முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஓடிப்போனவளின் வீடு

Image hosted by Photobucket.com



அனிச்சையாய் திரும்பும் தலைகளின்
கீழ்வெட்டுப்பார்வைகள் சிதறிக்கிடக்கின்றன
அவ்வீட்டின் முற்றத்தில்

தெருவையடைத்து அவள் போட்டுச்சென்ற
கோலம் மிதிபட்டு சிதைந்து
வெறும் வண்ணத்தீற்றலாய்

பறிக்கப்படாத ஜாதிமல்லி
தரையில் உதிர்ந்து இன்னும்
மணம் பரப்பிக்கொண்டு
இருக்கிறது

இதுவரை இருந்த உறவுகள் மறந்து
தராதரங்கள் அலசப்படுகின்றன
தெருமுழுதும்

இரவில் கேட்கும் கேவல்கள்
சோகத்தை மீறிய அவமானத்தை
விழுங்க முயன்ற தோல்விகளை
ரகசியமாய் அறிவிக்கின்றன

எதிரியின் இழவுக்கும் துக்கம் கேட்கலாம்
வெறிச்சிடும் வீட்டில் பசித்த ஜிம்மியின்
ஊளைச்சத்தம் மட்டுமே

அவள் விட்டுச்சென்ற புடவைகளும்
பாட புத்தகங்களும் அங்கு
எதை உணர்த்தும் இனி?

நம்பத்தான் மறுக்கிறது மனது
எவனோ ஒரு பொறம்போக்கு
அந்த அழகுதேவதையை இன்னேரம்
அனுபவித்துக்கொண்டிருப்பான்
என்பதை

கருத்துகள்

  1. ஆகா! கெளம்பிட்டாங்கைய்யா!கெளம்பிட்டாங்க!
    என்னாச்சு இளவஞ்சி....ரொம்ப feel பண்ணி இருக்கீங்க!

    பதிலளிநீக்கு
  2. இளவஞ்சி!
    அந்த ஜிம்மியை மறக்க மாட்டீர்கள் போலுள்ளதே. ஆனால் இது நான் மறந்து விட விரும்பும் ஒன்றை எனக்கு திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்திக் கொண்டேயிருக்கிறது. சிலவேளை இன்னொரு பதிவு பிறக்கலாம் இந்த ஜிம்மியை வைத்து.

    பதிலளிநீக்கு
  3. அண்ணே, பட்டைய கிளப்புறீங்களண்ணே... கலக்கல்...

    வசந்தன் கேட்ட அதே கேள்வி... ஜிம்மிய விடமாட்டீங்களா?

    பதிலளிநீக்கு
  4. மணி, Feeling எல்லாம் இல்லை. ஓடிப்போன ஒரு பெண்ணின் பக்கத்துவீட்டில் இருக்கும் ஒரு வயசுப்பையனின் மனநிலையில் இதை எழுதினேன்.

    வசந்தன்: மறக்ககூடியதா ஜிம்மிக்கும் எனக்கும் உள்ள பாசப்பிணைப்பு? :) மறக்காம ஜிம்மி பற்றிய உங்க பதிவையும் போடுங்க...

    விஜய்:என்ன செய்வது? எங்க வீட்டுல இதுவரை இருந்த, இருக்கும் 4 பைரவர்களுக்குமே ஜிம்மினுதான் பேரு! அதனாலெ இது ஆகுபெயராகவே ஆகிடுச்சி :)

    உங்கள் கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  5. எல்லாம் நல்லாத்தான் இருக்கு
    ஆனா அந்த கடைசி ரெண்டு வரி
    கொஞ்சம் கவிதையோட அழக கெடுக்குது.
    மத்தபடி சூப்பர் கண்ணா சூப்பர்

    பதிலளிநீக்கு
  6. இளவஞ்சி!
    நீங்கள் கேட்டபடி ஜிம்மி புராணத்த என்ர பதிவில போட்டிட்டன்.

    பதிலளிநீக்கு
  7. அவள் விட்டுச்சென்ற புடவைகளும்
    பாட புத்தகங்களும் அங்கு
    எதை உணர்த்தும் இனி?


    இந்த வரிகளை ரொம்ப ரசித்தேன்.

    (இந்த வரிகளுடன் கவிதை முடிந்திருந்தால் இன்னும் அழகாய் இருந்திருக்குமோ என்று ஒரு சின்ன எண்ணம்).

    பதிலளிநீக்கு
  8. கவிதையில் வரும் பக்கத்து வீட்டுப் பையன் அந்தப் பெண்ணின் வீட்டாருக்காகப் பரிதாபப்படுகிறாரா இல்லை பெண் தனக்கு கிடைக்கவில்லை என்று குமைகிறாரா?

    //நம்பத்தான் மறுக்கிறது மனது
    எவனோ ஒரு பொறம்போக்கு
    அந்த அழகுதேவதையை இன்னேரம்
    அனுபவித்துக்கொண்டிருப்பான்
    என்பதை//

    பொறம்போக்கு, அனுபவித்துக் கொண்டிருப்பான் என்ற சொற்கள் மட்ட ரசனையை வெளிப்படுத்துவதாய் இருக்கிறது. அந்தப் பெண் விரும்பியவனுடன் தானே போயிருப்பா? அந்தப் பெண்ணின் மன நிலையில் இருந்து யோசித்துப் பார்த்தால் புரியும்

    பதிலளிநீக்கு
  9. நல்ல கவிதையை கடைசி நான்கு வரிகள் சற்று தொய்வடையச் செய்து விட்டது. பக்கத்து வீட்டுக்காரனின் மனோபாவத்தோடு ஆரம்பிக்கப் பட்ட கவிதை லெட்டர் கொடுத்து நிராகரிக்கப் பட்ட ஒரு விடலைப் பயனின் புலம்பலோடு முடிகிறது.

    நண்பரே கோபித்துக் கொள்ள வேண்டாம். //அவள் விட்டுச்சென்ற புடவைகளும்
    பாட புத்தகங்களும் அங்கு
    எதை உணர்த்தும் இனி?//
    இதோடு கவிதையை நிறுத்தியிருந்தால் கவிதை பெரிய்ய்ய பெரிய்ய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கும்.

    பதிலளிநீக்கு
  10. ரவிசங்கர்,

    // கவிதையில் வரும் பக்கத்து வீட்டுப் பையன் அந்தப் பெண்ணின் வீட்டாருக்காகப் பரிதாபப்படுகிறாரா இல்லை பெண் தனக்கு கிடைக்கவில்லை என்று குமைகிறாரா? //

    உங்களுக்கு எப்படி தோன்றுகிறது? :)

    Manki, Nanda,

    வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி!

    கவிதை என்று எதையாவது எழுதிவிட்டு வாய்ப்புக் கிடைக்கும்போது அதை விலாவரியாக விளக்கிச்சொல்ல நான் என்றைக்குமே கூச்சப்பட்டது கிடையாது. ஆனால், இந்த பதிவிக்கு அப்படிச்செய்ய ஏனோ தோன்றவில்லை. அப்படியே இருந்துவிட்டு போகட்டுமே!

    மனதில் மகிழ்ச்சி, சோகம், கோபம், வெறுப்பு என எதை ஏற்படுத்தினாலும் எனக்கு OK! :)))

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு