எப்படி எப்ப கையில எடுத்தோங்கறது வெளங்காம, நாலாப்பக்கமும் இருந்து அரிசிக தலைலையும் கண்ணுலையும் விழ, எப்படி அந்த மூணு முடிச்சை போட்டோம்கறது புரியாம தாலி கட்டீட்டிங்களா? கலக்கீட்டிங்க! அம்புட்டுத்தேன்! "WELCOME TO THE REAL WORLD!" என்னது? இது "The Matrix"ல Morpheus, Neoக்கு சொன்னதா? இதெல்லாம் ஆண்டாண்டு காலமா நம்ப பெருசுங்க சொல்லிக்கிட்டு வர்றதுங்க!!! ஆண்கள் உலகம் என்ற ஒரு மாயை உலகிலிருந்து இருபாலர் உலகம் என்ற நிதர்சன உலகத்திற்கு உங்களை வரவேற்கிறோம்! :))) இனிமேல் உங்களது இன்பம், துன்பம், விருப்பு, வெறுப்பு, இலட்சியம், சாதனை, சோதனை, கொள்கை, புண்ணாக்கு, வாழைமட்டை என எதுவுமே உங்களுடையது மட்டுமல்ல! உங்களது வாழ்க்கையின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எதுவுமே உங்களது முடிவுகளுக்கு மட்டுமே உட்பட்டதல்ல! உங்களுடைய Personal Area என்பது உங்களுக்கானது மட்டுமல்ல! உங்களுடைய நடை, உடை, பாவனை, பழக்கவழக்கம், ரசனைகள், புரிதல்கள் என அனைத்திலும் மாறுபட்ட ஒரு ஜீவனுடன் ஆரம்பிக்கிறது உங்கள் வாழ்க்கைப்பயணம்! உங்களுடைய வாழ்க்கை, அனுபவம், சகிப்புத்தன்மை, காதல், பொறுமை, நட்பு, விட்டுக்கொடுத்தல், பரஸ்பர நேர்மை, பெண்ணீயம் போன்ற அத்தனை நம்பிக்கைகளும் எந்த அளவுக்கு உண்மை என்பதை உங்களுக்கே தெரியாத உங்களை உங்களுக்கு எடுத்துக்காட்டுவதன் மூலம் புரியவைக்கப்போகும் பிரிக்கமுடியாத பிணைப்பில் விரும்பி கைநாட்டு வைத்த உங்கள் தில்லுக்கு முன்னால் பேச்சுலர் வாழ்க்கையில் கிடைத்த சிற்றின்பங்கள் என்பது ஒன்றுமேயில்லை!



கல்யாணம் முடிஞ்ச உடன மாப்ளை அப்படியே பூரிப்புடன் மண்டபத்துல வளைய வருவதும், பொண்ணு சொந்தங்களை பிரியறனேன்னு அவங்களை தனித்தனியா பார்த்து கண்ணை கசக்கறதும் இயல்பான நிகழ்வு! இருவருக்குமே இதுதான் இந்த செயலை செய்வதற்கான கடைசி சந்தர்ப்பம் என்பதால் அனுபவித்து செய்யுங்கள்! :) நாமெல்லாம் அவதி அவதியா 15நாள் லீவுல கல்யாணத்துக்குன்னு நம்ப வீட்டுக்கு வந்திருப்போம்! அவுக எல்லாம் வீட்டிலிருந்து நம்பிக்கட்டியவனுடன் விடுதலை என கெளம்பி வர்றவுக! நமக்கு வீட்டுலையே நிம்மதியா இருக்கனும்னு தோணும். அவங்களுக்கு புது இடம்கறதால வெளில காதலுடன் சிறகடிக்கத்தோணும்! ஆகவே மக்களே! இந்த தேனிலவு என்பதை தாலி கட்டிய 10 நாட்களுக்குள் நிறைவேற்றிவிடுங்கள்! அது கொடையோ, கோவாவோ இல்லை மொரீசியஸோ மறக்காம கொஞ்சம் சிரமம் பார்க்காம போயிருங்க! இதுல தவற விட்டீங்கன்னா, இந்த சான்சு நார்மல் குடும்பம் குட்டின்னு வந்தப்பறம் என்னென்னைக்கும் கிடைக்காது! கெடைச்சாலும் முக்கியமா அந்த காதல்மயக்கமும் கெரக்கமும் கண்டிப்பா இருக்காது! "வீட்டுல கேஸ் மூடிவைச்சமா?", "ஆபீசுல லேட்டஸ்ட் பாலிடிக்ஸ் நெலவரம் என்ன?" ங்கற நெனப்புதான் மனசுல இருக்குமே ஒழிய இயற்கை அழகையும், இறைவன் நமக்காக எனவே அளித்த பரிசின் அழகையும் ரசிக்கற மனநிலை இருக்காதப்போவ்! தேனிலவு என்பது நமக்கு இல்லறத்தின் ஆரம்ப எஞ்ஜாய்மெண்டு... அவிங்களுக்கு ஒருபக்க விடுதலையின் அறிவிப்பு சாசனத்தின் முதல்பத்தி... சுருக்கமா சொன்னா தேனிலவை தவற விட்டவன் வாழ்க்கை, சொர்க்கத்தை பைபாசுல தாண்டி வண்டிய நரகத்தில் ஹால்ட் அடிச்சதுக்கு சமம்!

ஆகக்கூடி, நடந்துக்கறமோ இல்லையோ, அய்யன் சொன்ன இந்த குறளை மனசுல ஒரு ஓரமா பதியம் போடுங்க! அது செடியா மரமா நாம நடந்துக்கறதை பொறுத்து அதுவாகவே வளர்ந்துரும்...

"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது"

என்னது?! உங்க அய்யன் இதெல்லாம் சொன்னதில்லையா? இது அய்யன் வள்ளுவரப்பு! என்னது? வள்ளுவர் யாரா? ம்ஹீம்! இதெல்லாம் ஆவறதில்லப்பா! (என்னதான் இன்னைக்கு வைகைப்புயல் வந்துட்டாலும் நமக்கு அய்யன் என்னைக்குமே கவுண்டபெல்தான்! :) )

--------

கருத்துகள்

  1. //நம் கல்யாணச்செலவுக மொத்தமும் நாம் சுயமாய் சம்பாதித்ததில் செய்வதில் இருக்கிறது சுகமும், பெத்தவுகளின் சந்தோசமும், நம் குடும்ப கவுரவமும்!//
    point taken :)

    //நம் காதலியுடன் காதலுடன் இருக்கும் கடைசிக்கட்ட தருணங்களின் எவிடெண்சு இது!//
    நடு நடுவால.. இப்படியே பீதிய கிளப்பிவிட்ருங்க. :)

    பதிலளிநீக்கு
  2. //"ஒரு நெக்லெஸ் வாங்கறதுக்கு 20 பேர்த்த கூட்டிக்கிட்டு ஏழெட்டு கடை ஏறியிறங்கனுமா?"ங்கற உங்க சலிப்பையெல்லாம்//

    நல்ல நாள்ளயே இந்தப் பொம்பளை ஆளுக கூட ஷாப்பிங் போறது மாதிரி ஒரு கஷ்டமான வேலை எதுவுமே இல்லை.ச்ரீ தேவி டெக்ஸ்டைல்சில ஆரம்பிச்சாங்கன்னா க்ராஸ் கட் ரோட்டில எல்லாக் கடைகள்ளயும் புகுந்திட்டு நொட்டை நொள்ளை சொல்லீட்டுத் திரும்பவும் அதே ச்ரீதேவிக்கே வந்து மொதல்ல ரிஜெக்ட் செஞ்ச துணிகளையே எடுப்பாங்க பாருங்க.அப்போ அந்த சேல்ஸ் பசங்க மொகத்தைப் பார்க்க பயந்திட்டே நான் கடைக்கு வெளியேவே நின்னுக்குவேன்.

    //சிலர் மட்டும் மற்றவர்களை விட உசத்தி எனக்காட்டும் இந்த செய்கை உங்களுக்கு கிடைத்த வாழ்த்துக்களை விட காழ்ப்புணர்ச்சியை அதிகம் பெற்றுத் தரக்கூடும்!//

    அதே..அதே...

    //இந்த விசயத்தை ஒரு கல்யாணத்துல கோட்டைவிட மக்கா எல்லாரும் விடியவிடிய ஆட்டங்கட்டி 7 மணி முகூர்தத்துக்கு மத்தியானம் 1 மணிக்கு எழுந்து அப்படியே ஊருக்கு போயிட்டானுவ!//

    என்ன அனுபவம் பேசுதுன்னு கேட்டா மட்டும் உண்மையா சொல்லீடப் போறீங்க???

    //எப்படி அந்த மூணு முடிச்சை போட்டோம்கறது புரியாம தாலி கட்டீட்டிங்களா//

    அட.நான் கேள்விப்பட்ட வரை மொத முடிச்சத் தான் மாப்பிள்ளை போடுவாராம்.மீதி ரெண்டும் அவங்க அக்கா/தங்கச்சிமாருங்க தான் போடுவாங்களாம்.

    //உங்களுடைய வாழ்க்கை, அனுபவம், சகிப்புத்தன்மை, காதல், பொறுமை, நட்பு, விட்டுக்கொடுத்தல், பரஸ்பர நேர்மை, பெண்ணீயம் போன்ற அத்தனை நம்பிக்கைகளும் எந்த அளவுக்கு உண்மை என்பதை உங்களுக்கே தெரியாத உங்களை உங்களுக்கு எடுத்துக்காட்டுவதன் மூலம் புரியவைக்கப்போகும் பிரிக்கமுடியாத பிணைப்பில் விரும்பி கைநாட்டு வைத்த உங்கள் தில்லுக்கு முன்னால் பேச்சுலர் வாழ்க்கையில் கிடைத்த சிற்றின்பங்கள் என்பது ஒன்றுமேயில்லை!//

    ஒரெ வாக்கியத்தில 40 வார்த்தைகளா???

    //தேனிலவை தவற விட்டவன் வாழ்க்கை//

    ஹனிமூனுக்கெ தனியாப் போனவன் கதை கேள்விப் பட்டிருக்கீஙளா?

    பதிலளிநீக்கு
  3. இந்தப் பார்ட் ரொம்ப சீரியஸா ஆரம்பிக்குது.
    காலைல இன்னும் தூக்கக் கலக்கம், ஒண்ணும் புரிய மாட்டேங்குது..

    எப்படியும் அடுத்த விசிட்ல ஏதாச்சும் உருப்படியா பின்னூட்டம் போடறேன்.. :)

    சட்டுனு தோணினது :-
    // முகூர்தத்துக்கு மத்தியானம் 1 மணிக்கு எழுந்து அப்படியே ஊருக்கு போயிட்டானுவ!//
    ஒரு நண்பர் கல்யாணத்துக்காக கோவை போய்ட்டு, சாயங்காலம் தானே ரிசப்ஷன்னு சொல்லி ஊட்டிக்கு ட்ரிப் போட்டு ரிசப்ஷனை மொத்தமா மிஸ் பண்ணி (சாப்பாடு கூட தீர்ந்து போச்சுங்க :(), கல்யாணத்துக்கு வந்தோமா இல்லை சுத்தி பார்க்க வந்தோமான்னு குழப்பற அளவுக்குப் போனது நினைவு வருது.. பாவம், என்னை நம்பி தான் எல்லாரையும் ஊட்டிக்கு அனுப்பி வச்சாரு அந்த நண்பர்.. :))).

    முகூர்த்தையும் நாங்க நாலுபேர் தான் அட்டென்ட் பண்ணோம்.. நீங்க சொல்லும் கேஸ் எல்லாம் சாயங்காலம் ட்ரெயின் பிடிக்கத் தான் எழுந்தாங்க :)

    பதிலளிநீக்கு
  4. ஆகவே மக்களே! இந்த தேனிலவு என்பதை தாலி கட்டிய 10 நாட்களுக்குள் நிறைவேற்றிவிடுங்கள்! ... இதுல தவற விட்டீங்கன்னா, இந்த சான்சு நார்மல் குடும்பம் குட்டின்னு வந்தப்பறம் என்னென்னைக்கும் கிடைக்காது!//

    ஆமாங்க..ஆமா... 33 வருஷம் முடிஞ்சும் அந்த சோகம் இன்னும் உள்ளே இழையோடுதுங்க, இளவஞ்சி

    பதிலளிநீக்கு
  5. ----ஒரெ வாக்கியத்தில 40 வார்த்தைகளா???---

    சுதர்சன்... இது என்ன பிரமாதம் 110 !!!!!! ஆச்சரியமாப் போட்டுத் தள்ளியிருக்காரே!!!!!!!!

    நிறுத்தற்குறி உங்க தட்டச்சுப்பொறியில் பழுதாகி விட்டதாலா?
    ஆச்சரியத்தை அடக்க முடியாததாலா??!!! ;-)

    பதிலளிநீக்கு
  6. ராசா,

    //நடு நடுவால.. இப்படியே பீதிய கிளப்பிவிட்ருங்க. :) //

    கவலைப்படாதீங்க. பழகிரும்! :)))

    ****

    சுதர்சன்,

    //மீதி ரெண்டும் அவங்க அக்கா/தங்கச்சிமாருங்க தான் போடுவாங்களாம்//

    பார்த்தீங்களா! எனக்கு தெரியலை! அப்ப நான் சொன்னது உண்மைதானே?! :)

    //ஒரெ வாக்கியத்தில 40 வார்த்தைகளா???// நம்ப மக்கா கஷ்டத்தை சொல்லவந்தா அப்பிடியே பொங்கிருது! ஹிஹி..

    இது ஒரு வியாதியாகவே ஆயிருச்சு! எப்படி சரி செய்யறதுன்னு தெரியலை. சீக்கிரம் எதனையாவது படிச்சு மாத்திக்கறேன்!

    //ஹனிமூனுக்கெ தனியாப் போனவன் கதை கேள்விப் பட்டிருக்கீஙளா? // போன இடத்துல சண்டை வந்து தனித்தனியா இருந்தவங்கள தெரியும்! ஒரு ஜோடி குலுமனாலி போக, அந்த இடம் பார்த்ததில்லைன்னு கூடப்போன அம்மாஞ்சியையும் தெரியும்! நீங்க சொல்லறது இன்னும் சுவாரசியமா இருக்கு. சீக்கிரம் தனிப்பதிவா இறக்கிடுங்க... :)

    ****
    பொன்ஸ்,

    //ஒண்ணும் புரிய மாட்டேங்குது.. //

    கதை கல்யாணம் வரைக்கும் வந்துருச்சி இல்ல? இனிமே அவ்வளவு ஈசியா புரியாது! :)

    பதிலளிநீக்கு
  7. //நம் கல்யாணச்செலவுக மொத்தமும் நாம் சுயமாய் சம்பாதித்ததில் செய்வதில் இருக்கிறது சுகமும், பெத்தவுகளின் சந்தோசமும், நம் குடும்ப கவுரவமும்!// சரியா சொன்னீங்க! எப்படி இப்படி நிறைய விஷயங்கள், நீங்க சொல்றது நம்மலோட வாழ்க்கை பதிப்புல ஒத்து போகுது!

    பதிலளிநீக்கு
  8. பாலா,

    //இது என்ன பிரமாதம் 110 !!!!!! //

    மேல சொன்ன வியாதில இதையும் சேர்த்துகிடுங்க! :) அடடா! மறுபடியும் ஒன்னு! நல்லவேளை! தப்புதப்பா எழுதறதை மன்னிச்சு விட்டுட்டீங்க போல! :))) இதையும் சீக்கிரம் மாத்திக்கிறங்க!

    ****
    தருமிசார்,

    //33 வருஷம் முடிஞ்சும் அந்த சோகம் இன்னும் //

    இந்த சங்கத்துல நீங்கதான் சீனியர் போல.. நானெல்லாம் 3 வருசம் முன்னாடி சேர்ந்த கடைக்குட்டி! :)))

    ****
    சுதர்சன்,

    ஒன்னு விட்டுட்டேன்!

    //உண்மையா சொல்லீடப் போறீங்க???//

    சரி.. சரி... 1 மணிக்கு எழுந்து அப்படியே ஊருக்கு போயிட்டோம்! :)

    பதிலளிநீக்கு
  9. வெளிகண்ட நாதர்,

    //நீங்க சொல்றது நம்மலோட வாழ்க்கை பதிப்புல ஒத்து போகுது! //

    இதைத்தான் Great Men think... ஹிஹி...

    பதிலளிநீக்கு
  10. //மண்டபத்திற்கு பக்கத்துல இருக்கற ஒரு முதியோர் இல்லமோ அல்லது குழந்தைகள் காப்பகமோ கண்டுபிடித்து அவர்களுக்கும் அதே விருந்து போடுங்க//

    சரியா சொன்னீங்க

    பதிலளிநீக்கு
  11. இளவஞ்சி, பொண்ணுதான் தெரியாத்தனமா நமக்கு கழுத்த நீட்டிருச்சேன்னு., காலைல எந்திருச்ச உடனே குளிக்காம செண்ட் அடிச்சுப் படுத்தாதிங்க... மாலை மசங்கிற நேரம் சும்மாவே தட்டாடி, தடுமாறித்தான் நடப்போம் அப்ப கூலிங்கிளாஸ் போட்டு அதிர்ச்சிப் படுதாதிங்க... நல்ல வெயில் காலத்துல டக்கின் பண்ணி., ஷூ போட்டு டக்கு, டக்குன்னு நடக்காதீங்க... அப்புறம் உங்கள் அறிவின் அளவை பொண்ணு ஒரு பார்வையிலேயே அளந்துரும் அதனால் நீங்கள் எதையும் அளந்து விடாதீர்கள்ன்னு பாசமா உங்க மக்களுக்கு சொல்லிக் குடுப்பீங்களா....? இதெல்லாம் ச்சும்மா தமாஸ்தான்... அருமையான பதிவுகள்.

    //நம் கல்யாணச்செலவுக மொத்தமும் நாம் சுயமாய் சம்பாதித்ததில் செய்வதில் இருக்கிறது சுகமும், பெத்தவுகளின் சந்தோசமும், நம் குடும்ப கவுரவமும்//

    அருமை. பொண்ணு வீட்டுல வண்டிய வாங்கி, சொர்க்கத்துல ஹால்ட் அடிச்சாலும்., தேனிலவு காலம் கடந்ததும் நகரத்திற்கு உங்களை அறியாமலேயே டிக்கெட் புக் பண்ணி விடுகிறீர்கள். இதை இப்பதிவுகளை விடாமல் ஊன்றிப் படிக்கும் (நிச்சயம் மணம் செய்ய காத்திருப்போர்தான் படிப்பாங்க) தம்பிகள் உணர்ந்து கொள்வார்கள்.

    பதிலளிநீக்கு
  12. சூப்பர் பதிவு போங்க!
    போன வாரம் சித்தன் (நம்ம வலைப் பதிவர் ) பொண்ணு திருமணம் நடந்தது, நீங்க சொன்ன இன்ன பிற கொசுறுகளுடன். ப்ஃபே விருந்து வேணுமின்னு சொன்னாள். பெரியவங்களெல்லாம் அதுக்கு வேஸ்ட் பண்ற காசை உன் பெயரில் பிக்ஸட்லே போடறோம்னு சொன்னாங்க. `பணம் என்னைக்கு வேணா சம்பாதிச்சுப்போம், திருமணம் ஒருநாள் தான் நடக்கும்'னு சொன்னாள். உங்க பதிவு வாசிச்சிருப்பா போலும்!!!

    பதிலளிநீக்கு
  13. Ilavanji,

    Neethu kannalam mudichu innik ammavoda computer munnadi ukkanthu padicha modhalla ungalodathu than..
    Pongapuu appidiye pirichu vichu meenju irukeenga

    vekka vekkama varutham -- vuutukaramma solranga

    பதிலளிநீக்கு
  14. அப்டிப்போடு,

    // பொண்ணு வீட்டுல வண்டிய வாங்கி, சொர்க்கத்துல ஹால்ட் அடிச்சாலும்., தேனிலவு காலம் கடந்ததும் ***நகரத்திற்கு*** உங்களை அறியாமலேயே டிக்கெட் புக் பண்ணி விடுகிறீர்கள். //

    ???

    :-(

    பதிலளிநீக்கு
  15. தாணு,

    இந்தக்காலத்து மக்கள்ஸ் எல்லாம் அவ்வளவு தெளிவா இருக்காங்க! :)

    ****
    Jala,

    வருகைக்கு நன்றி

    ****
    லதா,

    சரிவிடுங்க.. பாவம் அவங்களுக்கு அம்புட்டு நல்ல மனசுபோல! 'நரகம்' சொல்ல வரமாட்டேங்குது! :)

    பதிலளிநீக்கு
  16. நந்தன்,

    நேத்துதான் கல்யாணமா? சொல்லவேல்ல?! :)

    மணமக்களுக்கு மனம்கனிந்த திருமணநாள் வாழ்த்துக்கள்!

    நேத்துபோட்ட இந்த பதிவுதான், நேற்றைய உங்க கல்யாணத்துக்கு இந்த அண்ணனோட மொய்! :))))

    வாழ்க மணமக்கள்...

    பதிலளிநீக்கு
  17. அனுசுயா,

    நன்றி

    ****
    சிவா,

    //கும்பலாக தல யாத்திரை//

    எல்லாருக்கும் வாய்க்காது. நாமதான் ஸ்ட்ராங்கா நின்னு ஏதாவது கோல்மால் செய்து இதை ஒப்பேத்தனும். கல்யாணத்துக்கு அப்பறமா இதை ப்ளான் செஞ்சா இப்படித்தான்! மத்தவங்க இழுக்கற இழுப்புக்கு போயே ஆகனும்! கல்யாணத்துக்கு முன்னாடியே டிக்கெட்டு, ரிசார்ட் புக்கிங்னு பக்காவா செஞ்சுட்டு, வீட்டுல அவங்க சொல்லற இடத்துல முக்கியமானதுக்கு தலைய காட்டிட்டு, டாட்டா சொல்லிட்டு போய்க்கிட்டே இருக்கனும்! :)

    ****
    அப்டிப்போடு!

    //உங்க மக்களுக்கு சொல்லிக் குடுப்பீங்களா....? //

    அதுசரி! நீங்க சொல்லற அந்த பிரம்மரகசியங்க எல்லாம் தெரியாதனால தானே இந்த பாடுபடறோம்! :)

    //உங்கள் அறிவின் அளவை பொண்ணு ஒரு பார்வையிலேயே அளந்துரும் //

    ம்ம்ம்... எங்களுக்கு வாழ்க்கை முழுசும் ஆனாலும் பொம்பளையாளுக மனசுல என்ன இருக்குன்னு வெளங்கமாட்டேங்குது :)

    உங்கள் ஊக்கங்களுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  18. /33 வருஷம் முடிஞ்சும் அந்த சோகம் இன்னும் //

    இந்த சங்கத்துல நீங்கதான் சீனியர் போல.. நானெல்லாம் 3 வருசம் முன்னாடி சேர்ந்த கடைக்குட்டி! :)))//
    அடடே, நீங்களும் கோட்டை விட்ட ஆளா...அடப் பாவமே.
    சரி விடுங்க..

    பதிலளிநீக்கு
  19. //நமது பகுத்தறிவை காட்டறதா நெனைச்சுக்கிட்டு "ஒரே ஒரு நாளு கட்டிக்கறதுக்கு 20 ஆயிர ரூவா பட்டுப்புடவையா?!" "ஒரு நெக்லெஸ் வாங்கறதுக்கு 20 பேர்த்த கூட்டிக்கிட்டு ஏழெட்டு கடை ஏறியிறங்கனுமா?"ங்கற உங்க சலிப்பையெல்லாம் அறிவுக்கணைகளாக மாத்தி தொடுத்துக்கிட்டே இருந்தீங்கன்னா அதால அப்போதைக்கு ஒரு பயனும் இருக்காது! "ஆம்பளைகளுக்கு என்னைக்கு இதெல்லாம் வெளங்கியிருக்கு!"ங்கற மொனகலோடு கூட முடியாது! நாளப்பின்ன அந்த பொடவைல ஒரு சின்ன காபிக்கறை பட்டாக்கூட "அன்னைக்கே உங்க நொள்ளைக்கண்ணு பட்டதாலதான் இப்படி"ன்னு கொமட்டுல குத்தறதுல போய் முடியக்கூடும்!//


    :))

    கொமட்டுல அடி பலமா?

    பதிலளிநீக்கு
  20. //?! அதைத்தானே அஞ்சாரு வருசமா எவன் கல்யாணம்னாலும் செஞ்சுக்கிட்டு இருக்கோம்! ஆனா அந்த கும்பல ஒரே ஒரு பொறுப்பான ஆளை மட்டும் கண்டு வைச்சுக்கங்க! முகூர்த்ததுக்கு முன்னாடி அத்தனை பேரையும் எழுப்பி மப்பு தெளியவைச்சி, மேலுக்காவது குளிக்கவைச்சி, ஒரு மார்க்கமா தேத்தி, லாட்ஜ் கணக்கு முடிச்சு, தூக்கம் சொருகும் கண்களோட மண்டபத்துல கொண்டுவந்து டெலிவரி செய்யறதுக்கு உதவுவாப்புல! எல்லா கேங்க்லையும் ராஜான்னு ஒருத்தன் இருப்பாங்கற மாதிரி தண்ணிபோடாம, தம்மடிக்காம, ஊத்திக்கொடுத்து , ஸ்நாக்ஸ் வாங்கிவந்து, வாந்திய கழுவி, படுக்கவைக்கறதுக்குன்னே ஒரு பழ ஃப்ரண்டு இருப்பாப்புல! ஆகவே இதுக்கும் நமக்கு பிரச்சனையிருக்காது! இ//


    இதுக்கு தனிபதிவு போடுங்கய்யா..எவனும் முகூர்த்தத்துக்கு வர்றதில்ல..தண்ணி அடிச்சுட்டு கவுந்திடறானுங்க..

    பாத்ரூமில தண்ணிய திறந்துவிட்டுட்டு தூங்கி லாட்ஜ் முழுவதும் தண்ணி நிரம்பி அவனுங்க மாப்பிள்ளை வீட்டுக்கு ஆள் அனுப்பி..

    பதிலளிநீக்கு
  21. முத்து,

    //கொமட்டுல அடி பலமா? //

    ஹிஹி...

    // இதுக்கு தனிபதிவு போடுங்கய்யா//

    அதெல்லாம் ஒரு பதிவுல எழுதி முடிக்கற கதைகளா?! ஒக்கார்ந்தம்னா விடியவிடிய பொங்கலாம்! :)))

    நேரம் வரட்டும்.. சில கதைகளை எடுத்துவிடலாம்!

    பதிலளிநீக்கு
  22. கேட்(பட்)டறிவுரை :

    அ. பெண் பார்க்கும்போது பெண்ணை பிடித்ததுபோல தோன்றினால், தயவுகூர்ந்து பெண்ணோடு தனியே கொஞ்சம் பேசிப்பாருங்கள். உங்கள் விருப்பு, வெறுப்புகள், எதிர்பார்ப்புகள், இத்யாதி இத்யாதிக்கள் ...

    (தொடரும்)

    பதிலளிநீக்கு
  23. கேட்(பட்)டறிவுரை :

    ஆ. நீங்கள் கிராமத்துப்பின்னணி கொண்ட ஆடவராயிருப்பின் பெருநகர நாகரிகத்தில் பிறந்து வளர்ந்த பெண்ணை தேர்வு செய்யாதீர்.

    (தொடரும்)

    பதிலளிநீக்கு
  24. கேட்(பட்)டறிவுரை :

    இ. பெண் விருப்பத்தோடுதான் ஒத்துக்கொள்கிறாரா அல்லது நிர்ப்பந்தமா என்பதை தெளிந்துகொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  25. கேட்(பட்)டறிவுரை :

    ஈ. பொருளாதாரரீதியில் உங்களோடு சமநிலையில் இருப்பவரோடு மண உறவு கொள்வதே சிறப்பு. (கொஞ்சம் மேலே கீழே இருப்பதில் தவறில்லை. ஏற்றத்தாழ்வு சீசா போலிருப்பின் கவனம்)

    (தொடரும்)

    பதிலளிநீக்கு
  26. கேட்(பட்)டறிவுரை :

    உ. பழைய காதல்கள் இருப்பின் (இருவருக்கும்) அதுபற்றி பேசி தெளிவு படுத்திக்கொள்ளல் சாலவும் நன்று. (நண்பரொருவரின் மனைவி, திருமணத்துக்குப்பிறகும் தன் முன்னாள் காதலரோடு தொடர்பில் இருந்திருக்கிறார். அதுவும் எப்படி ? அந்த மு.கா ‘உன் ஹஸ்பன்டோட first night நடந்திடிச்சா ?’ என்று கேட்டு, இந்த பெண்ணும் ‘ஏன் ?’ என்று கேட்டு, ‘இல்லையென்றால் சொல், நான் வந்து நடத்தி வைக்கிறேன்’ என்று சொல்லும் அளவுக்கு. அந்த மு.கா, இன்னமும் நண்பரின் மனைவியை "டியர்", "பேபி" என்றுதான் அழைப்பது வழக்கமாம். நண்பர் எச்சரித்தும் கேளாமல் தொடரவே, நண்பர் மாமனார் குடும்பத்தை அழைத்து விபரம் சொல்லி மனைவியை அனுப்பி வைத்துவிட்டு இப்போது வேறு பெண்ணை தேடிக்கொண்டிருக்கிறார்)

    (தொடரும்)

    பதிலளிநீக்கு
  27. ஊ. இதற்கு முன்னால் வேறு பெண்/மாப்பிள்ளை பார்த்து அது கைகூடாது போயிருப்பின் அதை மறந்து (அல்லது மனதின் அடியாழத்தில்) புதைத்துவிடல் நலம். [நெருங்கிய உறவினனின் - நண்பன் மாதிரி, அதனாலே ர் இல்லாமல் ன் விகுதி - மனைவி, முதலிரவன்றே தான் வெளிநாட்டில் வேலைபார்த்தபோது பார்த்த மாப்பிள்ளை பற்றி ப்ரஸ்தாபித்திருக்கிறார். வெளிநாட்டில் இருந்த இருவரும் போனில் அடிக்கடி பேசியிருக்கிறார்கள். வயது வித்யாசம் 9 என்பதால் இந்த பெண்ணின் அம்மா, 'வயது வித்யாசம் அதிகமிருப்பின் ஆணுக்கு பெண் மீது சந்தேகம் வரும்' என்று சொல்லி தவிர்த்திருக்கிறார். ஒத்துவராமற்போகவே 'பரவாயில்லை 'நாம் நண்பர்களாயிருப்போம்' என்று இந்தப்பெண் சொன்னாராம். ஆனால் அந்த நபரோ 'if you don't want to be my wife, I don't want you to be my friend' என்றிருக்கிறாராம். அப்படி சொன்னவருடைய புகைப்படம் இன்னும் தன் mail box-ல் வைத்திருப்பதாகவும் இந்த பெண் கூறவே, சற்றே முகம் சுளித்த இவன் முதலிரவென்பதால் மௌனம் காத்திருக்கிறான், பின்னொருநாளில் மனைவி அந்த நபரின் புகைப்படத்தை காட்டியபோது, அந்த நபர், 'no problem, we can be friends' என்று அந்த mail-ல் சொல்லியிருக்கவே, உறவினன் சற்றே அழுத்தமாக, 'I don't want you to be my friend என்று சொன்னவனின் புகைப்படத்தை இன்னும் உன் mail box-ல் வைத்திருப்பது எதற்காக ? 'I don't want you to be my friend' என்று போனில் சொன்னவன் எப்படி 'we can be friends, no problem' என்று சொன்னான், எது உண்மை எது போய் ?' என்று கேட்கவும் வார்த்தை தடித்துப்போய் (அந்த பையனின் பெற்றோர் ஒரு சந்திப்பில் இந்த பெண்ணின் பெற்றோரிடம் இன்னும் உங்கள் பெண்ணின் புகைப்படம் எங்களிடம் உள்ளது என்று கூறவும், அதனாலென்ன பரவாயில்லை என்று பெண்ணின் அப்பா சொல்லியிருக்கிறாராம் (?!)) they ended up in divorce.]

    பதிலளிநீக்கு
  28. Last but not the least .....

    நீங்கள் படுக்கையில் கில்லாடியாய் இல்லாத படசத்தில் மனதை திடப்படுத்திக்கொள்ளவும். என் முன்னாள் roommate ஒருவன் மணமான சில மாதங்களில் ஒருமுறை படுக்கையில் சற்று இயலாமற் போகவே (performance anxiety என்று பிற்பாடு சொன்னான்) தன் முன்னாள் காதலர் பெயரை சொல்லி, மிக சுவாதீனமாக "இன்னேரம் அவன விட்டா அடிச்சி நகத்தி இருப்பானோஓஓஓஓ என்னமோ தெரியலயா" என்று சொல்ல (இந்த பெண் மணமாவதற்கு முன் வேலை நிமித்தம் பல நாடுகள் சுற்றியவர்; மாநகர நாகரிக மங்கை) அதிர்ந்து போன நண்பர் பெண்ணை பெற்றவர்கள் வீட்டுக்கி அனுப்பிவிட்டு (உங்கள் பெண்ணுக்கு புருஷன் தேவையில்லை; பொலிகாளைதான் தேவை; தேடி, சோதித்து, திருமணம் செய்து வையுங்கள்' என்ற அட்வைஸுடன்) ஒருநாள் தண்ணியடித்துவிட்டு எங்கள் கூட்டத்தில் நடுவே இதை சொல்லிவிட்டு 'நாற...' என்று ஆரம்பித்து திட்டினான் பாருங்கள் அந்த பெண்ணை. அப்பப்ப்பா .... (நானா அவளை தேடி ஓடினேன், அவள் அப்பாதான் போட்டோ கூட அனுப்பாமல் 'பொண்ணு பாக்க வா வா'-னு கூப்பிட்டு, நல்ல குடும்பமா தெரிஞ்சுதே, கொஞ்சம் friendly admosphere-ஆ இருந்துச்சே-னு கல்யாணம் பண்ணினா இப்படி அசிங்கப்படுத்திட்டாளே-டா ! பொண்ணு பாக்க போனப்பவே தனியா என்கிட்ட கேட்டிருந்தா நா நேர்மையா 'நா ஆவரேஜ்தான், அடிச்சி நகத்தற அளவுக்கெல்லாம் இல்லை'-னு சொல்லிட்டே வந்திருப்பேனே-டா)

    எல்லோர் போதையையும் சரேலென்று இறங்கியோட சொல்லவியலா அதிர்ச்சியிலும் திகைப்பிலும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம் ...

    ஏற்கனவே ஒருமுறை படுக்கையில் இரண்டாம் சுற்றுக்கு இயலாமற்போகவே, ‘போய்யா தாத்தா !’ என்றிருக்கிறாராம் அந்த பெண்.

    ஒண்ணுமே புரியலேஏஏஏஏ ஒலகத்துலே .....

    பதிலளிநீக்கு
  29. தொடரின் ஆறு பாங்கங்களையும் ஒட்டு மொத்தமாகப் படித்தேன். அனுபவம் விளையாடுகிறது. எனக்கு மண நேரம் வரும்போது இன்னொரு முறை referenceக்காகப் படிக்க வேண்டும் :)

    பதிலளிநீக்கு
  30. உதயகுமாரின் வலைச்சரம் பதிவில் இருந்து வந்தேன்!!!
    முழுத்தொடரையும் படித்து விட்டேன்.
    நல்ல சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள்!! :-)

    வாழ்த்துக்கள்!! :-)

    பதிலளிநீக்கு
  31. தொடரின் அனைத்து பாங்கங்களையும் படித்தேன்.மிகவும் Practical-ஆக இருந்தது! வாழ்த்துக்கள் :-)

    பதிலளிநீக்கு
  32. தொடரின் ஆறு பாகங்களையும் ஒரே மூச்சில் இடையிடையே காபி டீ குடித்துக் கொண்டு தான் படித்து முடித்தேன்.

    அருமை !!! கொஞ்ச காலம் முன்னாடியே படிச்சிருக்க வேண்டியதுன்னு நினைக்குறேன் !!!

    நண்பர்களிடமும் பகிர்ந்து கொண்டுள்ளேன். :)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு