முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு வேளை உணவு



Image hosted by Photobucket.com


கவல் தொழில்நுட்பத்துறையில் எல்லோரும் எங்கே போவார்கள்? அமெரிக்கா? இங்கிலாந்து? சிங்கப்பூர்? எனக்கு முதன்முதலில் வாய்த்தது போட்சுவானா!! என்னது? உங்களை திட்டறேனா?! இல்லைங்க... தென்னாப்ரிக்காவின் மேல்பகுதியில் நிஜமாகவே இப்படி ஒரு நாடு இருக்குதுங்க... எனக்கு இந்த வேலை கிடைத்ததும் முதலில் செய்தது அட்லசை எடுத்து போட்சுவானா எங்கே இருக்கிறது என தேடியதுதான். நமக்கும் ஒரு வீராப்புங்க.. அதென்ன.. எல்லோரும் போற ஊருக்கே நாமும் போறது? புதுசா ஒரு நாட்டுக்குத்தான் போவமேன்னு கெளம்பிட்டேனுங்க... நாட்டோட மொத்த சனத்தொகைல 90% ஆப்ரிக்க இன மக்கள். மத்தவங்க எல்லாம் பக்கத்து நாட்டிலிருந்து வந்தேரிகள்! முக்கிய தொழில் மாட்டிறைச்சி மற்றும் வைரச்சுரங்கம். மொத்த வைரச்சுரங்கங்களையும் ஏமாந்து போய் பிரிட்டீஷ் கிட்ட மொத்தமா குத்தகைக்கு விட்டதில் அவர்கள் வெட்டியது போக தரும் கொஞ்ச பணத்திலேயே நாட்டோட பட்ஜெட்டு சர்பிளஸ்ல ஓடுதுன்னா பார்த்துக்கங்க. இன்னும் தோண்டப்படாத சுரங்கங்கள் மட்டுமே 70% க்கு மேல். சமீபத்தில்கூட சுரங்கம் தோண்டுவதற்காக பழங்குடியினரை அவர்கள் ஊரை விட்டு துரத்திய பிரச்சனையை செய்தியாக படிச்சிருப்பீங்க.. இத்தனை தகவல்களையும் திரட்டிகிட்டு "சரி.. நம்ப கூட துணைக்கு இருந்து கெடுக்க அங்க ஒரு பயலும் இருக்க மாட்டான்! இனிமே நிஜமாவே வாழ்க்கையில திருந்தியாகனும்.." என்றெல்லாம் மனசுக்குள்ள நினைச்சுகிட்டு துணிமணிகளையும் சமையல் செய்யறதுக்கு(!?) ஒரு குக்கரையும் வாங்கிகிட்டு அங்க போய் இறங்குனா ஒரே ஆச்சரியம்!! போட்சுவானா தலைநகர் கபரோனில் எங்கெங்கு பார்க்கினும் தமிழர்களும் மலையாளிகளும் இலங்கைத்தமிழர்களும்... நம்ப ஆளுங்க எந்த நாட்டைத்தான் விட்டு வைச்சாங்க? சந்தோசத்திற்கு கேக்கவா வேணும்? சரி இன்னும் கொஞ்ச நாள் கழிச்சி வாழ்க்கைல திருந்திக்கலாம்னு முடிவுசெஞ்சு கும்பலோட கும்பலா ஐக்கியமாகிட்டனுங்க.


அங்க இருக்கற கருப்பருங்ககூட நம்ப ஆளுங்க ஒட்டவே மாட்டாங்க.. நம்பள அங்க இருக்கற லோக்கல் தென்னாப்ரிக்க வெள்ளைக்காரங்க மதிக்கவே மாட்டாங்க.. இவங்களை பிரிட்டீஷ் வெள்ளைக்காரங்க சுத்தமா கண்டுக்கமாட்டாங்க... ஒலகம் பூரா ஒரே கதைதான்! :) நான் வேலை பார்த்தது போட்சுவானா அரசாங்க ப்ராஜெட்டுக்குங்க. 5 நாள் வேலை போக வார இறுதில முழுசா ஓய்வுதான். நம்மாளுங்க அங்கனயும் ஒரு கோவில கட்டி கும்பாபிசேகம் செஞ்சி பூஜையெல்லாம் நாள் தவறாம செஞ்சு தீபாவளி, நவராத்திரின்னு அத்தனை பண்டிகைகளையும் கொண்டாடி பட்டைய கெளப்பிருவாங்க. நாங்களும் என்னைக்கெல்லாம் அன்னதானம் பண்ணறாங்களோ அன்னைக்கெல்லம் தவறாம பக்திப்பழமா ஆஜராகிடுவோம்.. நாங்கன்னா நான், சுனில், பானின்னு ஒரு பெரிய பட்டாளம்! அங்கயும் ஒரு தமிழ்மன்றம் வெற்றிகரமா நடந்துகிட்டு இருந்ததுங்க.. பண்டிகை போதெல்லாம் நடனம், நாடகம்னு நிறைய பேரு கலந்துகிட்டு தமிழ் கலாச்சாரத்துக்கு நெஜமாவே ஏதாவது செய்வாங்க.. இங்க விழாவுல சினிமா பாட்டுக்கு மட்டும் டான்சாடர குழந்தைங்கள வளர்க்கற பெத்தவங்க வெளிநாட்டுல மட்டும் எப்படி பாரதியார் பாட்டும் பரதநாட்டியமும் சொல்லித்தந்து வளர்க்கறாங்கன்றது புரியாத புதிர்!

வருசாவருசம் நாடகம் போடறது புலம்பெயர்ந்த இலங்கைத்தமிழருங்க தான். சத்யன் என்பவன்தான் இதில் முன்னோடி அங்க. எங்க வயசுதான் அவனுக்கும். இந்தவருசத்துக்கும் நாடகம் போடறதுன்னு முடிவாச்சுங்க.. நாங்க இந்தியாவில இருந்தப்பவே ஒரு அக்மார்க் கலைகூத்தாடிங்கன்றதை எங்க முகத்தைவச்சே கண்டுபிடிச்சிட்டவங்க எங்களையும் நாடகம் போடறதுக்கு சேர்த்துகிட்டாங்க! அப்போ வந்தது அவங்களுக்கு வினை! எப்பவும் சீரியஸ் நாடகமா போட்டுகிட்டு இருந்தவங்க இந்த வருசமும் ஒரு விதவைப்பெண் சமுகத்துல எப்படியெல்லாம் அழைக்கழிக்கப்படுகிறாள் அப்படின்னு சீரியாசான தீமோட நாடகம் எழுத உங்கார்ந்தாங்க! எங்களுக்கு பகீருன்னு ஆயிடுச்சுங்க...நாங்க என்னைக்கு சீரியசா ஒரு வேலைய செஞ்சிருக்கோம்? போட்டா தமாசு நாடகம்தான் போடனும்னு ஒரு முடிவா நின்னு அவங்க மண்டையைக்கழுவி ஒப்புக்கவச்சோம். நாடகம் போட 20 நாள் இருந்தது. தினமும் ஆபீஸ் முடிஞ்சதும் நேரா யாராவது ஒரு வீட்டுல கூட்டம்போட்டு ரெகர்சல் நடக்கும். என்ன கூத்துன்னா தினமும் ஒரு காட்சி ஒரு வசனம் இருக்கும்.. அடுத்தநாளே அதை மனம் போன போக்கிலே மாத்தி நடிப்போம். தினமும் அதை சத்யன் மெனக்கெட்டு எழுதிவைப்பான். இப்படியே 10 நாளைக்கப்புறம் சத்யன் வெறுத்துப்போய் என்னமோ நடிச்சுத்தொலைங்கன்னு விட்டுட்டான். எல்லாம் எங்க ரிகர்சலை பார்த்து அவனுக்கு சிரிப்புவந்த நம்பிக்கைதான். சரியான கேசு கெடைக்காத ஒரு வக்கீலு ஒரு போலி டாக்டரா மாறி எப்படி மத்தவங்க உயிரை வாங்கறான்றதுதான் கரு. தினமும் ஒரு சீனை போட்டு சிறீலங்கன், மலையாளி, தமிழன், ஆப்ரிக்கன்னு அத்தனைபேரையும் ஒருத்தர் விடாம நக்கல் தோரணமாக்கி ஒரு வழியா நாடகம் ரெடியாச்சு.

இந்த 20 நாள்ல நிறைய இலங்கைத்தமிழருங்ககூட பழக்கமாச்சுங்க.. அவங்க பேசற தமிழை கேக்கறதே ஒரு அம்சமா இருக்கும். நாளாக நாளாக நிறைய கதைச்சோம். சத்யன் அவன் அம்மாவோடு இந்த நாட்டுக்கு வந்தது எப்படி? அவன் அண்ணன் கனடாவிலும் அக்கா குடும்பத்தோட ஆஸ்திரிரேலியாவிலும் ஏன் இருக்காங்க? அவன் அப்பா இலங்கையில் இறந்தது எப்படின்னு நிறைய பேசுனோம். அவங்க சோகமா அந்த நிகழ்சிகளை சொல்லும் போதும் எங்களுக்கு சில நிமிடத்துக்குமேல முகத்தை சீரியசா வச்சி கேட்க முடியாம மறுபடியும் நாடக சீனுக்கு வந்துடுவோம். சில சமயம் LTTE காசெட்டுகள் சிலதும் கொடுத்து பார்க்கச்சொல்லுவாங்க. அப்பவும் கூட எங்களுக்கு பெருசா ஒன்னும் உரைக்கலை. "நாமெல்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டு on-site வரோம்.. அனா இவங்களை பாருடா மாப்ள.. குடும்பத்டோட ஆளாளுக்கு ஒரு நாட்டுக்கு சும்மாவே வந்து செட்டிலாயிருக்காங்க.."ன்னு ஜோக்கடிச்சிருக்கோம். அந்த கேசட்டுகளை வேண்டாவெறுப்பா பார்த்துட்டு "நம்ப நாட்டுக்குல்ல வந்து ராஜீவ்காந்திய கொன்னுட்டு பெரிய நியாயம் பேசறாங்கன்னு.." எங்களுக்குள்ள வாதமும் செஞ்சிருக்கோம். ஆனா ஒவ்வொரு நாளும் காணாமல் போன அப்பாவை பிணமா கண்டெடுத்தது, சகோதரிங்களை தொலைத்துவிட்டு ஒவ்வொரு பிணவறையா தேடியது, ஓடியாடி வளர்ந்த ஊரைவிட்டு கையில் கிடைத்தவைகளுடன் அனுமதி கிடைத்த நாடுகளுக்கு அகதிகளாக போனது, படித்த பள்ளி, பக்கத்து வீட்டு நண்பர்கள், வளர்த்த ஜிம்மிக்கள், கட்டிய வீடுகள், வசித்த ஊர்கள் என அனைத்து அடையாளங்களையும் இழந்தது என ஒவ்வொரு கதைகளையும் கேக்கும் போதும் மெல்ல எங்கள் மனதில் எங்களையும் அறியாம ஒரு துக்கம் கூடுகட்டினாலும் அதை வெளிக்காட்டாம தமாசு பேசியே கடைசிவரை ஒப்பேத்திட்டோம்.

தமிழ்புத்தாண்டு தினமும் வந்தது. காலைல இருந்தே தமிழ் மன்றம் களைகட்டிருச்சி. சும்மா ஒரு 1500 பேரு குடும்பம் குட்டிகளோடு வந்து இறங்கிட்டாங்க.. அடப்பாவிகளா.. இந்த ஊருல நம்ப ஆளுங்க இத்தனைபேரான்னு ஷாக்காயிருச்சு. அப்பறம் தான் எங்க நாடகம் பத்தின பயம் மெல்ல தலையெடுத்தது. சரி.. கூட்டத்தை பார்த்து பயப்படக்கூடாதுன்னு மனசைதேத்திக்கிட்டு, என்ன ஆனாலும் பரவாயில்லை... நாம நினைச்சதை மேடையேத்தியே தீரதுன்னு ஒரு முடிவுக்கு வந்தோம். காலைல பாட்டுப்போட்டி, பேச்சுப்போட்டி, மாறுவேடப்போட்டின்னு குழந்தைங்களுக்கே நேரம் சரியாப்போச்சுங்க.. சாயந்தரமா பெரியவங்க பாடரது, வீணை வாசிக்கறது, கும்மிப்பாட்டுன்னு முடிஞ்சி கடைசியா எங்க நாடகம் வந்தது. ஒரு மணி நேரம் நாங்க அப்ப மனசுல என்னென்ன தோணுதோ அதையெல்லாம் கலந்துகட்டி அடிச்சுவிடறோம். ரிகர்சல் பண்ணதுக்கும் மேடைல நடக்கறதுக்கும் சம்பந்தமே இல்லை! கூட்டம் அதையும் கைதட்டி ரசிக்குது! சத்யன் முதல்ல மண்டைய பிச்சுக்கிட்டாலும் ஜனங்க கைதட்டலை பார்த்து அமைதியாகி ஒரு ஓரமா உட்கார்ந்து என்னதான் நடக்குதுன்னு பார்ப்பமேன்னு குந்திட்டான். சில சீன்ல நாங்க பண்றத பார்த்து எங்களுக்கே சிரிப்பு தாங்கல.. வந்தவங்க நாங்க பக்காவா நாடகம் எழுதி திறமையா நடிக்கறோம்ன்னு அப்படி ஒரு பாராட்டு!! குரங்கு சும்மாவே ஆடும்.. கள்ளையும் ஊத்துனா? அந்த நெலைல தான் இருந்தோம் அன்னைக்கு நாங்க... வரவங்க போறவங்க எல்லாம் கைய புடிச்சு பாராட்டுனா வேற எப்படி இருப்போம்? சத்யனுக்கும் ஒரே சந்தோசம்.

எல்லாம் முடிஞ்சு அடுத்த நாள் சத்யன் எங்களையெல்லாம் அவன் வீட்டுக்கு விருந்து தரேன்னு சாப்பிட கூட்டிகிட்டு போனான். நான், சுனில், பானி மூணு பேரும் கைய வீசிக்கிட்டு போனோம்...வாசலிலேயே அவன் அம்மா வந்து வரவேற்று கூட்டிகிட்டு போனாங்க.. எங்கள பத்தி அத்தனையும் சத்யன் அவங்கம்மா கிட்ட சொல்லியிருக்கான் போல. எங்க ஒவ்வொருத்தர் பேரையும் சொல்லி கூப்பிட்டு எங்க வீட்டுல நாட்டுல பத்தியெல்லாம் கேட்டாங்க.. ரொம்ப நல்லா சமைப்பாங்க போல... எங்களுக்காகவேன்னு நம்ப ஊரு ஸ்டைல்ல மிளகு ரசமும், பாயாசமும் செஞ்சிருந்தாங்க... இலங்கை முறைல ஆப்பமும் கோழிக்குழம்பும்... நல்லா ஒரு புடி புடிச்சோம். நேத்து நாடகம் ரொம்ப அருமையா இருந்ததுன்னும் ரொம்ப நாள் கழிச்சி மனம்விட்டு சிரிச்சதாவும் சொன்னாங்க... சுனிலோட அப்பாவுக்கு பைபாஸ் ஆபரேசன் ஆனதைப்பத்தி ரொம்ப அக்கறையா விசாரிச்சு முழு குணமடைய கதிர்காமம் முருகன் கிட்ட வேண்டிக்கிட்டதா சொன்னாங்க... என்னோட அக்காவுக்கு கல்யாணம் பாக்கறதையும் கேட்டு சீக்கிரம் அமையும்னாங்க.. என்னவோ தெரியலை.. மனசு ரொம்ப பாரமாகிடிச்சுங்க...

ச்சே.. என்ன மனுசங்க நாங்க? சொந்த நாட்டில் கணவனை தொலைத்துவிட்டு ஒரு மகனை கனடாவிலும், பெண்ணை ஆஸ்திரேலியாவிலும் விட்டுவிட்டு நாட்டோடு, இனத்தோடு இருந்த அனைத்து பிணைப்புகளையும் தொலைத்துவிட்டு எவ்வித எதிர்கால திட்டமும் உறுதியாக இல்லாம அகதியாக இருக்கும் நிலையிலேயே சுகங்களை மட்டுமே அனுபவிக்கும் எங்கள் மீது இத்தனை அக்கறையாவும் அன்போடவும் பரிவோடவும் பழகறாங்களே.. அவங்களுக்கு நாங்க எத்தனை அனுசரனையா இருந்திருக்கனும்? ஒவ்வொரு முறையும் நாங்க எங்க வீட்டைபத்தி பேசும் போதும் சத்யன் குடும்பத்தைப்பத்தி அக்கறையோட விசாரிச்சிருக்கனும்? எங்க சொந்த ஊரு புராணங்களைப்பத்தி கதைக்கும் போதெல்லாம் சத்யனின் கண்ணுல தெரிஞ்ச சோகத்தை உணர்ந்திருக்கனும்? துக்கத்தின் மீது குடியிருக்கும் ஒரு சகமனுசனுக்கு தோள்கொடுத்து ஒரு அன்பான வார்த்தைகூட பேசாம மண்ணு மாதிரி இருந்திருக்கோம்! எங்களை நினைக்கறப்போ ஒரே அவமானமா இருந்தாலும் அவங்க துக்கம் ஒவ்வொன்னா மனசுல மறுபடி வர அதை பத்தி பேசிக்கிட்டே இறுகிப்போன முகத்தோட வீடுவந்து சேர்ந்தோம்!

ஒருவேளை சோறு நம்மை உணர்வுபூர்வமாக ஒரு குடும்பத்துடன் ஒட்டவச்சிருதுங்க. ஒரு உண்மையான விருந்தோம்பல் ஒரு இறுக்கமான பிணைப்பையே உண்டாக்குதுபோல. ஒரு வீட்டுல கையநனைக்கறதுக்கு நம்ப ஊருல ஏன் எத்தனை முக்கியத்துவம் குடுக்கறாங்கன்னு அப்போது தான் தெரிந்தது. மனசு முழுக்க சோகமும், வெட்கமும், இனம் புரியாத விரக்தியும்னு ஒரு கலவையான மனநிலைல வீடுவந்து சேர்ந்தோம். ஆளுக்கு ஒரு பீர்கேனை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு மூலையில் சாஞ்சோம்.. சுனில் தான் முதல்ல ஆரம்பிச்சான்.. "மாப்ள... இப்போ அவங்களுக்கு சொந்த ஊருன்னே ஒன்னும் கிடையாதுடா...!!" ன்னு தொடங்கி என்னென்னவோ சொல்லி அழ ஆரம்பித்தோம்... அன்னைக்கு லைட்டா மப்புல இருந்ததும் நெஜம்! மனசு விட்டு அழுததும் நெஜம்!!

இப்பவும் சத்யன் அங்கே தான் இருக்கிறான். நான் அங்கிருந்து வந்து 4 வருசத்துக்குமேல ஆகிட்டாலும் இன்னைக்கும் சத்யனோட அம்மாவை மறக்கமுடியலை. போன வருசம் அவன் அண்ணா கனடாவில் இருந்து வந்திருந்ததாவும் அம்மாவை கனடாவில் இருக்க கூட்டிக்கொண்டு போனதாகவும் சொன்னான். என்னைக்காவது ஒருநாள் எல்லாரும் பிரச்சனையில்லாத இலங்கைல கண்டிப்பா செட்டிலாவோம்னு சொன்னது மனசுக்கு நெகிழ்சியாதான் இருந்தது...

ம்ம்ம்... அந்த என்னைக்காவது ஒரு நாள் நானும் கண்டிப்பா குடும்பத்தோட இலங்கை போய் சத்யன் வீட்டுல மறுபடியும் அவங்க அம்மா கையால செஞ்ச ஆப்பமும் கோழிக்கறியும் ஒரு புடி புடிக்கனும்...

கருத்துகள்

  1. // "மாப்ள... இப்போ அவங்களுக்கு சொந்த ஊருன்னே ஒன்னும் கிடையாதுடா...!!" //

    முகத்திலறையும் நிஜம்... விரைவில் அமைதி திரும்பட்டும்.

    பதிலளிநீக்கு
  2. மீண்டும் ஒரு அற்புதமான பதிவு..நீங்க வெறும் ஸ்டார் இல்ல .சூப்பர் ஸ்டார் !

    இதே போன்று கம்போடியாவில் இலங்கைத்தமிழர்களோடு பழகியது நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
  3. அருமையான நடை. ஒவ்வொரு பதிவும் சூப்பர்.
    ஏன் இத்தனைநாளா எழுதலே?

    நட்சத்திரமா ஆனா எழுதணுமுன்னு சேர்த்துவச்சிருந்தீங்களா?

    என்றும் அன்புடன்,
    துளசி.

    பதிலளிநீக்கு
  4. நிறைய மனிதர்களைச் சந்திச்சிருக்கிறீங்க. சத்யன் அம்மா மாதிரி நிறையப் பேர் எம்மத்தியில்! அவர்களை நாம்தான் "காண்பதில்லை"

    பதிலளிநீக்கு
  5. #########################################
    இளவஞ்சி,
    ஈழத்தமிழ்களைப் பற்றி பேசுவதே குற்றம் என்பது போன்ற சூழலில்(ராஜிவ் படுகொலைக்கு பின்) அவர்களின் வலியை தமிழகத் தமிழர்கள் உணர்வது சற்று கடினம்தான். உங்களின் இந்தப் பதிவு சற்றேனும் மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புவோம்.
    ######################################

    பதிலளிநீக்கு
  6. துளசி,

    அப்படியெல்லாம் இல்லைங்க.. நெஜமாவே அலுவலக வேலைகள் கொஞ்சம் அதிகம்..(நம்பவா போறீங்க? :) )

    முகமூடி, ஜோ, துளசி, ஷ்ரேயா, சங்கரைய்யா...

    உங்கள் கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  7. இளவஞ்சி, உண்மையிலேயே மிகவும் ரசித்துப் படித்த பதிவுகளில் இதுவும் ஒன்று.

    உண்மை உணரும் வரை.

    இலங்கைத் தமிழர் பிரச்சனை தீரும் நாள் விரைவில் வரவேண்டும் என்று நான் ஆண்டவனை மண்டியிட்டுக் கேட்டுக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. பாண்டி,

    இது உங்களுக்கே அடுக்குமா? ஏற்கனவே ஆபீசுலயும் வீட்டுலயும் எப்பப்பாரு மடிக்கணினிய வச்சிகிட்டு இருக்கறதை பார்த்துட்டு இவனுக்கு ஏதோ ஆகிடிச்சுன்னு பயந்துபோய் இருக்காங்க! ஒரு மாசம்னா முடிவே கட்டிருவாங்க :)

    ராகவன்,

    உங்கள் ஊக்கங்களுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  9. very very nice one. it's really touching one. i am feeling very sorry for not doing anything to our fellow tamils suffering in 'eelam'. really you are great

    பதிலளிநீக்கு
  10. very very nice one. it's really touching one. i am feeling very sorry for not doing anything to our fellow tamils suffering in 'eelam'. really you are great

    பதிலளிநீக்கு
  11. very very nice one. it's really touching one. i am feeling very sorry for not doing anything to our fellow tamils suffering in 'eelam'. really you are great

    பதிலளிநீக்கு
  12. very very nice one. it's really touching one. i am feeling very sorry for not doing anything to our fellow tamils suffering in 'eelam'. really you are great

    பதிலளிநீக்கு
  13. very very nice one. it's really touching one. i am feeling very sorry for not doing anything to our fellow tamils suffering in 'eelam'. really you are great

    பதிலளிநீக்கு
  14. very very nice one. it's really touching one. i am feeling very sorry for not doing anything to our fellow tamils suffering in 'eelam'. really you are great

    பதிலளிநீக்கு
  15. very very nice one. it's really touching one. i am feeling very sorry for not doing anything to our fellow tamils suffering in 'eelam'. really you are great

    பதிலளிநீக்கு
  16. மீண்டும் ஒரு நல்ல பதிவு! எனக்கும் துளசிக்காவின் சந்தேகம் வருது! :-)

    பாண்டி சொன்னதை நான் வழிமொழியறேன்!!

    பதிலளிநீக்கு
  17. நல்ல பதிவு,

    நட்சத்திரமாகவே உங்கள் பதிவுகளும்.

    பதிலளிநீக்கு
  18. Hello,
    after going through your article, i dint feel hungry in night,am not going to eat
    my heart is full of heavy feelings.

    oh god

    really nice one!! no more words to say.
    raghs

    பதிலளிநீக்கு
  19. வாத்தியாரே அருமையான பதிவு..

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு